தமிழர்களுடைய வாழ்க்கை முறையையும் பண்பாட்டுச் செய்திகளையும் அறிந்து கொள்ள நமக்குக் கிடைத்த மிகப்பெரிய கருவூலம் சங்க இலக்கியம் ஆகும். அவ்வாறாக கிடைத்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஒவ்வொன்றும் பலநூறுக் கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் புதுப்புது செய்திகளைக் கொடுக்கின்ற அட்சய பாத்திரமாகவும் திகழ்கின்றது. அவற்றுள் பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடை பல கோணங்களில் சிந்திக்கக் கூடிய வகையில் அதன் பாடல் வரிகள் அமையப்பெற்றுள்ளது. அதாவது 188 வரிகளை உள்ளடக்கியதாக உள்ள நெடுநல்வாடையில் பாடல்வரிகள் ஒவ்வொன்றையும் வைத்துக்கொண்டு புதிய கோணத்தில் காண்பதற்குப் பல்வேறு செய்திகள் அடங்கியுள்ளது. அவ்வாறாக வெளியாகின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு நுண்மான் நோக்குடன் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
நெடுநல்வாடை 188 வரிகளைக் கொண்டது. இயற்றியவர் நக்கீரர் என்பதெல்லாம் நாமறிந்த உண்மையே. இதில் கூதிர்பாசறை எனும் துறையில் அமைந்த ஒரே இலக்கியம் இந்நூல் மட்டுமே. கூதிர்கால நிகழ்வையும், வாடைக்காற்றையும் கூறும் விதமாகவும், பாசறைக்கண் மன்னன் வீரர்களோடு செயல்படும் விதத்தையும் மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.
நெடுநல்வாடையை பல்வேறு சூழலில், பல்வேறு தளங்களில் வைத்து ஆராய்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதாவது திணைக் கோட்பாடு, இனவரைவியல், உளவியல், காதல்நிலை என பல்வகையில் பிரித்து காண்பதற்கு இடம் இருக்கிறது. அவற்றின் சொல் ஆழம் பற்றிய புரிதலை பார்க்கும்போது மேலான கருத்துக்கள் அதிகம் கிடைக்கிறது. அவற்றில் சிலவற்றை நுண்மான் நோக்குடன் ஆராயலாம்.
முதலாவதாக, திணைக்கோட்பாடு, திணை என்பது மக்களின் வாழ்க்கை முறையைக் குறிப்பிடுவது. இதனையே ஒழுக்கம் என்றுக்கூறுவர். அவ்வொழுக்கத்தை
* அகம் சார்ந்த ஒழுக்கம்
* புறம் சார்ந்த ஒழுக்கம்
என இரு வகையாகப் பிரிப்பர். அதாவது;
* ஒத்த தலைவன் தலைவி கூடுகின்ற ஒழுக்கம்
* வெற்றி, கொடைச்சிறப்பு, வீரம் போன்றவற்றையும் கூறுவது புறஒழுக்கம்
இதில் கைக்கிளை முதலாகப் பெருந்திணை வரை சொல்லப்பட்டவைகளே திணைக்குரியதாகக் கருதப்படுகிறது. அவற்றையும் அகம், புறம் எனப் பிரித்து இரண்டுக்கும் பொதுவாக வைத்துப் பாடப்பட்டுள்ளது. திணையைப் பற்றி பிச்சமுத்து குறிப்பிடும் போது, முதலும், கருவும் இடமென்றும், பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய இரண்டையும் பொழுது அல்லது நேரமென்றும் உரிப்பொருளாகிய ஒழுக்கத்தை இயக்கமாகவும் கூறுகிறார். ஏனென்றால் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்ற பொருட்களெல்லாம் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. இயக்கமில்லையெனில் பொருள்கள் இல்லை. உலக மக்களுடைய இயக்கமனைத்தும் இடத்தையும் பொழுதையுமே அடிப்படையாகக் கொண்டவை என்கிறார். நெடுநல்வாடையும் மேற்கூறப்பட்ட பிம்பத்தையே முன்னிருத்துகின்றது.
“முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே”
(தொல்.அகத்.நூ.4)
எனும் நூற்பாவின் வழியாக நிலத்தையும் பொழுதையும் சுட்டிக்காட்டுகிறார்.
நெடுநல்வாடை முல்லை நிலத்தைச் சார்ந்ததாக அமைகிறது. முல்லை நிலம் காடும் காடு சார்ந்த பகுதியை மையப்படுத்துவது.
“ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்ப”
(நெடு.நல்.3-4)
எனும் அடிகள் உணர்த்துகிறது.
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும் என்பதற்கும்
“குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானகள்”
(நெடு.நல்.-12)
குன்று என்பது மலையைக் குறிப்பதாவும் வந்துள்ளது.
மருதம் இடம் என்பதற்கு சான்றாக பேரூர், சிற்றூர் ஆகிய ஊர்கள் பற்றிய தகவல்களும் இடம் பெறுகிறது.
“மாடல் ஓங்கிய மல்லல் மூதூர்”
(நெடு.நல் - 80)
என்னும் வரியும் குறிப்பிட்டு காட்டப்படுகிறது.
மேற்கூறிய திணைகளைப் போலவே நெய்தல் திணை சார்ந்த அமைப்பும் வெளிப்படுவதைக் காணமுடிகின்றது. அதாவது,
“பைங்காற் கொக்கின் மென்பறைத் தொகுதி
இருங்கலி பறந்த ஈரவெண்மணல்”
(நெடு.நல். 15-16)
இப்பாடலடியில் வரியானது ஈரமாண வெண்மணலை உடையதாக உள்ளது என்பதன் வாயிலாக நெய்தலைப் பற்றியும் கூறப்படுகிறது. நெடுநல்வாடையில் எல்லா திணைகளைப் பற்றிப் பேசப்பட்டாலும் முல்லைத் திணையின் செய்திகள்தான் அதிகமான இடங்களில் சுட்டப்படுகிறது. எனவே திணை மயக்கமும் உள்ளது.
முல்லைத்திணையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவே புனையப்பட்டிருப்பது புலனாகின்றது. தொல்காப்பியர் திணைகளுக்கு நூற்பா வகிக்கும் போது
“வஞ்சி தானே முல்லையது புறனே”
என புறத்திணையியலில் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியரின் கருத்தை முன்வைத்துப் பார்க்கும் பொழுது நக்கீரர் முல்லை என்னும் அகத்திணையையும் வஞ்சி என்னும் புறத்திணையையும் புகுத்திக்காட்டியுள்ளார் என்பது புலனாகின்றது.
கோப்பெருந்தேவியை சுட்டிக்காட்ட முல்லைத்திணையையும், புறமாகிய வஞ்சித்திணையை தலைவனாக விளங்கும் பாண்டியன் நெடுஞ்செழியன் மேல் வைத்து கூறியுள்ள திறம் படைப்பாசிரியனின் ஆழ்ந்த புலமையை சிந்திக்க வைக்கிறது. முல்லைத்திணையை விளக்க,
“பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென”
(நெடு.நல்-2)
என முதற்பொருளாகிய கார்காலத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். கார்கால காட்சியை முன்னிறுத்தும் போது கூட
“புலம் பெயர் புலம்பொடு கலங்கிகோடல்
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்”
(நெடு.நல் - 5-7)
அதாவது மழைக்காலம் அதிகமாகவே இருக்கிற இடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு செல்லக்கூடிய சூழல் அமைப்பை முன்னிறுத்திக் காட்டியுள்ளார்.
“நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர”
(நெ.நல் -43-44)
பெரும்பொழுதாகிய கார் காலத்தைச் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே சிறுபொழுதாகிறது.
கோவலர்கள் செங்காந்தள் மாலையையும் அணிந்து சென்றனர் என்பதைக் குறிப்பிடும் போது இவற்றில் திணை மயக்கம் ஏற்படுவதும் காண முடிகிறது. எனவே பல்வேறு திணைகளை முன்னிறுத்திக் காட்டினாலும் நெடுநல்வாடை முல்லை நில வாழ்வியல் சிறப்பையே காட்டுகிறது.
இன வரைவியல் பார்வையில் பார்க்கும்போது, நெடுநல்வாடை இத்தளத்தில் பார்ப்பதற்கும் முக்கியக் களங்களை உருவாக்கித் தருகிறது. முதலில் இனவரைவியல் என்பது குறிப்பிட்ட பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் குழுவின் வரலாறு, அம்மக்கள் குழுவாக விளங்கும் நிலவியல் உறவு முறைகள், குறியீடுகள், அரசியல், பொருளாதார ஒழுங்கமைப்புகள் ஆகிய அனைத்தும் முக்கிய இடம் வகிக்கக் கூடியது. ஒரு பண்பாட்டோடு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் பண்பாட்டின் தன்மையையும் விவரிப்பதாகவும் அமையும் என ஆ. தனஞ்சயன் குறிப்பிடுகிறார்.
இனவரைவியலின் கூற்றுப்படி நக்கீரர் கூறும்போது மழையின் இயல்பு, மழையால் மாறுபட்ட புவிச்சூழல், சுற்றுச்சூழல் ஆகியவற்றை புலப்படுத்துகிறார். நெடுநல்வாடையில் இனவரைவியல் கூறுகளான மக்களின் குடும்ப அமைப்பு, பொருளாதார நிலை, பண்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றை மையமிட்டு மேற்கூறிய சூழல்களையெல்லாம் பாண்டியனுக்கென தனியாகவே படைத்திருக்கிறார்.
இனவரைவியலின் கூற்றுப்படி நக்கீரர் கூறும் போது மழையின் இயல்பு, மலையால் மாறுபட்ட புவிச்சூழல், சுற்றுச்சூழல் ஆகியவற்றை புலப்படுத்துகிறார். நெடுனல்வாடையில் இனவரைவியல் கூறுகளான மக்களின் குடும்ப அமைப்பு, பொருளாதாரநிலை, பண்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றை மையமிட்டு மேற்கூறிய சூழல்களையெல்லாம் பாண்டியனுக்கென தனியாகவே படைத்திருக்கிறார்.
தான் இந்த மன்னனைத்தான் பாடுகிறேன் என்று நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக “ வேம்புதலையாத்த நோன்காழ் எஃகம்” எனும் தொடரால் அம்மன்னனைக் குறிப்பால் உணர்த்த முயன்றிருக்கிறார்.
இக்குறிப்பைப் பற்றி போ.வை. சோமசுந்தரனார் கூறும்போது,
“ வேம்புதலையாத்த நோன்காழ் எஃகம் ”
எனும் அடியில் இச்சொல் பாண்டியனைத்தான் குறிப்பிட வேண்டும் என்று கூறி , அவனுக்கு உரிமையாக்கிச் சுட்டின பக்கம் அதன் நுணுக்கம் உணர்ந்து இன்புறத்தக்கது எனக் குறிப்பிடுகின்றார்.
படைப்பாளியின் இனவரைவியல் பண்பு என்பது சமூகத்தின் அனைத்து வகையான இயக்கங்களையும், நுணுக்கமாக சித்தரிக்கும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். அத்துடன் படைப்பாளனின் அறிவாற்றலால் பயன் தூக்கும் சமுகத்தினரின் உணர்வுகளையும், எதிரொலிக்கும் தன்மையுடையதாய் இருக்க வேண்டும். நெடுநல்வாடையில் ஆசிரியர் தம்முடைய படைப்பின் வழியே சமுகத்தின் உணர்வுகளை வெள்ப்படுத்தி இருப்பது பாடல்களின் வழியாக உணர முடிகிறது,
மேலும் புலவர்கள் அளித்த தரவுகளால் மன்னர்கள் தம்முடைய நிலையினை மட்டுமின்றி பிற நாட்டினுடைய வளங்களையும் பெற முடிந்ததால் புலவர்களை ஒரு இனவரைவியல் தகவலாளி போன்றே கருதியிருக்க வாய்ப்பிருக்கிறது.
டென்சின் எனும் அறிஞர் குறிப்பிடும் போது ”எழுத்தாளன் மற்றும் அவன் யாரைப்பற்றி எழுதுகிறானோ மற்றும் அவன் குறிப்பிடும் அம்மக்கள் ஆகிய இருவருடைய வாழ்க்கை முறையைப் பற்றிய விளக்க உரைகள், விவர அறிக்கைகள் அவற்றை உருவாக்கும் விசாரணை முறை மற்றும் எழுத்து வடிவமே இனவரைவியல்” என்று குறிப்ப்டுகிறார். அவ்வாறு நோக்குகையில் எழுத்தாளனையும் ஒரு சிறந்த இனவரைவியலானாக காட்டுகிறது. மேலே குறிப்பிட்ட தன்மையைப் பொருத்திப் பார்க்க நக்கீறர் சிறந்தவராகக் கருத வாய்ப்புண்டு.
இனவரைவியலின் உட்கூறுகளைப் பயன்படுத்தி தம் படைப்பின் ஊடாகப் பாண்டியனின் சிறப்பைக் கூற முற்படுவது பாடல்களின் மூலம் அறிய முடிகிறது. அதாவது போர்த்திறம், வழி நடத்தல் போன்றவற்றைக் குறிப்பிடும் போது வீரத்தை உணர்த்துவதற்காக “நோன்காழ் எஃகம்” எனும் சொல்லாட்சியை பயன்படுத்தியிருப்பது பாண்டியனுடைய குறி மரபு. ஆக, திட்டமிட்டே படைக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெளிவாகப் புலனாகிறது. எப்படியாவது மன்னனைப் பாடியாக வேண்டும் அவன் சிறப்பினை வெளிக்காட்ட வேண்டும் எனும் கண்ணோட்டத்தினோடே படைக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆக, நேரடியாக கூறாமல் பாண்டிய நெடுஞ்செழியனை அகமரபில் வைத்துப் பாடப்பட்டுள்ளதை மரபு மீறல் இல்லாமலும் பாட முற்பட்டிருக்கிறார்.
’வேம்பு’ எனும் அடையாளம் பயன்படுத்தியிருப்பது குலக்குறி என்பது அறிய முடிகிறது. அதே போல ஒரு இனக்குழு தலைவனின் அடையாளத்தைக் குறிப்பிடும் நோக்கத்திலும் புனையப்பட்டுள்ளது. இனக்குழு அடையாளத்தினைப் பற்றி பக்தவச்சல பாரதி குறிப்ப்டுகையில்,
“இனக்குழுவின் வாழ்வாதாரத்தைத் தருகின்ற எதுவோ அதுவே அவ்வினத்தினுடைய குறியீடாக இருக்க வேண்டும்” எனும் கூற்றிற்கிணங்க பாண்டியமன்னனின் குலக்குறியான வேம்பு பற்றிய புனைவை ஆசிரியர் குறிப்பிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. மீன் அடையாளமாக இருந்தாலும் வேம்பு இவ்விலக்கியத்தில் காரணமாக விளங்குகிறது.
எனவே, ஒரு இனக்குழுத் தலைவனாக இருக்கும் அக்குழுவின் தலைவன் மக்களின் தேவை அறிந்த ஒருவனாக இருந்து செயல்பட்டிருக்கிறான் என்பதை மேற்கூறிய பாடலின் வாயிலாகவும்,
“முன்னோன் முறைகாட்ட“ எனும் தொடரில் படைத்தலைவனின் செயலினை உணர்த்துவதன் வாயிலாகவும் அவன் சிறந்த காப்பாளனாகவும் இருந்திருக்கிறான் என்பதையும் அறிய முடிகிறது.
முடிவாக;
திணைக்குரிய எல்லா முதற்பொருள், கருப்பொருள், ஆகியவற்றை மீறாமல், திணை மயக்கத்திற்கு இடமிருந்தாலும் எடுத்துக் கொண்ட தகவலைச் சிறப்பாகக் கொண்டு சேர்த்திருப்பது ஆய்விற்குரியது.
இனவரைவியல் அடிப்படையில் நோக்கும் போது, ஒரு சிறப்பான் இனக்குழு தலைவனாகவும் செயல்பட்டிருப்பதும், பாண்டிய நெடுஞ்செழியனுக்கான இனவரைவியல் தரவுகளாக்கித்தந்து, அவனின் ஆட்சிப் பரப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் நிகழ்த்த வேண்டிய மாற்றங்களையும், அவனின் ஆளுகையில் மக்கள் பெற்றுள்ள வாழ்விருப்பு நிலைகளையும் நுண்ணிதாக விளக்கும் தகவலாளியாக நக்கீரர் திகழ்ந்திருக்கிறார் என்பதை ஆய்வின் வழியாக அறிய முடிகிறது.
எனவே, நெடுநல்வாடை இன்னும் உளவியல், காதல், கலை, பண்பாடு என பல தளங்களில் ஆய்வு நோக்க இடமிருக்கிறது. ஆக, நெடுநல்வாடை பல்வேறு சிந்தனைக்குரிய சிறப்புமிக்க நூல் என்பது ஆய்வின் வழியாக அறிய முடிகிறது