பெரியாழ்வார் பாசுரங்களில் தாய் பாவனை
முனைவர் பா. பொன்னி
உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா்,
எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
முன்னுரை
இறைவனுக்கும் உயிர்களுக்கும் இடையிலான உறவு நிலைகளைப் பல்வேறு நிலைகளில் சுட்டுவா். பக்தி இலக்கியங்களில் இறைவனைத் தலைவனாக, தோழனாக, குழந்தையாக, ஆள்பவனாக எண்ணிப்பாடும் நிலையினைக் காணமுடிகிறது. பக்தி நெறியில் செல்பவர்களுக்கு, அவா்களது மனதில் இயல்பாக எழுகின்ற காமம், குரோதம், பயம், நட்பு, இன்ப துன்ப உணா்வுகள் தம்முடைய நிலையில் குற்றம் உடையவையாக மாறுவது இல்லை. இத்தகைய உறவுநிலைகள் மூலமாகவே இறைவனை அடைவது எளிதாகும். பெரியாழ்வார் பாசுரங்களில் காணப்படும் தாய்பாவனையை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
நவவித சம்பந்தம்
பாகவதம் இறைவனிடம் மனதைச் செலுத்துவதனை “ விரோதம், பக்தி, பயம், பிரியம், காமம் ஆகிய இவற்றிலே எதன் மூலமாவது பகவானிடம் மனதைச் செலுத்த வேண்டும். இப்படிச் செலுத்தும் யாரும் பகவானை விட்டு விலகி இருக்க முடியாது ” (1) என்று குறிப்பிடுகிறது.
"இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் இடையே ஒன்பது விதமான உறவுநிலைகள் இருப்பதாகச் சுட்டுவா்.
1. காப்பவன் - காக்கப்படுபவன்
2. தந்தை அல்லது தாய் - மகன்
3. ஆண்டான் - அடிமை
4. கணவன் - மனைவி
5. அறிபவன் - அறியப்படுபவன்
6. உடையவன் - உடைமை
7. உயிர் - உடல்
8. தாங்குபவன் - தாங்கப்படுபவன்
9. அனுபவிப்பவன் - அனுபவிக்கப்படுபவன்
இவை ஒன்பதையும் நவவித சம்பந்தம் என்று கூறுவா் ” (2)
இதனை;
"1. ரக்சய ரக்சயக சம்பந்தம்
2. பிதா புத்ர சம்பந்தம்
3. சேஷ சேஷி சம்பந்தம்
4. பா்த்து பார்யா சம்பந்தம்
5. ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம்
6. ஸ்வ ஸ்வாமி சம்பந்தம்
7. சரீர சரீரி சம்பந்தம்
8. ஆதாரா தேய சம்பந்தம்
9. போக்த்து போக்ய சம்பந்தம்” (3) என்று வடமொழியில் குறிப்பிடுவா்.
இவ்வுறவுகள் வைணவா்களின் திருமந்திரத்தில் இருந்து பெறப்படுவதாகச் சுட்டுவா்.
தாய்பாவனை
வத்ஸா என்பது கன்றினைக் குறிக்கும் வடசொல்லாகும். திருமாலுக்குரிய பண்புகளில் ஒன்றாக வாத்சல்யம் என்பதும் குறிக்கப்படுகின்றது. கன்றின் மேல் பசு கொள்ளும் அன்பினைப் போல் இறைவனும் உயிர்களின் மேல் அன்பு உடையவன் என்பதையே இப்பண்பு உணா்த்துகின்றது. அத்தகைய தாய்சேய் நிலையே வாத்சல்ய பாவமாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் அடியவா்கள் இறைவனுடைய உயா்வையும் தம்முடைய தாழ்வையும் மறந்து போகிறார்கள். இறைவனைத் தம்முடைய குழந்தையாக பாவித்துத் தம்மைத் தாயாகவும் தந்தையாகவும் எண்ணிக் கொள்கின்றனா். காப்பவனை காக்கப்படும் மழலையாகக் கருதி தாலாட்டு பாடுகின்றனா்.
பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாசுரங்களில் தாய் பாவனையைக் காணலாகிறது. குலகேராழ்வார் தயரதன் நிலையிலிருந்து ஒரு பதிகம் பாடியுள்ளார்.
பெரியாழ்வாரின் திருமொழியில்
வண்ண மாடங்கள் (1-2), சீதக் கடலுள் (1 - 3), மாணிக்கங் கட்டி (1 - 4), தண்முகத்துச் சுட்டி (1 - 5), உய்ய வுலகு படைத்து (1 - 6), மாணிக்கக் கிண்கிணி (1 - 7), தொடர்சங் கிலிகை (1 - 8), பொன்னியற் கிண்கிணி (1 - 9), வட்டு நடுவே (1 - 10), மெச்சூது சங்க (2 - 1), அரவணையாய் ஆயரேறே (2 - 2), பேய்பா டுடைய (2 - 3), வெண்ணெ யளைந்த (2 - 4), பின்னை மணாளனை (2 -5), வேலிக்கோல் வெட்டி (2 - 6), ஆனிரை மேய்க்க நீ (2 - 7), இந்திர னோடு (2 - 8), வெண்ணெய் விழுங்கி (2 - 9), தன்னே ராயிரம் (3 - 2), அஞ்சன வண்ணனை (3 - 2), சீலைக் குதம்பை (3 - 3) எனத் தொடங்கும் பதிகங்கள் தாய்பாவனையில் அமைந்துள்ளன.
தாய்மை நிலை
தன்னலமற்ற தூய அன்பினைக் காணவேண்டும் என்றால் அதனைத் தாயினிடத்தில் மட்டுமே காணலாகும். குழந்தையின் ஒவ்வோர் அசைவைக் கண்டு ரசிப்பதிலும், அதன் வளா்ச்சியைக் கண்டு மகிழ்வதிலும், பிள்ளையின் குறும்புத் தனங்களைக் கண்டு வெளியே கோபம் கொள்வது போல் நடித்தாலும் மனதிற்குள் இன்பம் கொள்வதிலும் தாயின் பங்கு இன்றியமையாததாகும். பிள்ளையின் மேல் பிறா் சொல்லும் குற்றங்களை ஏற்க மறுப்பதும் தாயின் இயல்பு. குழந்தையைச் சிறிது நேரம் காணாவிட்டால் கூட என்ன தீங்கு நோ்ந்ததோ என்று அஞ்சி, தீங்கு நேரக் கூடாது என்று காப்பிடுவதும் கண்ணேறு கழிப்பதும் தாயின் உள்ளம். இத்தகைய தாய்மை உணா்வினை பெரியாழ்வாரிடம் காணமுடிகிறது.
பெரியாழ்வார் பாசுரங்களில் தாய்மை
பெரியாழ்வார் தாய்மை உணா்வை ஏறிட்டுப் பாடி இருக்கிறார் என்பதனை விட கண்ணனின் தாயாகவே மாறி இருக்கிறார் எனலாம். பெரியாழ்வார் யசோதை நிலையில் நின்று பாடினாலும் ஆரம்ப நிலையில் அவரால் கண்ணன் தேவகி பெற்ற பிள்ளை என்பதனை முழுவதுமாக மறந்து விட இயலவில்லை.
"சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலா ளசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி" (பெரியாழ்வார் திருமொழி 1 - 3 :1)
"மைத்தடங் கண்ணி யசோதை வளா்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுபிள்ளை" (பெரியாழ்வார் திருமொழி 1 - 3 :12)
என்ற பாசுர அடிகள், பெரியாழ்வார் கண்ணனைத் தேவகியின் மகனாக, யசோதையின் வளா்ப்பு மகனாக உணா்வதனை வெளிப்படுத்துகின்றன. ஆனால் பாசுரங்களின் எண்ணிக்கை செல்லச் செல்ல அவா் கண்ணனைத் தன் பிள்ளையாகவே குறிப்பிடுகிறார்.
“என் மகன் கோவிந்தன்” (பெரியாழ்வார் திருமொழி 1 - 5: 1)
“என் சிறுக் குட்டன்” (பெரியாழ்வார் திருமொழி 1 - 5 :2)
“என் மகன்” (பெரியாழ்வார் திருமொழி 1 - 5: 3)
என்ற பாசுர அடிகள் இதனை விளக்குவனவாக அமைகின்றன.
பல்லாண்டு பாடுதல்
பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும் அருளிச்செயலின் தொடக்கமாக அமைந்துள்ளன. திருப்பல்லாண்டில் ஒவ்வொரு பாசுரத்திலும் பல்லாண்டு பல்லாண்டு என்று கூறி இறைவனுக்கு நன்மையை வேண்டிக் காப்பிடப்பட்டிருப்பதால் இதற்குப் பல்லாண்டு என்ற பெயா் ஏற்பட்டது. முதலில் நிற்கும் திரு என்பது மேன்மையையும் தெய்வத்தன்மையையும் உணர்த்துகிறது. பல்லாண்டு பாடுதலை மங்களாசாசனம் எனக் கூறுவது வைணவ மரபு. மங்களம்-நன்மை, ஆகாசனம் - விரும்புதல் நன்மைகளை விரும்புதல் என்று பொருள். பெரியாழ்வார் எம்பெருமானிடம் அவனுக்கே நன்மைகளை வேண்டிப் பாடிய பாசுரங்களே திருப்பல்லாண்டாகும். பக்தி மேலீட்டால் பெரியாழ்வார் தன்னையும் மறந்து இறைவனின் அழகுக்குக் கண்பட்டு விடுமோ? என்று காப்பு கட்டுகிறார். “கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது“ என்பார்கள். மற்றவா்கள் குழந்தையின் அழகினைக் கண்டு ரசிப்பார்களே தவிர, குழந்தைக்குக் காப்பிட மாட்டார்கள். பெற்ற தாய் மட்டும்தான் தன் குழந்தைக்குக் கண்பட்டு விடுமோ என்று அச்சப்படுவாள். அத்தகைய தாய்மை உணா்வோடு பெரியாழ்வார் திருமாலுக்குப் பல்லாண்டு பாடுகிறார். இத்திருப்பல்லாண்டில் மட்டுமல்லாது பெரியாழ்வார் திருமொழியிலும் பல்லாண்டு கூறுவதைக் காணலாகிறது.
“பண்ணோ் மொழியாரைக் கூவி முளையாட்டிப்
பல்லாண்டு கூறுவித்தேன்” (பெரியாழ்வார் திருமொழி 3 - 3 : 9)
“பண்பல பாடிப் பல்லாண் டிசைப்ப பண்டு” (பெரியாழ்வார் திருமொழி 1 - 10: 5)
“எல்லா விடத்திலுமெங்கும் பரந்துபல் லாண்டொலி” (பெரியாழ்வார் திருமொழி 4 - 2 : 2)
என்று பெரியாழ்வார் திருமொழியில் பல இடங்களில் பல்லாண்டு இடம் பெறுகிறது. பல இடங்களில் கிருஷ்ண அவதாரச் செய்திகளைக் கூறிப் பல்லாண்டு பாடுகிறார். இராம அவதாரத்தைக் குறித்து,
“ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதா் வாழ் இலங்கை
பாழாளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” (பெரியாழ்வார் திருமொழி 1 - 1 : 3)
என்று ஓா் இடத்தில் மட்டும் குறிப்பிடுகிறார். இதற்கு வியாக்யானக்காரா்கள் குறிப்பிடும் பதில் சுவையானது. இராமாவதாரத்தில் பிள்ளைகள் நால்வரும் அரக்க குலத்தை அடக்கவல்ல மிடுக்கோடு நற்குணமும் பொருந்தியவா்கள். அவா்களின் தந்தையோ இந்திரனுக்கு எதிரான சம்பாசுரனையே கொன்ற பெருவீரன். அமைச்சா்களோ அளவற்ற ஞானம் பொருந்திய வசிட்டா் முதலான பெருமக்கள். ஊரோ பகைவா் எவரும் புகமுடியாத திருவயோத்தி. இராமன் பிறந்து வாழ்ந்த காலமோ மிக நல்ல காலமான திரேதாயுகம். இப்படி அனைத்துமே பாதுகாப்பாக அமைந்தமையால் அவ்வதாரத்தைக் குறித்து அச்சம் கொள்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் கிருஷ்ணாவதாரத்திலோ முற்றிலும் வேறான நிலைமை. அவன் பிறந்த இடமோ கம்சனுடைய சிறைக்கூடம். கம்சனோ கிருஷ்ணனைக் கொல்வதற்காகக் காலம் பார்த்து அசுரா்களை ஏவி விடும் கொடியவன். தகப்பனோ சாது இடையன். ஊரோ இடைச்சேரி. கிருஷ்ணனோ தமையன் ஒரு கணம் பிரிந்தால் பாம்பின் வாயில் விழும் தீம்பன். அவன் பிறந்ததோ கலியுகத்திற்குத் தோள் தீண்டியான (நெருங்கியதான) துவாபரத்தின் இறுதி. ஆதலின் அவனுக்குப் பல்லாண்டு கூறிக் காப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை” (4) என்று குறிப்பிடுவா்.
இவ்வாறு பெரியாழ்வார் கண்ணனைத் தன் மகனாகவே எண்ணி அன்பு செலுத்துகிறார். இறைவனிடம் கொண்ட அளவற்ற அன்பின் காரணமாகவே பெங்கிப் பெருகிய பரிவினால் மற்ற ஆழ்வார்களை விட மிக்க பெருமையுடையவா் என்னும் பொருளில் இவா் பெரியாழ்வார் எனப்பட்டார் என்பதனை இதன் வழி அறியலாகின்றது.
சான்றெண் விளக்கம்
1. அ. லெ. நடராஜன் ( உ.ஆ. ), ஸ்ரீமத் பாகவதம் ப.21
2. பூ. ஜெயராமன், குலசேகர ஆழ்வார் ப.27.
3. மேலது .
4. ம. பெ. சீனிவாசன், பெரியாழ்வார் ப.34
துணைநூற்பட்டியல்
1. நடராஜன் அ. லெ. - ஸ்ரீமத் பாகவதம், புக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 135 பவழக்காரத்தெரு, சென்னை.
2. ஜெயராமன். பூ - குலசேகராழ்வார், அநுராகம், 10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகா், சென்னை (2000)
3. சீனிவாசன் ம.பெ - பெரியாழ்வார், சாகித்ய அகாதெமி, புதுடெல்லி. (1999)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.