எட்டுத்தொகையில் ஐவகை நிலத்தெய்வங்கள்
கு. வளர்மதி
முன்னுரை
சங்ககால மக்கள் இயற்கையைத் தெய்வமாக மதித்து, ‘இயற்கை வழிபாடு’ செய்தனர். நிலத்தெய்வ வழிபாடுகள் செய்து இறைச்சிந்தனைகளோடு கூடிய நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தனர். இறைநம்பிக்கை தொடர்பான பழக்க வழக்கங்களை மேற்கொண்டிருந்தனர். ‘கடவுள்’ என்ற சொல்லாட்சி சங்கநூல்களுள் மிகுதியாகக் காணப்படுகின்றது. இறைச்சிந்தனை என்று பார்க்கும்போது, ‘கடவுள் வாழ்த்து’ என்ற பாடல் இல்லாமல் எந்த நூலும் இல்லை. மன்னனை வாழ்த்தும் போதும் மற்ற சமயங்களிலும் இறைவனை நினைத்து வாழ்த்தும் தன்மை, வாழ்வில் இடைவிடாத இறைச்சிந்தனைக்கு உட்பட்டே மாந்தர் வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றது. எட்டுத்தொகையில் ஐவகை நிலத்தெய்வங்களை இனங்காணுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
நில அமைப்பும் தெய்வமும்
குறிஞ்சி - முருகன்
மலையும் மலை சார்ந்த பகுதியும் ‘குறிஞ்சி’ ஆகும். குறிஞ்சி நில மக்கள் முருகனுக்குப் பலி கொடுத்து வழிபட்டுள்ளனர். தலைவிக்கு உண்டான நோயின் காரணத்தை அறியாத தாய், கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்கிறாள். ‘முருகு’ வருத்தியதால் நோய் ஏற்பட்டதாக கட்டுவிச்சி கூற, முருக வழிபாடு நடத்தும் வேலனை அழைத்து முருகனின் சினம் தணிய வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. அப்போது வேலன் ஆட்டுக்குட்டியின் கழுத்தை அறுத்து தினை அரிசியை அதில் கலந்து பலவகை இசைக்கருவிகள் ஒலிப்ப முருகனுக்குப் படைக்கின்றான். இதனை குறுந்தொகை,
“மறிக்குர லறுத்துத் தினைப்பரப் பிரீஇச்
செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்க
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்தி” (1)
என்றும்,
“முருகயர்ந்து வந்து முதுவாய் வேல
கினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வேறு றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவ ணறுநுதனீவி வணங்கினை” (2)
என்றும் குறிப்பிடுவதனால் அறிய முடிகின்றது.
முருகனின் கோயில் பற்றி புறநானூறு,
“அணங்குடை முருகன் கோட்டத்து” (3)
என்று எடுத்துரைக்கின்றது.
முருகனின் திருச்சீரலைவாய் கோயில் பற்றி அகநானூறு,
“திருமணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சே எயொடு” (4)
என்று குறிப்பிடுகின்றது.
முருகன் வீற்றிருக்கும் திருச்சீரலைவாய்கோயில் கடல்அலையின் அருகில் உள்ளது என்பதை,
“... ... ... ... ... தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேல்... ... ... ... ...” (5)
என்று புறநானூறு கூறுகின்றது. முருகன் ‘கொற்றவைச் சிறுவன்’ என்றும் குறிப்பிடப்படுகின்றான். வெறியாட்டு மற்றும் வழிபாட்டில் கடவுளுக்குப் பலியிட்ட செய்தி பற்றி அகப்பாடல்கள்;
“பலிபெறு கடவுட் பேணி” (6)
“நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து
உகுபலி அருந்திய தொகுகருங் காக்கை” (7)
“மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித்
தேம்பலிச் செய்த” (8)
என்று குறிப்பிட்டுள்ளன. இதனால், பழந்தமிழரின் வழிபாட்டு முறையில் பலியிடுதல் வழக்கம் முக்கிய இடம் பெற்றுள்ளதை அறிய முடிகிறது.
“உடையும் ஒலியலும் செய்யை மற்றாங்கே
விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி” (9)
இப்பாடலில், முருகனின் முகம் கதிர் விhpயும் இளஞாயிற்றைப் போன்றிருக்கும் என்று முருகனின் முகம் வர்ணிக்கப்பட்டுள்ளது.
“முருகன் அன்ன சீற்றத்தக்க கடுந்திறல் எந்தை” (10)
இதில், முருகன் வீரம் நிறைந்த போர்க்கடவுளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.
முல்லை - திருமால்
காடும் காடு சார்ந்த பகுதியும் ‘முல்லை’ ஆகும். முல்லை நிலத்தெய்வம் ‘திருமால்’ ஆவார். திருமால் பன்றியுருவம் கொண்டு, தன்கோட்டினால் உலகினை ஊழி வெள்ளத்திலிருந்து காத்தார். இதனை,
“ஊழியாழிக்கண் இருநில முருகெழு
கேழலாய் மருப்பி னுழுதோய்” (11)
என்ற பரிபாடல் வழி அறிய முடிகிறது. திருமால் எங்கும் நீக்கமற நிறைந்தவர் என்பதை,
“தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ, சொல்லினுள் வாய்மை நீ
... ... ... ... ... அனைத்தினுள் பொருளும் நீ” (12)
திருமாலின் பெருமைகளை,
“மாநிலஞ் சேவடியாகத் தூநீர்
தீதற விளங்கிய திகிரியோனே” (13)
என்று நற்றிணை விளக்கியுள்ளது. இடையர் குலத்தில் பிறந்த கண்ணன், வடக்கே உள்ள யமுனை ஆற்றங்கரையின் துறையில் நீராடிய ஆயர் மகளிர் தழையுடை உடுத்த விரும்பியபோது குருந்த மரத்தை வளைத்துக் கொடுத்தான் என்ற செய்தியைப் புலவர் மருதன் இளநாகனார்,
“... ... ... ... ... வடாஅது
வண்புனற் றெழுநை வார்மண லகன்றுறை
யண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல் போல” (14)
என்று அகநானூற்றில் குறிப்பிட்டுள்ளார்.
திருமால் நீலமணி போன்ற திருமேனியை உடையவன். கருடக்கொடியைத் தனது வாகனமாகக் கொண்டவன். ஆழி என்ற சக்கரத்தைத் தனது கரங்களில் ஏந்தியிருப்பவன். ஆலமரத்தில் குடிகொண்டிருப்பவன் என்பதைப் புறநானூறு,
“மண்ணுறு திருமேனி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய்யன்” (15)
“நீனிற வுருவி னேமியோன், ஆலமர் கடவுள்” (16)
என்று குறிப்பிட்டுள்ளது.
“வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ் குரற் றுழாஅய்
அலங்கற் செல்வன்” (17)
என்று பதிற்றுப்பத்தில், திருமகள், திருமாலின் மார்பில் உறைந்திருப்பவள், திருமாலின் திருவடிகளை மக்கள் வணங்கினர் என்றும் திருமாலைப் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. திருமால் வழிபாடு பற்றியும், அவனது அவதாரங்கள் பற்றியும் பரிபாடல் பலநிலைகளில் எடுத்துரைக்கின்றது.
மருதம் - இந்திரன்
வயலும் வயல் சார்ந்த பகுதியும் ‘மருதம்’ ஆகும். மருத நிலத்தின் கடவுள் ‘இந்திரன்’ ஆவார். வச்சிராயுதத்தை உடைய இந்திரனுக்குக் கோயில் கட்டினர் என்பதைப் புறநானூறு,
“வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்” (18)
என்று தெரிவிக்கின்றது.
“இந்திர விழாவிற்கு பூவினன்ன” (19)
என்று ஐங்குறுநூறு இந்திரனுக்கு விழா எடுக்கப்பட்ட நிகழ்வு பற்றி கூறுகின்றது.
நெய்தல் - வருணன்
கடலும் கடல் சார்ந்த பகுதியும் ‘நெய்தல்’ ஆகும். இங்கு வழிபடுதெய்வம் ‘வருணன்’ ஆவார். நெய்தல் நில மக்களான பரதவர்கள், சுறா மீனின் கொம்பைக் கடற்கரை மணலில் நட்டு வழிபாடு செய்தனர். நெய்தல் நில மக்கள் கடலில் மீன் பிடித்தும், உப்பு விளைவித்தும், முத்தும், பவளமும் குளித்தும், நீர் வாணிகம் செய்தும், கடலிலேயே வாழ்ந்ததனால், கடல் தெய்வ வழிபாடு கொண்டு வாழ்ந்தனர்.
“பெருங்கடற் தெய்வம் நீர்நோக்கித் தெளித்து
அருந்துயர் நீக்கவேண் போல் மன்” (20)
என்று கலித்தொகை, நீரை உடைய பெரிய கடலினைத் தெய்வமாக மக்கள் வழிபட்ட செய்தியினைக் கூறுகின்றது.
பாலை - கொற்றவை
மணலும் மணல் சார்ந்த பகுதியும் ‘பாலை’ ஆகும். இங்கு, வழிபடு தெய்வம் ‘கொற்றவை’ ஆகும். கொற்றவை என்ற சொல்லுக்கு ‘வெற்றி’ என்பது பொருளாகும். போரில் வெற்றி பெற வீரர்கள் கொற்றவைக்கு உயிர்ப்பலியும், குருதிப்பலியும் இட்டு வணங்கினர். இதனை,
“ஓங்குபுகழ் கானமர் செல்வி அருளலின்” (21)
என்ற அகநானூற்றுப் பாடலின் வழி அறிய முடிகின்றது.
“விடர் முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாம்” (22)
என்று குறுந்தொகை, கொற்றவைக்குப் பலியிட்ட செய்தியைக் கூறுகின்றது.
“உருகெழு மரபி னயிரை பரவியும்” (23)
“... ... ... ... ... அஞ்சு வரு மரபிற்
கடவுளயிரையி னிலைஇ” (24)
என்று பதிற்றுப்பத்து, அயிரை என்னும் மலையில் குடிகொண்டிருக்கும் கொற்றவை, சேரரால் வழிபாடு செய்யப்பட்டமையை குறிப்பிடுகின்றது.
முடிவுரை
சங்ககாலத் தமிழரின் வாழ்வியலில் ‘கடவுள் வழிபாடு’ முக்கிய இடம்பெற்றுள்ளது. வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்ப நிகழ்வுகள் தெய்வத்தாலேயே உண்டானது என மக்கள் நம்பினர். எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம் பற்றிய அமைப்பினை உடையதாக இருந்தாலும், இடையறாத இறைச்சிந்தனைக்கு உட்பட்டே சமுதாயம் வாழ்ந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. முருக வழிபாட்டில் பலியிடும் வழக்கம் முக்கிய இடம்பெற்றுள்ளது. ஐவகைச் சமுதாய மக்களும் தமக்கென தனித்தனியான கடவுளர்களை வழிபட்டுள்ளனர். முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை போன்ற தெய்வங்கள் பழந்தமிழரின் இறைச்சிந்தனையை அன்றாடம் வளர்த்து வந்தமைக்குச் சான்றுகளாகும். பிற்காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியங்களுக்கு அடித்தளமாக ‘சங்கஇலக்கிய இறைச்சிந்தனைகள்’ அமைந்தன என்று கூற முடியும். சமயத்தோற்றமும் பூசலும் இருக்கவில்லை என்பதை எட்டுத்தொகை வழி அறிய முடிகின்றது. எட்டுத்தொகையில் கடவுள்வாழ்த்து முதலாக முழுக்க முழுக்க இறைச்சிந்தனைகள் நிரம்பியுள்ளன.
அடிக்குறிப்புகள்
1. குறுந் - 263
2. குறுந். - 362
3. புறம் - 299
4. அகம் - 266
5. புறம் - 55
6. நற் - 251
7. நற் - 343
8. ஐங் - 259
9. பரி - 19
10. அகம் - 158
11. பரி - 3
12. நற் - 5
13. அகம் - 59
14. புறம் - 56
15. புறம் - 198
16. பதிற்று - 31
17. புறம் - 241
18. ஐங் - 62
19. கலி - 131
20. அகம் - 345
21. குறுந் - 218
22. பதிற்று - 90
23. பதிற்று - 79
24. புறம் - 6
துணைநூல்பட்டியல்
1. வீரா. அழகிரிசாமி, தமிழக வரலாற்றில் சமயப்பூசல்கள், காந்தி மீடியா சென்டர், மதுரை - 2.
2. மயிலை சீனி வேங்கடசாமி, சங்ககால வரலாறு ஆய்வுகள், சென்னை - 88.
3. பொ.வே. சோமசுந்தரனார் (உரை), ஐங்குறுநூறு, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்பகம், சென்னை - 1.
4. உ.வே.சாமிநாதயரவர்கள், குறுந்தொகை மூலமும் உரையும்
5. பின்னத்தூர் நாராயணசாமிப் பிள்ளை, நற்றிணை, கழக வெளியீடு.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.