சங்க இலக்கியங்களில் தமிழர் இசைக்கலை
பேராசிரியர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு
முன்னுரை
மனித வாழ்க்கையை மாண்புறச் செய்யும் ஆற்றலே கலைகளாகும். இயல்பாகத் தோன்றிய பொருளை இயற்கையாகவும், மக்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளைக் கலையாகவும், கலைப்படைப்பாகவும் கருதலாம். எல்லா உயிர்களையும் தன்பால் இசையச் செய்வதால் இசை எனப் பெயரிட்டனர்.. தொண்டையாலும், கருவிகளின் துணையாலும் இசைத்தனர். இசைக்கருவிகள் நான்கு வகைப்பட்டன. அவை தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, நரம்புக்கருவி என்பன. தமிழர்கள் பல்வேறு கலைகளைப் பயின்று இருந்தனர். இசைக்கலையில் மிகவும் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, தாளக்கருவி ஆகிய கருவிகள் புழக்கத்தில் இருந்தன. இசை, மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இருந்தது. கலைஞர்கள், அரசர்களால் ஆதரிக்கப்பட்டனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட இசையும் இசைக்கலைஞர்களும் சங்ககாலத்தில் எவ்வாறு போற்றப்பட்டனர் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சங்க இலக்கியத்தில் இசைக்கூறுகள்
பத்துப்பாட்டில், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய இரண்டிலும் தமிழ் இசைக் கலைஞர்கள் பற்றிய பல செய்திகள் காணப்படுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்ற ஐந்து நிலங்களுக்கும் தனித்தனியே யாழ் முதலிய இசைக்கருவிகளும் பண்களும் குறிக்கப்பட்டுள்ளன. சங்கக் காலத்தில் நினைதொறும் தனித்தனிப் பண் உரியதாக்கப்பட்டிருந்தது. குறிஞ்சிக்குக் குறிஞ்சிப் பண்ணும் முல்லைக்குச் சாதாரிப் பண்ணும், மருதத்துக்கு மருதப்பண்ணும், நெய்தலுக்கு இரங்கற்பண்ணும், பாலைக்குப் பஞ்சரப் பண்ணும் எனப் பண்களைத் திணைதோறும் தனித்தனியாக உரித்தாக்கினர்.
“பாலை நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே” (பிங்கலம்.1375)
தோற்கருவிகளுடன் குறிஞ்சிக்குத் தொண்டகப் பறையும், முல்லைக்கு ஏறுகோட் பறையும், மருதத்திற்கு நெல்லரிகிணையும் முழவும், நெய்தற்கு மின் கோட்பறையும், நாவாய்ப் பம்பையும், பாலைக்குத் துடியும் பறைகளாகப் பயன்பட்டன.
நற்றிணை உணர்த்தும் இசை
பண்டைத் தமிழகம் இசைத் தமிழகம் இசைத் தமிழில் சிறந்து விளங்கியது. அதன் எதிரொலி நற்றிணைப் பாடல்களிலும் உள்ளது. இசைக் கருவிகள் பலவற்றை நற்றிணை நமக்குத் தெரிவிக்கிறது. துழல் (69), சீறியாழ் (189, 380), படுமலை (பாலைப்பண்) நின்ற நல்யாழ் (139), யாழ் (335), தொண்டகச்சிறுபறை (104), தண்ணுமை (130), முழவு (360), துடி (77), முரசு (93,197), தாளம் (95) எனப் பற்பல வாத்தியக் கருவிகள் இருந்தமை, நற்றிணையின் மூலம் தெரியவருகிறது.
மதுரைக்காஞ்சியில் இசை
குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை என்னும் நான்கும் அக்காலத்தின் நிலத்தை ஒட்டி வழங்கப்பட்ட இசை வகையாகும். செவ்வழிப்பண் முல்லை. நெய்தல் நிலத்திற்குரிய மாலையில் பாடப்படுவதாகும். மருதப்பண் காலையில் பாடப்படுவதாகும். யாழில் இசைக்க வல்லார் காலையில் மருதப்பண்ணை மதுரையில் வாசித்தனர் என்பதை,
“சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழேர் மருதம் பண்ணை” (மதுரை. 657-658)
என்ற மதுரைக்காஞ்சி அடிகள் மூலம் அறியலாம். ஒரு நாட்டின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வாயில்களாகக் கலைகள் திகழ்கின்றன. சங்ககாலத்தில் தோன்றிய நகரங்களுள் மதுரை தனிச்சிறப்புடன் திகழ்கிறது. அத்தகைய சிறப்பு பெற்ற மதுரையில் வாழும் மக்களிடம் காணப்பட்ட கலைகள் கட்டடம், சிற்பம், ஓவியம், இசை போன்றவற்றின் மூலம் வெளிப்படுகின்றது. இதன் மூலம் அவர்களது வாழ்வில் கலை இரண்டறக் கலந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
பரிபாடலில் இசைக்கருவிகள்
இசைத்தமிழுக்கு அடிப்படையான முதற்கருவி குழற்கருவியே. இக்கருவிக்குரியவர்கள் முல்லை நில மக்களே. திருப்பரங்குன்றத்திற்கும் மதுரைக்கும் இடையிலுள்ள வழியில் தும்பியும் வண்டும் ஒலிக்கின்றன. அவ்வொலியானது எழு துளையையுடைய புல்லாங்குழலிலும் ஐந்து துளையுடைய புல்லாங்குழலிலும் இசைச் சுருதியைப் போல உள்ளதாக நல்லந்துவனார் குறிப்பிடுகின்றார். இதனை,
“ஏழ்புழை யைம்புழை யாழிசை கேழ்த்தன்ன வினம்
வீழ்தும்பி வண்டொடு மிஞிறார்ப்ப” (பரி.8.22-23)
என்பதால் அறியலாம். மேலும்,
“கைவை திமிர்பு குழல் காண்குவோரும்” (பரி:19:41)
என்ற ஓரடி தவிரப் புல்லாங்குழல் என்ற ஓரடி பற்றிய செய்தி பரிபாடலில் காணப்படவில்லை.
யாழ்
குழற்கருவிக்கு அடுத்த நிலையிலிருப்பது யாழ் எனும் கருவி. குழற்கருவி முந்தையதாயினும் அதில் இல்லாத வாய்ப்பு யாழில் இருப்பதால் யாழ்க் கருவியின் மூலமே இசை அதிகமாக வளர்ந்தது என்பர். இசை நூல் வல்லோர். பரிபாடலில் யாழ் பற்றிய செய்தி பரவலாகக் காணப்படுகிறது. சங்க இலக்கியங்கள் மட்டுமின்றி, சிலப்பதிகாரம், பெருங்கதை முதலான காப்பியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் உள்ளன.
“புரிநரம்பின் கொளைப் புகல் பாலை யேழும்
எழூப்புணர் யாழும்” (பரி.7.77-78)
என்பதன் மூலம் யாழானது பாலையேழினையும் உடைய புரிதரம்பின் கண் இனிய இசையைத் தருகின்றது என்பதை அறியலாம்.
பட்டினப்பாலையில் இசைக்கலை
சங்ககாலத்தில் உள்ளோர் ஆடல், பாடல் இசைக்கருவிகளைக் கையாளுவதில் திறமை படைத்தவர்களாய்த் திகழ்ந்துள்ளனர்.
“முதுவாய் கோடியர் முயளின் ததும்பி” (பட்.பாலை.253(அடி))
கூத்தர்கள் முழவு முழக் குழலில் வல்லவர்களாகவும்,
“பாணர் படுமலை பண்ணிய எழாலின்” (குறுந்.பா.323)
பாணர்கள் யாழ் இசைத்தலில் வல்லவர்களாகவும் திகழ்ந்தமையினை இச்சங்கப் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.
குறுந்தொகையில் பாணர்
சங்ககாலக் கலைஞர்களாகக் குறிக்கத்தக்கவர்களில் பாணர், பொருநர், விறலியர், கூத்தர், ஓவியர், சிற்பர், துடியர் ஆகியோர் நிலை ஆராய்தற்குரியது. பண் என்னும் சொல்லை முதன்மையாகக் கொண்ட பாணர் பாடுவார். யாழிசைப்பார் என இரு வகைப்படுவர். இவரை யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பிரிப்பார். தலைவனுக்குத் தூதாக வந்த பாணனை ஏற்றுக் கொண்ட தலைவி அவனைப்பற்றித் தன் தோழியிடம்,
“அன்னா யிவனோ ரிளமா ணாக்கள்
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தினூரும் பெருஞ் செம்மனெ”(குறுந்.33)
என்று அவனின் நாவன்மையப் புகழ்கிறாள்.
குறுந்தொகையில் பறை
‘பறை’ என்பது எடுத்தியம்பல் என்னும் பொருள்படும். கூறுதல் என்னும் பொருளில் மலையாளத்தில் வழங்கப்பெறுகிறது. பறை, தமிழர் வாழ்க்கையோடு ஒன்றிய இசைக்கருவி யாழும், பறையும் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருளாக ஓதப்படும். பிற்காலத்தில் தான், ‘பறை’ இழவுக் கருவியாகிறது. நெய்தற்பறை மட்டுமே சாக்காட்டு பறையாகும்.
“பறைபடப் பணில மார்ப்ப இறை கொள்பு
தொன் மீதாலத்துப் பொதியில் தோன்றிய
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே”(குறுந்.15)
என்பதில் மணத்திற்குரியதாகப் பறை கூறப்பெற்றது.
முடிவுரை
காலந்தோறும் இசை என்பது பல்வேறு மாற்றங்களைப் பெற்றாலும் அவை மொழிகள் தோன்றும் முன்பே மனிதனின் தகவல் பரிமாற்றக் கருவியாக இருந்துள்ளது. அதன் வளர்ச்சி நிலையே சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. காலப்போக்கில் சங்ககால இசைக்கருவிகள் காணாமல் போனது. இருப்பினும் அவைகளைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. தற்போது இருக்கும் இசைக்கருவிகளையாவது நாம் பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முயல்வோம்.
பயன்பட்ட நூல்கள்
1. தமிழண்ணல் (உரை), குறுந்தொகை, முல்லை பதிப்பகம், சென்னை, பதி.2002.
2. சிதம்பரனார். சாமி (உரை), பட்டினப்பாலை, அறிவுப்பதிப்பகம், பதி.2008.
3. புலியூர்க்கேசிகன் (உரை), பரிபாடல், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பதி.2010.
4. பொ.வெ.சோமசுந்தரனார் (உரை), மதுரைக்காஞ்சி, கழக வெளியீடு, பதி.1956.
5. புலியூர்க்கேசிகன் (உரை), நற்றிணை, உமா பதிப்பகம், பதி.2013.
6. சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி நிகண்டுகள், சாந்தி சாதனா அறக்கட்டளை, பதி.2018.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.