பக்தி இலக்கியங்கள் வழி தமிழர் இசைக்கலை
முனைவர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு
முன்னுரை
பக்தி நெறிக்கு ஆதாரமாக விளங்கும் இசைக்கலை, நெஞ்சக் கனகல்லையும், நெக்குருகச் செய்யும் வல்லமை வாய்ந்தது. இக்கலையில் நம்மவர் அன்றும், இன்றும் என்றுமே தலைசிறந்து விளங்குகின்றனர். மானுடன் மட்டுமா இசைக்கு இசைகிறான்? நான்மறைகளுக்கு அப்பாற்பட்ட இறைவனே இசையைக் கேட்டு மகிழ்ந்து அதில் திளைத்து, மெய்மறந்து நிற்கிறான். மேலும் தானும் இசைந்து பாடும் பக்தர்களையும், கேட்கும் அடியார்களையும் இசைவிக்கிறான். அவ்வாறான தமிழ் பக்தி இலக்கியங்களில் இசைக்கூறுகள் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளன என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இசையின் ஆற்றல்
இசை மனத்தைப் பண்படுத்தக்கூடியது. அனைவரையும் தன் வயப்படுத்தக்கூடியது. கீர்த்தனம் செய்து இறைவனை அடையலாம்.
“பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்” (திருப்பாவை 27)
அவன் நாமத்தை பாடுவதே அவர்களுக்கு கிடைத்தப் பரிசு என்கின்றார்கள். இதையே நம்மாழ்வாரும்,
“கீதங்கள் பாடினர் கின்னார் கெருடர்கள்” (திருவாய்மொழி(10-9-51))
“பண்பல பாடிப் பல்லாண்டிசை” (பெரியாழ்வார் திருமொழி 9-5)
இசையானது மனிதரை மட்டும் அல்லாமல் விலங்குகளையும் வசப்படுத்தவல்லது. கண்ணனின் குரலோசை கேட்டு பசுக்களும், மான்களும் கட்டுண்ட தன்மையை பெரியாழ்வார் பல பாசுரங்களில் பாடியுள்ளார்.
பெரியாழ்வார் ஆண்டாள் இருவரும் கண்ணன் மீது தீராத காதல் கொண்டவர்கள். பெரியாழ்வார் தன்னை தாயாக்கி, கண்ணனை குழந்தையாக்கி அவனுக்குத் தாலாட்டுப் பாடி மகிழ்கின்றார். தொட்டிலிட்ட குழந்தையை உறங்க செய்ய தாலாட்டுப் பாடும் போது தாலேலோ ஆரிரரோ என்பார்கள் இதை பெரியாழ்வார்,
“மன்னு புகழ் கௌசலையை தன்
மணி வயிறு வாய்த்தானே...
என்னுடைய வின்னமுதே
இராகவனே தாலேலோ” (திருமொழி-8)
இசைக்கருவிகள்
இசைக்கருவிகளைப் பற்றி ஆழ்வார்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றார்கள்.
“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத” (நாச்சியார் திருமொழி 6)
“யாழினிசை யமுதே யறிவின் பயனே யறியேறே
அதிர் குரல் சங்கத்து அழகர்கோயில்” (திரு 2-10.2)
மத்தளம், யாழ், சங்கு, புல்லாங்குழல் போன்று இசைக்கருவிகள் ஆழ்வார் பாடல்களில் பொதிந்து கிடக்கின்றன.
பெரிய புராணத்தில் இசை
பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிட்டுக் காட்டும் இடங்கள் திருஞான சம்பந்தர் புராணத்தில்,
“தான நிலைக்கோல் வடித்து
... ... ... ... ...
நான் மறையோர் அதிசயித்தார்” (திருஞானப் பாடல் 135)
இசைக்கலையின் சிறப்பினை பாங்குற எடுத்து இயம்புகின்றன திருமுறைகள்.
இது மட்டுமா? இசைக்கருவிகளின் நுட்பங்களையும் விளக்கிக் கூறுவார் தெய்வச் சேக்கிழார். குழல் அமைப்பு, அதன் இலக்கணம். குழல் இசையின் தன்மை, இசைக்கும் முறை இவை அனைத்தும் திருமுறைகளில் நுணுக்கங்கள் பெரிய புராணத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணத்தில் காட்டப்பெறும்.
“யாழில் எழும் ஓசையுடன்” (திருஞான. 136)
இவ்விதம் யாழ் வாசிப்பவர் திறன்மட்டுமல்லாது. அவ்விசை வெள்ளத்தைச் செவிமடுக்கும் பக்தர்கள் அடையும் மகிழ்ச்சியையும் நிழற்படம் பிடித்துக் காட்டுவார் சேக்கிழார். மேலும் இசைக்கலையின் உயிர்நாடியாகிய பண், அதன் உள்ளுறையாகிய உயிர்ப்பொருள் போன்றனவற்றையும் சேக்கிழார் அழகுற எடுத்துக் கூறியுள்ளார்.
தோலிசைக் கருவிகள்
பெரிய புராணத்துள் குறிப்பிடப்பெறும் தோலிசைக் கருவிகள் முரசம், துந்துபி, முழவு, தண்ணுமை, படகம், ஆகுளி (சிறுகட்பறை), பேரி, பம்பை, துடி, திமிலை, தட்டி, தொண்பகம் (குறிஞ்சிப்பறை) முதலியன. முரசமும் முழவமும் சிறந்த மங்கலக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அடர்ந்த கூந்தலை உடைய மங்கையரின் ஆடலரங்குகளில் முழவு பயன்படுத்தப்பட்டுள்ளதென்பதை,
“முழவறாதன மொய்குழலியர் நட அரங்கம்” (ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்-3157)
என்ற சேக்கிழாரின் பாடல்வரி புலப்படுத்தும். முரசறைந்து பொருட்கொடை அளித்த குறிப்பு பற்றிய செய்தி.
“இன்றுங்கள் மனை எல்லைக்குட்பட்டு நெற்குன்றெல்லாம்
பொன்றங்கு மாளிகையிற் புகப் பெய்து கொள்க என
வென்றி முரசறைவித்தார் மிக்க புகழ்ப்பரவையார்” (ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்-3182)
என்ற பெரியபுராண வரிகளிலிருந்து பெறப்படுகிறது. முரசின் பயன்பாடு பலவகைப்பட்டதாய் பழங்காலந் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. முரசு திண்ணிய தோல்வார்களால் வலிநத்துக் கட்டப்பட்டது. வீரமுரசு, போர்முரசு, விருந்துண்ண, குருதி பலி கொடுக்கும் போது என்று முரசின் பயன்பாடு நீண்டது.
தாளக் கருவிகளுக்குப் பொதுவான பெயராகவும் பறை குறிக்கப்படுகின்றது. வாரால் விசித்துக் கட்டப்பட்டது. இக்கருவி ஒரு முகம், இருமுகம் உடையது. போர்ப்பறை, வெருப்பறை, வெறியாட்டுப் பறை என பறை பலவகைப்படும். கண்ணப்ப நாயனாராகிய திண்ணன் வேட்டைக்குப் புறப்பட்டபொழுது முன்னால் கொம்புகள் ஊதப்பட்டன. அதனையடுத்துச் சிறுபறைகள் முழங்கப்பட்டன. பம்பைகள் கொட்டப்பட்டன. இவ்வாறு பல்லோசைகளும் சேர்ந்து அங்கே இசை பெருகிற்று என்ற செய்தியினை,
“கோடு முன் பொலிக்கவும் குறுங்கணா குளிக்குலம்
மாடு சென்றிசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்
சேடு கொண்ட கைவிளிச் சிறந்த ஓசை செல்லவும்” (கண்ணப்ப நாயனார் புராணம் -721)
என்ற இவ்வரிகள் மூலமாக சேக்கிழார் பெருமான் விளக்குகிறார். வேடர் கூட்டங்களில் உடுக்கை, ஊதுகொம்பு, பறை என்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது கண்ணப்ப நாயனார் புராணச்செய்தி. அதைச் சுட்டும் பாடல்,
“சில்லரித்துடியும் கொம்பும் சிறுகண் ஆகுளியும்” (கண்ணப்ப நாயனார் புராணம்-654)
என்பதாகும் துந்துபி என்ற இசைக்கருவி குறித்த செய்தி,
“அரிக்குறுந்துடியேயன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த” (கண்ணப்ப நாயனார் புராணம்-663)
என்ற பாடல் வரி மூலம் பெறப்படுகிறது. வேடுவர் திருவிழாக்காணும் போது பறை, முரசு, முங்கில் வாத்தியங்களின் பேரோசை கேட்கும் என்று கூறும் வகையில்,
“தொண்டக முரசும் கொப்பும் துடிகளும் துளைகொள்
எண்டிசை நிறைந்து எழுந்த பேர் ஒலி” (கண்ணப்ப நாயனார் புராணம்-687)
என்பார்.
நரம்பு இசைக் கருவிகள்
பொதுவாக இவை ஏழிசைக்கும் பொருந்தி நிற்கக் கூடியவை. சுர அமைப்புகளில் இனிமையாகவும், மென்மையாகவும் பொருள்படுமாறு பேசும் திறமுடையவை, பெரியபுராணத்தில் விபஞ்சி, யாழ், வீணை முதலிய நரம்பிசைக் கருவிகளைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன.
“ஏதமில் விபஞ்சி வீணையாழொளி ஒருபால் ஏத்தும்” (திருஞானசம்பந்தர் புராணம்-3098)
என்ற பாடல் வரியில் விபஞ்சி என்ற இசைக்கருவி குறிக்கப்பெறுகிறது. விபஞ்சி என்றால் ஏழு நரம்புடைய வீணை போன்ற இசைக்கருவி என்பர்.
யாழ் என்ற கருவி பலவகைப்படும். அவை நிலத்திற்கேற்பவும், பண்ணிற்கேற்பவும், மருதயாழ். குறிஞ்சியாழ், பாலை விபஞ்சி என்றும் குறிக்கப்படுகின்றன. யாழ் என்ற நரம்புக் கருவி சங்கக் காலத்திற்கு முன்பிருந்தே தலைமையான இடத்தைப் பெற்றுள்ளது. ஆழி என்பதன் திரிபே யாழ் என்றும், யாழும், வீணையும் ஒன்றே என்றும் சில அறிஞர்கள் கூறுவர். சங்க இலக்கியத்தில் பதிவு பெறாத, ஆனால், பிற்கால இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ள நரம்புக்கருவி வீணை என்பது ஐயமுற விளங்கும். திருநாளைப் போவார் புராணத்துள்.
“போர்வைத் தோல் விசிவாரென்றினையவும் புகலுமிசை
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையாற்” (திருநாளைப்போவார் புராணம்-1054)
என்ற பாடலை நோக்குகையில் வீணை, யாழ், ஆகிய நரம்பிசைக் கருவிகளைப் பற்றி அறிய முடிகிறது. சேக்கிழாரும் வீணைக்கும் யாழுக்கும் வேறுபாடு காட்டவில்லை என்பதும் புலனாகிறது. திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணத்தில் யாழ் பற்றிய செய்திகள் காணக்கிடக்கின்றன.
“இறைவன் தன்சீர்
திருத்தகும் யாழிலிட்டுப் பரவுவார்” (திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணம்-4215)
திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்கிறார் சேக்கிழார் பெருமான், யாழ்க்கருவியில் இடப்பட்டப் பாடலை இசைத்துப்பாடி இறைவனின் பேரருள் திறத்தைப் பெற்றவர் திருநீலகண்டர் எனக் குறிப்பையும் தருகிறார் பெரிய புராண ஆசிரியர்.
துளை இசைக்கருவிகள்
வாயால் ஊதிக் காற்றால் இயக்கப்படும் இசைக்கருவிகள். அவற்றுள் துளையிட்டு வாசிக்கும் கருவியாகிய குழல் மிகச்சிறந்தது. இதனை வாங்கியம் என்றும் கூறுவர். கருங்காலி, செங்காலி, சந்தனம், வெண்கலம் முதலியவற்றாலாகிய குழல்களை விட மூங்கிலாலாகிய குழலே இனிமையிற் சிறந்தது. தாளம், சின்னம், காளம் என்பனவும் துளை இசைக் கருவிகளே. ஆநிரைகள் மேயும் பொழுது வேய்ங்குழலையெடுத்து ஐந்தெழுத்தை அமைத்து வாசித்தவர் ஆனாய நாயனார். துளைக்கருவிக் குழல் இசைப்பதை கேட்கும் உயிர்க் கூட்டமெல்லாம் கிளர்ச்சியுற்று நிற்கும்.
“...கானகத்தின்
மேவு துளைக் கருவிக்குழல் வாசனை மேற்கொண்டார்” (ஆனாய நாயனார் புராணம்-937)
என்ற பெரிய புராணவரிகள் குழல் என்ற இசைக்கருவியைக் குறிக்கிறது. மூங்கிலைத் தேர்ந்தெடுப்பது முதல் இலக்கணப்படி துளையிட்டமைப்பது, வாசிப்பது வரையிலுமுள்ள சிறந்த கலை நுணுக்கச் செய்திகள் ஆனாய நாயனார் புராணத்துள் கூறப்பட்டுள்ளன.
“முந்தை மறை நூன் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய்
அந்த முதல் நாலிரண்டில் அரிந்து நரம்புறுதானம்
வந்த துளை நிரையாக்கி வாயு முதல் வழங்கு துளை
அந்தமில் சீர் இடையீட்டின் அங்குலி எண்களின் அமைத்து” (ஆனாயநாயனார் புராணம்-938)
எடுத்த குழற் கருவி என்று அக்கருவியைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் சேக்கிழார். அதாவது மூங்கிலில் நுனியில் நான்கு பங்கிலும், அடியில் இரண்டு பங்கிலும் அரிந்து இடைப்பட்ட பகுதியை எடுத்து, சுரங்களில் எழும் தானங்களின் வந்த துளைகளின் வரிசையை ஏற்படுத்தி முதலில் காற்று உண்டாக்க ஒவ்வோர் அங்குல அளவில் துளைகள் செய்து அமைக்கப்பட்டது தான் துளை இசைக்கருவியாகிய வேய்ங்குழல், இறைவனால் சம்பந்தருக்கு வழங்கப்பெற்ற தாரை சின்னம், காளம் ஆகிய ஊதுகருவிகள் அவருடைய வருகையை மக்களுக்கு உணர்த்தப் பயன்பட்டன.
கஞ்சக் கருவிகள்
தாளம், கண்டை என்பவை கஞ்சக் கருவிகளாகக் குறிக்கப்பெறுபவை. பொதுவாக இக்கருவிகள் கணீர் எனும் தாளவோசைக்காக கஞ்சத்தால் செய்யப்படுபவை. கஞ்சம் என்பது வெண்கலத்தைக் குறிக்கும். திருக்கோலக்கா இறைவன் ஐந்தெழுத்துப் பொறிக்கப்பட்ட பொற்றாளத்தைச் சம்பந்தருக்கு அருளினார் என்ற பெரிய புராணச் செய்தி பொற்றாளம் என்ற கஞ்சக் கருவியைப் பற்றிக் கூறுகின்றது.
“பிள்ளையார் திருத்தாளங் கொடுபாடப் பின்பு பெரும்
பாண்ணார் தாம்
தெள்ளமுத இன்னிசையின் தேமபொழி தந்திரியாழைச்
சிறக்க வீக்கி” (திருஞான சம்பந்தம் புராணம்-2356)
என்ற வரிகளில் ஞானப் பிள்ளையார் திருத்தாளத்தைக் கொண்டு அளவு ஒத்து அறுத்து பதிகம்பாட அதைப் பின் தொடர்ந்து பாணரும் பாடினார் என்பது பெறப்படுகிறது.
திருஞானசம்பந்தர்
இறைவனுக்குரிய வழிபாட்டுப் பொருள்களுள் முக்கியமானது இசையாகும். திருவீழிமிழலையில் பஞ்சம் ஏற்பட்ட காலத்து மக்களின் பசி தீர்ப்பதற்காக நாள்தோறும் படிக்காசு இருவருக்கும் (சம்பந்தருக்கும் அப்பருக்கும்) அளிக்கப்பட்டது. இறைவன் ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய இன்னிசைத்தமிழ் மாலைகளைக் கேட்கும் பெரும் விருப்பத்தால் நாள்தோறும் படிக்காசு அருளியதைச் சுந்தரர்.
“தமிழோடு இசைக்கேட்கும் இச்சையா காசு நித்தம் நல்கினர்” (திருவீழிமிழலை, 642/1)
ஒரே நாளில் இறைவன் மொத்தக்காசுகளை இருவருக்கும் நல்கியிருக்கலாம். ஆனால், தமிழிசைப் பாடல்களை விரும்பிக் கேட்கும் தன்மையால் இறைவன் நித்தம் ஒரு காசு நல்கினார் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர் இசைப்பாடல்களைப் பாடி இறையருளைப் போற்றி வியந்து இசையால் இறைவனைப் புகழ்வதைத் தம் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர். பல்வேறு பண்களால் பாடல்களைப் பாடியருளி உள்ளார். சான்றாக,
“சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” (நான்காம் திருமுறை, பா.6)
என்ற தேவாரத்தில் நீராலும், பூவாலும் தூபமிட்டு இறைவனை வழிபடுவது வழக்கமாகும். அவ்வாறு செய்வதை தாம் மறக்கவில்லை. திருநாவுக்கரசர் இறைவனின் புகழை இனிய தமிழிசைப்பாடல்களால் விளக்கி மனமுருகிப் பாடியருளி உள்ளார். இதனை மற்ற வழிபாட்டு முறைக்கு ஈடு இணையாகக் கருதுகிறார் என்பது தெரியவருகிறது. மேலும் தமிழுக்கும், இசைக்கும் திருநாவுக்கரசர் கொடுத்துள்ள மதிப்பு இதனால் நன்கு விளங்குகிறது.
சுந்தரர்
இசையின் வடிவினனாகவும், இசையை விரும்புபவனாகவும் திகழ்பவர் சிவபெருமான். இவர் மண்மேல் நம்மை “சொற்றமிழால் பாடு” என்று ஆணையிட சுந்தரர் அன்று தொடங்கி, தம் வாழ்நாள் முழுமையும் இன்னிசையால் தேவாரம் பாடி இறைவனை வழிபட்டார்.
“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய்யான்செய்யும் தூரிகளுக்குடனாகி
மாலை ஒண்கண் பரவையைத் தந்தாண்டானை
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆருர்இறைவனையே”(ஏழாம் திருமுறை, பா.10)
என்று இறைவனை இசையாகவே பாவித்துப் பாடியருளியுள்ளார்.
முடிவுரை
பாடல்களுக்கு உயிரோட்டத்தை அளிப்பது இசைக்கருவிகளின் இசை, இறைவனை ஓர் இசைக் கலைஞர் என்னும் நோக்கோடு பதிகங்களைப் பாடியுள்ளனர் நாயன்மார்கள். மக்களோடு ஒன்றிய மக்கள் பயன்படுத்தியக் கருவிகள் மட்டுமே நிலைத்து நிற்கக்கூடியவை. இன்று பல இசைக்கருவிகள் காண்பதற்கு அரியனவாய் உள்ளன. சேக்கிழாரின் பாடல்கள் தமிழுக்கும், கருவிப்பாட்டிசைக்கும் கிடைத்த பெருங்கொடையாகும். அவர் தம் இசைக்குறிப்புகள் அக்கால இசையுணர்வையும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறாக இசையென்பது தமிழர் வாழ்வோடு இரண்டற கலந்த ஒன்றாகவே காலங்காலமாக இருந்து வந்துள்ளது. பக்தி இலக்கிய காலத்தில் சைவமும் வைணவமும் மாறிமாறி தமிழிசைக்குத் தொண்டாற்றியுள்ளன என்றால் அது மிகையாகா. தேவாரப்பாடல்கள் இசைப்பண்களாகவே இருப்பதை நாம் இக்கட்டுரையின் வழி உணரலாம். இசை என்பது மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரையில் அவனோடு பயணிக்க வல்லது, மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதை நாம் இக்கட்டுரையின் வழி அறியலாம்.
பயன்கொண்ட நூல்கள்
1. திருவேங்கட ராமானுஜதாசன். த., நாலாயிர திவ்ய பிரபந்தம்,உமா பதிப்பகம், சென்னை-2012.
2. சேக்கிழார், பெரியபுராணம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரன் குழுமம், ஸ்ரீவைகுண்டம், 1970.
3. திருஞானசம்பந்தர், தேவாரம், திருபானந்தாள் காசிமடம், திருபானந்தாள், 1996.
4. திருநாவுக்கரசர், தேவாரம், திருபானந்தாள் காசிமடம், திருபானந்தாள்,1995.
5. சுந்தரர், தேவாரம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரன் குழுமம், ஸ்ரீவைகுண்டம், 1965.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.