நாலும் இரண்டும் உணர்த்தும் பெண்மை - ஓர் ஆய்வு
பேராசிரியர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு
முன்னுரை
வரலாறு தொடங்கிய நாள் முதல் ஆன்றோரும், சான்றோரும் தாம் நன்மை எனக் கண்டவற்றைத் தவறாது உலகிற்கு உணர்த்தி வந்துள்ளனர். எனினும் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையாத கருத்துகள் அமைத்து திருவள்ளுவரைப் போல உணர்த்தியவர்கள் உலகில் யாரும் இல்லை எனலாம். இதனால்தான் வான்மறை வள்ளுவத்தை “வாழ்க்கைப் பொருள் நூல்“ என அழைக்கிறோம். வள்ளுவரைப் போலவே நாலடியாரிலும் சமண முனிவர்கள் பெண்ணியக் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர். அவற்றை ஒருங்கு நோக்கி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பெண்
பெண் என்று சொன்னால் அழகு, அச்சம், மடம், நாணம் என்ற அடிப்படையில் பெண்ணுக்கெனத் தனியே சில அறங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வறங்கள் ஆண்களால் உருவாக்கப்பட்டதோடு அல்லாமல் அவ்வறங்களைப் பின்பற்றி வாழ்பவளே சிறந்த பெண் என்ற கருத்தையும் முன் வைத்தனர். இதனையே, இப்படித்தான் நெறியோடு வாழவேண்டும் என்று சத்தியக் கொள்கை கொண்டவள் எவளோ அவளே நல்ல பெண்மணி (திரு.வி.க., பெண்ணின் பெருமை ஓர் ஆய்வு, ப.1) என்கிறார் திரு.வி.க. பெண் குறித்த இந்த முரண்பாடான கருத்துக்கள் காலத்திற்கேற்ப எழுந்த நிலையில் நீதி நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த நிலையில் பேசப்படும். நாலடியாரிலும், பெண்ணுக்கான அறங்கள் சிறப்பாகப் பேசப்படுகிறது.
பெண்ணின் கடமை
பெண்ணின் கடமை குறித்து நாலடியார் பாவை நீரினைப் பகிர்ந்து உண்ணும் அளவிற்கு மிகுதியான வறுமை வந்த போதும், உறவினர் பலர் திரண்டு வந்த போதும் இனிமையாகப் பேசும் பண்பு பெற்றிருத்தல் வேண்டும் என்கிறது. இதனை,
”குடநீர் அட்டு உண்ணும் இடுக்கண் பொதும்
கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடன்நீர்மை கையாறாக கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்” (நாலடி பா.382)
என்ற பாடல் பறை சாற்றகிறது.
திருக்குறளும் பெண்ணியமும்
திருக்குறள் எவ்வளவு தான் பெண்ணின் பெருமை பற்றி கருத்துக்கள் எடுத்துரைத்தாலும், அப்பெருமையானது வழக்கமான ஆணாதிக்கக் கொள்கையில் பேசப்படுவதாகவும், ஆணுடன் ஒத்த நிகர்நிலை திருவள்ளுவரால் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை என்பதும் பெண்ணியக் கொள்கையினரின் கருத்தாகும்.
"தெய்வத் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்.55)
என்ற குறளானது, பிற தெய்வங்கள் எவற்றையும் தொழுது வணங்காது தன் கணவனை மட்டுமே தெய்வமாக நினைத்துத் தூங்கி எழும் குடும்பப் பெண், பெய் என்றதும் பொய்யாது பெய்யும் பருவ மழைக்கு இணையானவள் என்று கூறுகிறது. மனைவி எப்பொழுதும் கணவனுக்குத் தொண்டும் தொழும்பும் செய்து வாழ வேண்டும். அதுவே அவளுக்குச் சிறப்பு தரும் எனும் பெண்ணடிமைக் கருத்தையே எதிரொலிக்கின்றது என்பர் இக்காலப் பெண்ணியவாதிகள்.
இல்லறமே நல்லறம்
இல்லறம் ஒன்றே இயற்கையோடு இயைந்தது என்பதே திருவள்ளுவரது முடிவாகும். இருவேறு வகையில் விளங்கும் ஆண்மக்களின் பண்பும், பெண்மக்களின் பண்பும் ஒன்று சேர்ந்து உயர்ந்த ஒழுக்கத்தினை உலகில் விளக்குதலின் இல்லறமே நல்லறமாயிற்று. இதனையே,
”இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை” (குறள்.47)
என்ற குறள் மூலம் அறிவுறுத்துக்கின்றார். இயற்கையோடு மாறுபாடாமல் வாழும் இயல்பான இல்வாழ்க்கையையே அவர் சிறப்பித்துப் பேசுகின்றார். துறவைப் பற்றி பேசினாரேயன்றி பெண்ணைத் துறத்தலை ஒரிடத்து கூறவில்லை. பெண்ணோடு வாழும் வாழ்க்கையையே பெரிதும் போற்றுகின்றார். இல்லறமேற்று வாழும் பெண்களின் பெருமைகளைச் சிறப்பித்துப் பேசுகின்றார். இல்வாழ்க்கை என்பது அன்பையும் அறனையும் உடையது. இல்வாழ்க்கையை அறநெறியாலே நடத்த வேண்டும். அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை. இத்தகைய இல்லறத்தை நடத்தி இசைபட வாழ்பவன் இவ்வுலகின் கண்ணே இருந்தான் எனினும் வானுலகத்துத் தேவனாக மதிக்கப்படுவான் என்றும், தெளிவாக இல்லறச்சிறப்பினைக் கூறுகிறது.
”அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன்” (குறள் 46)
என்றும்,
”ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து” (குறள்.48)
என்றும் இல்வாழ்க்கையின் சிறப்பை வள்ளுவர் கூறுகின்றார். எனின் அவ்வில்லறச் சிறப்பெல்லாம் இல்லாளின் சிறப்பேயன்றேன். இவ்வில்லாள் தேர்ந்த கல்வியறிவு உடையவளாய் இருந்தாலன்றோ குடும்பம் களர்நிலமாக அன்றி நல்ல வினைநிலமாக இருக்க முடியும். இல்லறம் மேம்பட்டுத் திகழ வாழ்க்கைத் துணையாய் வரும் பெண் எத்தகையவளாக இருக்க வேண்டும் என்று வள்ளுவரே அறிவிக்கின்றார்.
பெண்ணின் நற்செயல்கள்
”தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (குறள். 56)
என்று அமைந்துள்ள குறட்பா வாழ்க்கைத் துணையாய் அமைகின்ற பெண் தன் நற்குண நற்செயல்களால் இல்லறத்தை மாட்சிமை பெற நடத்திச் செல்லும் திறமை படைத்தவள் என்னும் கருத்தையே அறிவிக்கின்றன. பெண், கல்வியறிவு அற்றவளாக இருப்பின் இத்தகைய மாட்சிமை அமைதற்கு வழியுண்டா?
ஈன்ற தாயின் சிறப்பு
”ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” (குறள்.69)
என்ற குறளுக்குத் தனக்குத்தானே அறிகின்ற அறிவு பெண்ணுக்கு இல்லாமையின் கேட்ட தாய் என வள்ளவர் அமைத்ததாகப் பொருள் கொள்வாருமுண்டு அக்கருத்தானது வள்ளுவருக்கு உடன்பாடன்று “காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு“ என்றபடி எந்தத்தாயும் தன் குழந்தையின் சிறப்பைப் பெருமைப்பட பேசுதல் இயல்பு. அவற்றின் உண்மையான சிறப்பை பிறர் கூறக் கேட்கும் போதுதான் இத்தாய் ஈன்ற பொழுதினும் பெருமகிழ்ச்சி அடைவாள் என்ற கருத்தே வள்ளுவர் காட்டுவதாகும்.
“புதல்வரைப் பெறுதல்“ என்று அதிகாரப் பெயரும், புதல்வன், புதல்வி ஆகிய இருபாலரையும் குறிக்கும் பொதுச் சொல்லாகும். அவ்வதிகாரத்தில் அமைந்து குறள்களில் வள்ளுவர் கூறும் செய்தி நன்மக்களைப் பெறுதல் என்பதேயாகும். “அறிவறிந்த மக்கள் பேறு என்றும், பண்புடைய மக்கள் என்றும், தம்மக்கள் அறிவுடைமை” என்றும் ஆண், பெண் இருபாலரையும் குறிக்கும். மக்கள் என்ற சொல்லையே அவர் வழங்குகின்றார் ”தன் மகனை“ என்றும் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” என்றும் ”தந்தை மகற்கு ஆற்றும் நன்றி” என்றும் மகனை வியந்து கூறுகின்றார். ஆண்மக்களையே திருவள்ளுவர்,
”அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்” (குறள்.64)
”மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (குறள்.65)
”குழலினிது யாழ் இனிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்” (குறள்.66)
என்ற குறள்கள் பெண் குழந்தையின் மழலைக்கு இனிமை இல்லை. ஆண் குழந்தையின் மெய்தீண்டலே இன்பம் ஆண் குழந்தையின் மழலை மட்டுமே குழலையும், யாழையும் வெல்லும் இனிமையைத் தருவது என்பது பொருந்தாக் கூற்றாய் அமையுமன்றோ?
வள்ளுவர் காட்டும் காமத்துப்பாலை நோக்குமிடத்தும் கல்வி அறிவுடைய பெண்களையே வள்ளுவர் சுட்டுகிறார். களவாவது ஒத்த அறிவும், ஒத்தத்திருவும், ஒத்த அழகும். குடியும் உடைய தலைமகனும், தலைமகளும் எடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி ஊழ்வயத்தால் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டுத் தம்மை மறந்து ஒன்று சேர்வதே ஆகும். எனவே ஆணைப்போல பெண்ணும் அறிவுடையவளே என்று கூறுகின்றார்.
இங்ஙனம் திருவள்ளுவரது முப்பாலையும் நோக்கும் இடத்து பெண்களைக் கல்வியறிவுடையவர்களாக இல்லறம் சிறக்க வந்த மாண்புடையவர்களாகவே காட்டுகின்றார் என அறியலாம். பெண் பிறவியே உயர்ந்த பிறவி என்றும், உயர்நிலை அடைதற்குத் தக்க பிறவி என்றும் கூறியதோடு, அப்பெண்ணின் தகுதியினையும் எடுத்துக்காட்டி உயர்ந்த பிறவிகளுள் எல்லாம் உயர்ந்தது பெண் பிறவி எனத் தம் கொள்கையை விளங்க வைக்கின்றார்.
”பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்” (குறள் 54)
கற்பு என்னும் திண்மை
தமிழர் பண்பாட்டு நெறி முறைகளுள் கற்பொழுக்கம் என்பது முக்கியமானதாகும்.
”உயிரினும் சிறந்தது நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத்” (தொல்.கள.நூ.எ.23)
என்ற தொல்காப்பிய நூற்பா கற்பின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது. நாலடியார் கற்புடை மகளிர் குறித்து கூறும்போது அவர்தம் கடமை, தலைக் கற்பு, குடும்பப் பொறுப்பு, உடல் சார்ந்த ஒழுக்கமுறை, பொறுமை ஆகியவற்றைக் கற்பினுள் அடக்கிக் கூறுகிறது.
வள்ளுவர் பெண்ணைச் சிறப்பித்துக் கூறுவது மட்டுமல்லாது. பெண்ணுக்கு என்று வற்புறுத்தப்படுகிறது. கற்பியல் கோட்பாடு இல்லறத்துக்கு இன்றியமையாதது ஆகும். இது பெண்ணுக்கு மட்டும் உரியதாக வள்ளுவர் கூறவில்லை. ஆணுக்கும் அது வற்புறுத்தப்படுகிறது. பெருமை என்ற அதிகாரத்தில் வரும்.
”ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு” (குறள்.974)
என்னும் குறளில் ஆணுக்கும் கற்பு வலியுறுத்தப்படுகின்றது. தன் கணவனை மட்டுமே நினைத்து வாழுகின்ற ஒருமை மகளிர் பாலத் தானும் (கணவனும்) தன் மனத்தை அலைபாய விடாமல் இல்லறத்தில் நிலைநிறுத்திக் கொண்டு ஆண் மகன் ஒழுக்கம் காத்தல் அவனுக்குப் பெருமை உரித்தாகும் என்று இக்குறள் எடுத்துரைக்கிறது. மேற்கண்ட கருத்தானது இல்லறவியல் கூறப்படாது, பொருட்பாலியல் குடியியலில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
”நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது” (குறள்.124)
என்ற குறளானது, இல்லற ஒழுக்கத்திலிருந்து வழுவாமல் அடங்கி வாழ்பவனின் நிமிர்ந்த தோற்றம் மலையைவிட மிகவும் பெரியதாகும் என்று உரைக்கிறது. கற்பொழுக்கத்துடன், கட்டுப்பாடுடன் வாழ வேண்டும் என்று பெண்களை வலியுறுத்துவது பெண்ணுரிமைக்கு மாறானது. பெண்களை அடிமைப்படுத்துவதற்காக ஆண்களால் திணிக்கப்பட்டது என்று சில பெண்ணியவாதிகள் கூறுகின்றனர்.
கற்பு குறித்து நாலடியார் தம் கணவருக்குச் சினம் உண்டாக்காதவராகவும், இன்முகத்தோடு உவந்தளிப்பராகவும், தன்னை விரும்பி பின்னே வேறொரு ஆடவர் இல்லாத தன்மையுமே தலைக்கற்பு என்று கருதுகிறது. இதனை,
”அரும்பெறல் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினு விரும்பிப்
பெருநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை” (நாலடி. பா.381)
என்ற பாடல் உணர்த்துகிறது.
குடும்ப வாழ்க்கையின் பெண்ணியம்
இல்லறவியலில் ஆண் குடும்பத் தலைவன் என்ற பொறுப்பை வகிப்பவன் ஆவன். இருப்பினும் குடும்ப வாழ்க்கைக்கே அடித்தளமாக இருப்பவள் பெண்ணே ஆவாள். பண்டைத் தமிழர் வாழ்வில் புறச்செயல்கள் ஆணைச் சார்ந்து நிகழ்வன. அச்செயல்கள் அனைத்தும் பெண்ணை ஒட்டியே நிகழ்ந்தன. ஆகவே ஆணைப் புறத்துக்கு உரிய தலைவனாகவும், பெண்ணை அகத்துக்குரிய தலைவியாகவும் மதித்துப் போற்றினர். ஆனால், பெண்ணியவாதிகள் குடும்ப அமைப்பு தேவையில்லை என்றும், இது பெண்ணைத் தளைப்படுத்துகிறது. மேலும் பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்று கூறுகிறார்கள்.
வறுமையுற்ற நிலையிலும் விருந்தினரை ஓம்பி மகிழ்விக்க மனைவியே குடும்பத்திற்குப் பொருத்தமானவள். மேலும், மென்சொற் பயிலும் பெண்ணே நல்வாழ்க்கைக்கு உரிய துணையாக அமைவாள் என்கிறது நாலடியார்.
”நால்ஆறும் ஆறாய் நனிசிறியதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தன்புகழும் மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்” (நாலடி. பா.383)
என்ற பாடலில் நாற்புறமும் மழைநீர் உள்ளே செல்லக்கூடிய அமைப்பினையுடைய சிறியதொரு வீட்டிலும் தன் கடமையிலிருந்தும் வழுவாமல், மக்களால் போற்றப்படும்படி திகழும் பெண்ணை உடைய வீடு உண்மை வீடாகக் கருதப்படுகிறது.
முடிவுரை
திருவள்ளுவர் அறத்துப்பாலில் பெண்களை உயர்வான இடத்தில் அமர்த்தி இருக்கிறார். காமத்துப்பாலில் ஆண், பெண் இருவரையும் சமநிலை இணையர் என்ற பொருளில் குறிப்பிட்டு பொருட்பாலில், பெண்களுக்கு ஏற்பட்டுள்ள இழிவு நிலைகளைச் சுட்டிக்காட்டி, திருவள்ளுவர் பெண்களின்பால் கொண்டிருந்த சமநோக்கை திருக்குறளின் மூலம் அறிய முடிகிறது. எந்தவிதப் பாகுபாட்டோடும் வள்ளுவர் பெண்களைப் பற்றிய கருத்துக்களைக் குறிப்பிடவில்லை. இக்கட்டுரை பெண்களின் தனிச்சிறப்புகள், இயல்புகள், இல்வாழ்க்கையில் அவர்களின் இன்றியமையாமை போன்ற பல செய்திகளை எடுத்துரைத்துள்ளது. பெண்களுக்கு உரிய அறங்களாக நாலடியார் கூறியவை அவர்களை ஒருவித அடிமைத்தளத்திற்கு இட்டுச் செல்வதையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அற்ற நிலையில் அவர்களை வைத்திருந்தமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
துணைநின்ற நூல்கள்
1. இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம், பொருளதிகாரம், கழக வெளியீடு, சென்னை, 1967.
2. திரு.வி.க., பெண்ணின் பெருமை, கௌரா புத்தக நிலையம், சென்னை, 2010.
3. பரிமேலழகர் உரை, திருக்குறள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2010.
4. புலியூர்க் கேசிகன்(உரை), நாலடியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 2013.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.