காப்பிய இலக்கியங்களில் கணிகையா்
முனைவர் ப. மீனாட்சி
உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை,
எஸ். எஃப். ஆா் கல்லூரி, சிவகாசி.

பெண் என்பவள் மாபெரும் மானுட சக்தி. ஆனால் ஆணாதிக்கச் சமுதாயம் அவளை மகப்பேற்றிற்கான இயந்திரமாகவும், தங்களது பாலியல் தேவையை நிறைவு செய்யும் போகப் பொருளாகவும் மட்டுமே பார்க்கிறது. பெண்ணாகப் பிறந்த எவரும் விலைமகளாவதற்கு விரும்புவதில்லை. தாய்வழிச் சமுதாயம் உடைத்தெறியப்பட்டு தந்தைவழிச் சமுதாயம் மேலோங்கிய காலகட்டத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்கிற தமிழர் பண்பாடும் உடைத்து எறியப்பட்டு விட்டது. சமயத்தின் பெயரால் பெண்களை மேலும் வதைக்கத் தொடங்கினர். “நித்திய சுமங்கலி” எனப் பெயரிட்டு பிறப்பு முதல் இறப்பு வரை உள, உடல் நலங்களை விற்றுத்தான் வாழ வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். பாலுணர்வால் பெண்களது உடலை சல்லடையாய் துளைத்ததோடு அதைச் சமூக நியதியுமாக்கியுள்ளனர்.
“ஒருத்தி போரா(து) என்று ஒரு நூறும் நாடுவீர்
உற்றுயாம் பிறரை நோக்கின்
ஓலமிட்(டு) உறுமியே கற்பு போச்(சு) என்பீர்கள்
ஒரு பாலர்க்(கு) ஒரு நீதியோ” (1)
என்னும் வரிகள் கற்பென்னும் விலங்கைப் பெண்ணிற்குப் பூட்டிவி்டு, சமுதாயத்தில் சுதந்திரமாகவும், சுகமாகவும் வாழ விரும்பிய சில ஆண்களது இழிவுக் குணத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.
“ஆணின் ஆதிக்க வெறிக்குப் பெண் பலியாகும் ஒவ்வொரு முறையும் தனக்குச் சாதகமாக ஒரு பெயரை இட்டு அதைச் சமூக நியதியாக்கிவிடும் சாமர்த்தியம் ஆணுக்கு மட்டுமே உண்டு” (2)
இராஜாராம் மோகன்ராய், ஈசுவர சந்திர வித்யாசாகர், ஈ.வே.ரா, தயானந்த சரஸ்வதி, பண்டித ராமாபாய், முத்துலட்சுமி ரெட்டி முதலியோர் பெண்ணுரிமை, குழந்தை மணம் ஒழிப்பு, விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு முறை போன்றவற்றிற்காகப் போராடினர். தகவல் தொடர்பின் மூலம் மக்களது மனதில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இயலும் என்ற நம்பிக்கையில் விலைமாதரைக் கண்டித்து “ஒழுக்கச் சிர்திருத்தத்திற்கு ஆதரவு” என்ற பத்திரிக்கை வந்தது. இதனை எவாஞ்சலிகள் என்னும் கிறிஸ்தவ மதப்பிரிவினர் நடத்தி வந்தனர்.
காப்பிய இலக்கியம்
சங்கம் மருவிய காலப் படைப்புகளே காப்பியங்கள். தமிழ்க் காப்பியங்களில் கலையைத் தொழிலாகக் கொண்டவர்கள் கதை மாந்தர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். நடன மகளிர் அனைவரும் பொது மகளிராகவும், விலைமகளிராகவும், பரத்தமை தொழிலில் ஈடுபடுபவராகவும் தமிழ்க் காப்பியங்களில் காட்டப்பட்டுள்ளனர்.
1. நடன மகளிர், சிலப், 1:5:50
2. ஆடற் கூத்தியர், சிலப், 18:35:24
3. அரங்கக் கூத்தி, சிலப், 18:35:24
4. வம்பப்பரத்தை, சிலப், 1:10:219
5. அரங்கியன் மகளிர், மணி, 7:44
6. கடை கழி மகளிர், சிலப், 2:14:
7. கணிகை, நீல, 163:4
8. தாசி, சீவக, 7:1675
9. கலையுணர் மகளிர், 7:1675
10. பரத்தை, சூளா, 7:663
11. நாடக மகளிர், யசோ, 228:25.
இது போன்று இன்னும் பிற பெயர்கள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளன.
கலைகளில் கணிகையர் வல்லவர்களாக இருந்தாலும், பல ஆடவருடன் பழக்கம் இருந்ததால் சமூகத்தில் தவறான கருத்து பதிவாகியுள்ளது. மேலும் இவர்களது இயல்புகள் பலவற்றையும் கதாபாத்திரங்கள் தாங்களாகவே எடுத்துரைப்பது போன்று உள்ளன. இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் மாதவியின் விருப்பையோ அல்லது அவளது உணர்வுகளையோ பொருட்படுத்தாமல், அவளை அவள் தாய் கூனி மூலம் விற்பது, அவர்களுடைய வாழ்க்கை அமைப்பை எடுத்தியம்புகிறது. கணிகையர் குலத்தில் பிறந்த காரணத்தினால் சமூகம் தான் வகுத்திருக்கும் எல்லையில் அவள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கட்டாயப்படுத்துகிறது.
“சலம்புணர்க் கொள்கையோடு சலதியொடு ஆடி
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுந் தரும்” (3)
மனைத்தக்க மாண்பு இல்லாத இனம் எங்களுடையது. கற்பென்னும் திண்மையை உடைத்து நொறுக்கிய சமுதாயம், எங்களைப் பெருந்தகவாக எப்படி ஏற்றுக்கொள்ளும்? எனக் கேள்விக் கணையைத் தொடுக்கிறது.
காதலன் இறந்ததும் அவனது சிதையில் குளிர்ந்த பொய்கையில் குளிப்பது போல் எரிமூழ்கும் பத்தினிப்பெண்டிகள் அல்லர் கணிகையர் என்பதை,
“... ... ... ... ... முதுகுடிப்பிறந்த
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம்
கைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே
பாண்மகள் பட்டுழிப் படூஉம் பான்மையில்
யாழினப் போலு மியல்பின மன்றியும்
நறுந்தா துண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்
வினையொழி காலைத் திருவின் செல்வி
அனையே மாகி யாடவர்த் துறப்போம்” (4)
எனச் சித்ராபதி கணிகையரின் நிலையில்லாத் தன்மை குறித்துக் கூறுவதாக உள்ளது.
“நிலையான வாழ்க்கை உடையவர் அல்லர். நிலைத்த மண வாழக்கையோ அல்லது துறவு வாழ்க்கையோ அவர்களுக்கு உரிமையாகாது. கணவனிறந்த துயரத்தால் தன் உயிர் மீது வெறுப்புக் கொண்டு, குளிர்ந்த குளத்து நீரில் நீராடுவது போல் தீயினில் குளிக்கும் இயல்புடைய குலமகளிர் போன்றவர்கள் அல்லர். கணிகையர் என்றும் பலர் தரும் உணவைப் பெற்று அதன் மூலம் வாழ்க்கை நடத்துபவர் நாம் என்றும், பாணன் இறந்தால் அவனால் இசைக்கப்பட்ட யாழ் இறந்து போகாது வேறொருவரால் இசைக்கப்படும். அதைப் போன்று இயல்புடையவர்கள் கணிகையர் என்றும், மணமுடை மகரந்தத்தையுடைய பூவில் தேனில்லாத போது அதை விட்டு நீங்கும் வண்டினைப் போன்றவர்கள் கணிகையர் என்றும், நல்வினைகள் ஒருவரை விட்டு நீங்கும் போது திருமகள் நீங்குவது போல், ஆடவரை விட்டுப் பொருள் குறைந்த போது கணிகையர் நீங்குவர் என்றும் தெளிவாகச் சித்ராபதி அக்காலக் கணிகையரின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறாள்” (5)
“ஆடவர் காண நல்லரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகுங் காட்டி
சுரும்புநாண் கருப்புவில் அருப்புக் கணைதூவச்
செருக்கயல் நெடுங்கண் சிறுங்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப்
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிர்” (6)
என்ற அடிகள் மலரைத் துறக்கும் வண்டினைப் போலத் தனக்குப் பொருள் முதலியவற்றைக் கொடுத்தாரைப் பரத்தையர் துறந்துவிடுவர் என்பதையே விளக்குகின்றன.
உதயகுமரன் மணிமேகலையைப் பற்றி இழித்துக் கூறிய மொழிகளை மணிமேகலை சுதமதியிடம் கூறுவதாக,
“கற்புத் தானில் ணற்றவ வுணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள் விளையாட்டியென்
நிகழ்ந்தனனாகி நயந்தோ னென்னாது” (7)
கணிகையர் குலத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக அவள் தான் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, ஏனையோரால் வினவப்படுகிறது. சமூகம் விதித்த அமைப்பிலேயே அவள் வாழ வேண்டும் என வற்புறுத்துகிறது. உதயகுமரன் அதுவும் நாட்டை ஆளும் அரசனுடைய மகன் பரத்தமை தொழிலில் ஈடுபடாமல் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு வரும் மணிமேகலையை இழிவாகக் கூறுவதிலிருந்து, அவளுக்கும் அக்குலத்திற்கும் இருந்த சமூக மதிப்பின்மை புலனாகிறது.
ஆதிரையின் கற்பு சிறப்பைக் கூறும் சாத்தனார் அவ்விடத்திலும் பரத்தையின் இயல்பினைக் காயசண்டிகை வாயிலாக உரைக்கிறார்.
“ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்
சாதுவன் என்போன் தகவிலன் ஆகி
அணியிழை தன்னை அகன்றனன் போகிக்
கணிகை யொருத்தி கண்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக்
கெட்ட பொருளின் கிளை கேடுநுதலின்
பேணிய கணிகையும் பிறர் நலங்காட்டி
காணம் இலியெனக் கையுதிர் கோடலும்” (8)
என்ற அடிகளில் கணிகையருக்குப் பொருளே முக்கியமானது என்பதைப் புலப்படுத்துகின்றன. இக்கருத்தினையே வளையாபதி பாடல்களும் விளக்குகின்றன.
“ஆய்டுரங் கஞ்சீறை வண்டினம் போல்க வென்று
பாயிர மின்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்துநின் றோள்நம்பி
யாவ ரடைந்தவர்க் கவையும் புரைப” (9)
வயது முதிர்ந்த கணிகை, இளைய கணிகைக்கு உன்னிடம் வருபவர் பலர் இருப்பினும், பொருள் மிகுதியாகக் தருபவரை ஏற்றுக்கொள் என அறிவுரை கூறுவதோடு கணிகையரை விலங்குகளோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
“ஊன்நின்ற வலிழுக்கென்னா
னுயிரினையு முளதென்னா
னோன்றலையு நோன்பென்னா
னோக்குடைய கணிகையரே
போன்றிருந்து பொதியறுக்கும்
புத்தன்றன் புன்னெறியை
யான் சென்ற தடிப்படுப்ப
னறக்கரும் மிகுவென்றாள்” (10)
இவ்வரிகள் கணிகையர் பொருளைக் கவரும் இயல்பினர் என்பதை உணர்த்துகின்றன. ஆணாதிக்க வேட்கைக்குப் பெண்கள் பழியானதோடு, சமூகத்தில் அவமானச் சின்னமாக வாழ வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. திருமணத்துக்குப் புறம்பான ஒழுக்கத்தில் ஆண்களும் பெண்களும் ஈடுபட்டாலும் பெண்ணை மட்டுமே இச்சமூகம் இழிவாகவும் கேவலமாகவும் கருதுகிறது. தவறு செய்யும் ஆணைக் கண்டிக்கவோ, இடித்துரைக்கவோ செய்யவில்லை.
“மாடலொ மெரிந்து மின்னும் வயிரக் குண் டலத்தோ டம்பொற்
றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகை வாண்முகத்து நல்லார்
பாடலா னரம்பின் தெய்வம் படிவங் கொண் டனையநீரா
ராடலா லரம்பை யொப்பா ரவரிலா யிரரை யீந்தான்” (11)
நடன மகளிர் அடிமைகளாக ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டிற்கு அனுப்பப்பட்டதை உணர முடிகிறது.
“மக்கட் பயந்து மனையற மாற்றுதல்
தக்க தறிந்தார் தலைமைக் குணமென்ப
பைத்தர வல்குற் படிற்றுரை யாரோடு
துய்த்துக் கழிப்பது தோற்ற மொன்றின்றே” (12)
கணிகை மகளிரை நுகர்ந்து வாழும் வாழக்கை மாண்புடையதன்று. கணிகையர் குலத்தில் பிறந்தால், அவள் சாகும் வரை கணிகையாகவே இருக்க வேண்டும் என்று சமூகம் கட்டாயப்படுத்துகிறது. கணிகையாகிய பெண் சமுதாயத்தில் விலங்கு போன்று கருதப்பட்டுள்ளாள். பொருட்களை ஏலம் விடுவது போன்று, பெண்களை ஏலம் விடும் ஒரு அபத்த நிலையே அன்றைய சமூகத்தில் நிலவியுள்ளது. ஆண்களின் காம விளையாட்டுக்கான கால்பந்தாகப் பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இழிவு நிலையினைக் காப்பியங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
முடிவுரை
* சோழர்களது ஆட்சிக்காலத்தில் பகைநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு இறைப்பணிக்கென நியமிக்கப்பட்டவர் தேவதாசிப்பெண்கள். நாயக்கர் ஆட்சிக்காலம் இதற்குப் பேரழிவினைத் தேடித் தந்துள்ளது.
* கோவிலுக்கு ஆடு, மாடுகளை நேர்ந்து விடுவது போன்று “பொட்டுக் கட்டுதல்” என்னும் சடங்கின் வாயிலாக தேவதாசிப் பெண்களை நேர்ந்து விடுகின்றனர். உணர்விழைகளால் உயிரூட்டப்பட்ட பாவையை அஃறிணை உயிராக்கியுள்ளனர். இச்செயல் ஆணாதிக்கத்தின் உச்சகட்டத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
* கற்பென்னும் சிறைக்குள் பெண்மையைச் செலுத்தி வாழ்நாள் முழுவதும் தன்னை நிரபராதியாகியுள்ளனர் ஆண்மக்கள்.
* தொல்காப்பியர் காலந்தொட்டு மரபுகளை உடைத்தெறிந்த புதுக்கவிதை வரையிலும் பாலியல் உணர்வால் நெறி தவறிய ஆணினம் மேன்மைபடுத்தப்பெற்று அதற்குப் பழியான பெண்ணினம் “பரத்தை” என இழிவுபடுத்தப் பெற்றுள்ளதை இலக்கியப் பதிவுகளின் வழி அறிந்து கொள்ள முடிகிறது.
* பெண்மையைச் சிறப்பிக்கப் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் நடைமுறை வாழ்வில் அவை யாவும் நலம் சேர்க்கவில்லை என்பதை விறலி விடு தூதிலக்கியப் பதிவுகள் காட்டுகின்றன.
சான்றெண் விளக்கம்
1. மீனாட்சி முருகரத்தினம், பெண்ணியச் சிந்தனைகள், ப. 20.
2. அ. ஜெய்குமார், பெண்களும் சமூகமும், ப. 32.
3. உ. வே. சாமிநாதையர் (பதி.ஆ), சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லாருரையும், ப. 243.
4. உ.வே.சாமிநாதையர் (உ.ஆ), மணிமேகலை, 18:4:22.
5. வேங்கடசாமி நாட்டார், துரைச்சாமிப்பிள்ளை சு., (உ.ஆ) மணிமேகலை, ப. 235.
6. உ. வே. சாமிநாதையர் (உ.ஆ), மணிமேகலை, பக்.187-188.
7.மேலது, ப. 195.
8. மேலது, ப. 62.
9. வெங்கடாஜலம் (உ.ஆ), வளையாபதி, ப. 52.
10. ஔவை துரைச்சாமிப்பிள்ளை, நீலகேசி, ப. 163.
11. கோக்கலை ஜேராஜன், சூளாமணிச் சுளைகள், ப. 176.
12. வெங்கடாஜலம், மு. நூ, ப. 63.
துணைநூற்பட்டியல்
1. கோக்கலை ஜேராஜன், தோலா மொழியாரின் சூளாமணிச் சுனைகள், கவிக்குயில் பதிப்பகம், சென்னை,1993.
2. சாமிநாதையர். உ. வே. (பதி.ஆ), சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும், அடியார்க்குநல்லாருரையும், உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, 2008.
3. சாமிநாதையர் உ. வே. (உ.ஆ), மணிமேகலை, உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, 2008.
4. துரைச்சாமி பிள்ளை.ஔவை (உ.ஆ), நீலகேசி, கழகவெளியீடு, சென்னை,1987.
5. ஜெயக்குமார். அ, பெண்களும் சமூகமும், உமா பதிப்பகம், சென்னை,1999.
6. மீனாட்சி முருகரத்தினம், பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணிய மனிதநேய நூல் வெளியீடு நிறுவனம், சென்னை,1999.
7. வெங்கடாஜலம் (உ.ஆ), வளையாபதி, பாவை பதிப்பகம், சென்னை, 2006.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.