பாண் மகளிர்
ச. பாலசுப்பிரமணியன்
இலக்கியம் என்பது சமூகத்தின் விளைச்சல் ஆகும். இலக்கியம் அந்தந்தக் காலச் சமூகத்தையும் அதன் பண்பாட்டையும் உள்ளீடாகக் கொண்டுள்ளது. சங்க இலக்கியத்தின் வழி, பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு மரபினை நுட்பமாக ஆராயும் போது, அவ்விலக்கியத்தின் சிறப்பையும் பயனையும் மேலும் சிறப்பாக உணர முடியும். அந்த வகையில் பாணர் சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். அகத்துறையானாலும் புறத்துறையானாலும் பாணரின் செயல்பாடு இன்றி எதுவும் இல்லை என்ற நிலையை அவர்கள் உருவாக்கியிருந்தனர். பாணர் சமூகத்தைச் சார்ந்த மகளிரும் இத்துறையில் சிறந்து இயங்கியுள்ளனர். பாணர்களில் ஆடவரைச் “சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைகாரர், பாணரென்ப” எனப் பிங்கல நிகண்டும், பாணர்களின் பெண்டிரைப் “பாடினி, விறலி, பாட்டி, மதங்கி, பாடல் மகடூஉ பாண்மகள்” எனத் திவாகரமும் குறிப்பிடுகின்றன. அவர்களில் குறிப்பாக;
1. பாடினி
2. விறலி
3. கட்டுவிச்சி
4. அகவன் மகளிர்
போன்றோரின் பங்கு அகத்துறையிலும் புறத்துறையிலும் குறிப்பிடத்தக்கது.
1. பாடினி
பாண் சமூகத்தில் பெண்டிர்கள் பாடினி, விறலி, பாட்டி, மதங்கி, பாடல் மகடூஉ, பாண்மகள் எனப் பலவாறு அழைக்கப்பெற்றனர். பாணர் கூட்டத்தில் பெண்கள் ‘பாடினி’ எனப்பட்டனர். பாணர்களைப் போல இவர்களும் பாடும் திறம் பெற்றிருந்தனர். மதுரைக் காஞசியில் ‘பாட்டியர்’ என்றும் பதிற்பத்தில் ‘பாடுமகள்’ என்றும் இவர்கள் கூறப்பட்டுள்ளனனர்.
“பாணர் வருக! பாட்டியர் வருக!”(மது.காஞ்சி. 749)
“ஆடுநடை அண்ணனிற் பாடுமகள் காணியர்” (பதிற்று.44)
“பாட்டியர், பாடமகள் என்போர் படினியே” என்று கைலாசபதி கூறுகிறார். பாடினியர் விறலியரைவிட இனிய குரலெடுத்துப் பாடுவதிலும் படைப்பதிலும் வல்லவர்களாக இவர்கள் இருந்துள்ளனர். புறநானூற்றில் இடம்பெற்றுள்ள ஔவையார் பாடினியே ஆவார். அவருடைய புறப்பாடலான
“சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!
... ... ... ... ...
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!” (புறம். 235)
என்ற பாடல் அடிகள்கள் இத்தன்மையை நன்கு புலப்படுத்துகின்றன.
1.1. பாடினிதூது செல்லுதல்
பாண்குடியைச் சார்ந்தவரான ஔவையார் அதியமான் பொருட்டு தொண்டைமானிடம் தூதாகச் சென்ற செய்தி புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. தொண்டைமான் தன்படைப் பெருமையினைத் தூதுவந்த ஔவையாரிடம் காட்டினான். அப்படைக் கருவிகளைக் கண்ட ஔவையார் இவை பீலி அணியப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, அழகுபடச் செய்யப்பட்ட வலிய காம்பை உடையனவாய், நெய் பூசப்பட்டுக் காவலை உடைய கோயிலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியனின் கருவிகளோ பகைவரைக் குத்தியதால் கங்கும் நுனியும் முரிந்து கொல்லனது ‘பணிக்களரி’யில் எந்நாளும் கிடக்கின்றன. எம்தலைவனாகிய அதியமான் வறியவர்களின் சுற்றத்திற்குத் தலைவன் (இல்லோர் ஒக்கல் தலைவன்). செல்வமுள்ள போது அனைவர்க்கும் உணவு படைத்து, இல்லையாயின் உள்ளதனைப் பலரொடு கூட உண்ணும் பண்பாளன் என நயம்படப் பேசி தொண்டைமானைச் சிந்திக்கத் தூண்டி நிகழவிருந்த போரினைக் கைவிடச் செய்தார். இந்நிகழ்வினை,
“இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
... ... ... ... ...
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே.” (புறம். 95)
என்ற புறப்பாடல் எடுத்தோதுகிறது. இவ்வாறு பாணர் சமூகத்தைச் சார்ந்த பாடினி (ஔவையார்) தூது சென்ற நிகழ்வைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
2. விறலியர்
விறலியர் ஆடுதல், பாடுதல், கிணை கொட்டுதல், தாளமிடல், வேடமிட்டு ஆடுதல், மெய்ப்பாடு தோன்ற நடித்தல், பாட்டியற்றிப் பாடுதல் போன்ற பலத்திறமைகளைக் கொண்டவர்களாகத் திழ்ந்துள்ளனர். சங்ககாலத்திலேயே விறலி என்பார்கள் பாடினி எனும் கலைஞர்களிடமிருந்து வேறுபட்டிருந்ததைக் காணமுடிகிறது. தொல்காப்பியர் கற்பியலில் பாடினி, விறலி இருவரும் தனித் தனியானவர்கள் எனக் கூறியுள்ளார். விறலியர் பாடுவதோடு ஆடுவதிலும் திறன் பெற்றிருந்தனர். சமூகப் படிநிலையில் பாடினி, விறலி இருவரும் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருந்தமை சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. விறலியர் ‘பாண்மகள்’ என்றும் அழைக்கப்பட்டனர்.
“செல்லா மோதில் பாண்மகள்” (பதிற்று. 60)
என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.
விறலியர் முழவு, யாழ், தூம்பு, எல்லரி, ஆகுளி, பதலை முதலான அனைத்து இசைக் கருவிகளையும் இசைக்க வல்ல ஆற்றல் படைத்தவர்கள் என்பதை
“வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,
... ... ... ... ...
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,
ஓரி கொலோ?அல்லன்கொல்லோ?
பாடுவல், விறலி!” (புறம். 152)
என்ற புறப்பாடல் மூலம் அறியலாம்.
கூத்தார், பொருநர் ஆகியோரின் பெண்பால் மக்களே விறலியர் எனப்பட்டனர். தடாரிப் பறை, முழவு ஆகியவற்றின் இசைக்கேற்ப விறலியர் ஆடியதையும் கதை தழுவிய ‘நாடகம்’ ஆடுவதிலும் வல்லவர்களாக இருந்ததை
“புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்” (பெரும்பாண்.109-110)
“நாடகமகளிர் ஆடுகளத்து எடுத்த
விசிவீங்கு இன்னியங் கடுப்பக் கயிறுபிணித்து” (பெரும்பாண்.55-56)
எனும் பெரும்பாணாற்றுப்படை அடிகள் வழி அறிகிறோம். விறலியர் நல்ல நடன மங்கையராக விளங்கியுள்ளனர். அவர்கள் இசை, இலக்கணத்துடன் பாடும் திறனையும், அதற்கிணங்க ஆடும் திறனையும் ஒருங்கே பெற்றவர்கள் என்பதை
“ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்” (பதிற்று. 58)
“ஒருதிறம் பாடல் நல் விறலியர் ஒல்குடி நுடங்க” (பரி. 17)
எனும் பாடல் அடிகளின் மூலம் தெளியலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விறலியர் பிழையறப் பாடவும், ஆடவும் வல்லவர்களாய் இருந்த அதே நேரத்தில், யாழ் இசைப்பதிலும் திறன் படைத்தவர்களாய் இருந்தனர் என்பதை
“சுகிர் நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தல்நும் விறலியர்” (புறம். 109)
என்ற புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன.
மேலும், போரில் மன்னன் வெற்றி பெற்று வீதி உலா வருகையில் அவனது தேரின் பின்பு விறலியர் குரவைக் கூத்தாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை
“வஞ்சமில் கோலானை வாழ்த்தி வயவரும்
அஞ்சொல் விறலியரு மாடுபவே வெஞ்சமரில்
குன்றேர் மழகளிறுங் கூந்தற் பிடியும்போற்
பின்றேர்க் குரவை பிணைந்து” (புற.வெண்பா.162)
என்ற புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.
3. கட்டுவிச்சி
கட்டுப் பார்த்தல் என்பது தொடக்கக் காலத்தில் அகத்துறைக்குரியதாக இருந்தது. இக்காலத்தில் புறத்துறைக்குரியதாக மாறிவிட்டது. கட்டுப் பார்த்தல் தொழிலைக் கட்டுவிச்சி என்னும் பாணர் குலத்தைச் சார்ந்த பெண்களே அக்காலத்தில் மேற்கொண்டுள்ளனர். பண்டைக் காலத்தில், நற்றாய், தலைவியினுடைய காம நோயைத் தீர்க்கவும், தலைவியின் வேறுபாட்டை ஆராயும் பொருட்டும் கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கட்டுப் பார்க்கும் வழக்கத்தினைத் தொல்காப்பியம்,
“அவள் விலங்குறினும்; களம் பெறக் காட்டினும்;
பிறன் வரைவு ஆயினும்; அவன் வரைவு மறுப்பினும்;
முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப்
புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்”(தொல்.களவி. 24)
என்று கூறுகிறது.
அதாவது “கட்டு விச்சியும் வேலனும் தாம் பார்த்த கட்டினாலுங் கழங்கினாலும் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்யாக்கால் இம் மையல் தீராதென்று கூறுதலின் அவ்விருவரும் தம்மின் ஒத்த திறம் பற்றியதனையே செய்யுஞ் செய்தியிடத்தும்” என நச்சினார்கினியர் உரை வகுத்துள்ளார். கட்டுவிச்சியர் நெல் பரப்பிக் குறி சொல்வார்கள். இம்முறைப்படி கட்டுவிச்சி முறத்தில் நெல்லை இட்டு அதனை எண்ணுவர். எண்ணுமுன் தெய்வங்களை அழைத்துப் பாடுவர். பின் அந்நெல்லை இரட்டை இரட்டையாக எண்ணும்போது ஒற்றைப்படையாக வந்தால் நலம் உண்டாகும் என்று அவர்கள் நம்பினர்.
4. அகவன் மகள்
கட்டுவிச்சியைப் போன்று அகவன் மகளும் குறி பார்க்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை, தெய்வங்களை அழைத்துப் பாடும் அகவன் மகளே! சங்கின் மணிகளால் ஆன மாலையைப் போன்ற வெண்மையான கூந்தலையுடைய அகவன் மகளே! பாட்டுக்களைப் பாடுவாயாக. அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் புகழ்ந்து பாடும் பாட்டை மீண்டும் பாடுவாயாக என்று குறுந்தொகை குறிப்பிடுகிறது. இதனை,
“அகவன்மகளே! அகவன்மகளே!
மனவுக் கோப்பு அன்ன நல் நெடுங் கூந்தல்
அகவன்மகளே! பாடுக பாட்டே;
இன்னும், பாடுக, பாட்டே-அவர்
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே” (குறுந். 23)
என்ற அடிகள் மூலம் அறியலாம்.
இப்பாடல் அகவன் மகளைக் கொண்டு குறிபார்ப்பதைக் கூறுகிறது. இன்று குற்றாலம் தொடங்கித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் குறி கூறும் மலைக்குறவர், அகவன் மகளிரின் வழிவந்தவர்கள் ஆவர். அகவன் மகளிர் பாட்டுப்பாடும் முதுமகளிராக இருந்துள்ளனர்.
முடிவுரை
பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு உலகளவில் பெண்களுக்கான முக்கியத்துவம் உணரப்பட்டது. ஆனால் சங்ககாலத் தமிழகத்தில் பெண்கள் மிக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்பட்டுள்ளனர். அவர்களின் தனித்தன்மைகளும், கலைத் திறமைகளும் வெளிக்கொணரப்பட்டு சமூகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டன. சந்ததி சந்ததியாக அவர்கள் தங்களைச் சார்ந்துள்ள மக்களை மகிழ்ச்சிப்படுத்தவும், துயறுற்ற போது ஆற்றுப்படுத்தவும் தங்கள் வாழ்நாள் முழுமையையும் அர்பணித்தவர்கள். போர் காலங்களில் வீரர்கள் தங்களின் காயங்களை மறந்து போரிட அவர்களுக்குக் கலைச்சேவையைப் புரிந்த பாடினியர், வெற்றி பெற்று மன்னன் வீதி உலா செல்கையில் அவர்களின் தேரின் பின்பு கூத்தாடும் விறலியர், தலைவியின் காம நோயைப் போக்க இறைவனை அழைத்துப் பாடும் அகவன் மகள் மற்றும் கட்டுவிச்சி போன்றோர் சங்க கால மக்களின் வாழ்வியலோடு நீக்கமற நிறைந்திருந்தனர் என்றால் அது மிகையாகாது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.