இரட்டைக் காப்பியங்களில் குடும்பப் பெண்கள்
முனைவர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு
முன்னுரை
சமுதாயத்தின் அடிப்படை அழகு குடும்பமாகும். ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கையைக் குடும்பம் என்றழைப்பர். குடும்ப வாழ்வியலின் நலனைப் பொறுத்துதான் சமுதாய நலனை நம்மால் கணிக்க முடிகிறது. அவ்வாறான குடும்பத்தில் பெண்களின் நிலை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.
குடும்பம்
குடும்பம் என்பதற்குச் சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல் விளக்க அகராதி, “ஒன்றுக்கு மேற்பட்ட உறவினர், மண உறவினர் மற்றும் தத்தெடுக்கப்பட்டோர் ஒன்றாக வாழ்வது குடும்பமாகும். இது ஒரு முக்கியமான சமூக நிறுவனமாகும். குடும்ப அங்கத்தினர்களின் தன்மையைப் பொறுத்துத் தனிக் குடும்பம், கூட்டுக் குடும்பம் எனக் குடும்பம் பல வகைப்படும்”
(தா. இராபர்ட் சத்திய சோசப்., (தொ.ஆ) சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல் விளக்க அகராதி, ப.8) என்று விளக்கமளிக்கின்றது.
குடும்பம் என்பதற்கு, “ஒரு கணவனும் மனைவியும் தங்களுடைய பிள்ளைகளுடன் இணைந்து வாழும் அமைப்பாகும். குடும்பம் என்பது அமைய கணவன் மனைவி பிள்ளைகள் ஆகிய மூவரும் அவசியம்”
(சு. உஷா., அற இலக்கியச் சமுதாயம், ப.11) என்று ச.உஷா விளக்கமளித்துள்ளார். இத்தகையக் குடும்பமானது சமுதாய மதிப்புகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
ஒரு குடும்பம் திருமணத்தின் அடிப்படையில் அமைந்து தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம் என்று வகைப்படுத்தப்படுகின்றது. கோவலன், கண்ணகி திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்த அவர்களின் பெற்றோர்கள் சில நாட்கள் கழித்து அவர்களைத் தனி மனைக்கண் இருத்தியதை இளங்கோவடிகள் சுட்டுகின்றார். இதனை,
“வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க”
(சிலம்பு., மனையறம் படுத்த காதை, அடிகள் : 87-88)
என்ற அடிகளின் வழியாக உணர முடிகிறது.
திருமணம் நடந்தேறியதும் அவர்களைத் தனிக்குடும்பமாக அமர்த்தாமல் சில நாட்கள் தங்களுடன் வைத்திருந்து இல்லற நெறிகளை எடுத்துக் கூறி, அதன் பின் அவர்களுக்குச் சமுதாயத்தில் தனி மதிப்பு ஏற்படும்படி செய்த பெற்றோர்களின் மனநிலையை நன்கு உய்த்துணர முடிவதோடு, இளங்கோவடிகள் குறிப்பிடும் தனிக் குடும்பத்தைப் பற்றியும், ஓர் ஆணின் தலைமை அதிகாரத்தில் இயங்கும் தந்தையாட்சிக் குடும்பத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.
கொலைக்களக் காதையில், கோவலன் கண்ணகியிடம் பேசும் மொழிகளால் கண்ணகி தாய், தந்தை முதலியோருடனும், குற்றேவல் மகளிருடனும், தோழிமாருடனும் வாழ்ந்து வந்தவள் என்பதை அறிய முடிகின்றது. இதனை,
“குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி”
(சிலம்பு., கொலைக்களக்காதை, அடிகள் : 84-85)
என்ற அடிகளின் வாயிலாக அறியலாம். கண்ணகியை மாதரியிடம் அடைக்கலப் பொருளாக ஒப்படைக்கும் போது கவுந்தியடிகள்,
“ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே ஆகித் தாங்கு”
(சிலம்பு., அடைக்கலக்காதை, அடிகள் : 135-136)
என்று குறிப்பிடுவதால்; தோழி, செவிலித்தாய், தாய் ஆகியோருடன் கண்ணகி வீட்டில வாழ்ந்து வந்தவள் என்பது அறியப்படுகின்றது.
கோவலன், கண்ணகியை விட்டுப்பிரிந்து மாதவியுடன் வாழ்க்கை நடத்திய போது, கண்ணகி தன் வருத்தத்தைப் பெற்றோர் அறியாமல் மறைத்து வந்தாள். அவள் உள்ளத்தின் துயரைப் பெற்றோர் உணர்ந்து கொண்டதை,
“பெருமகள் தன்னோடும் பெரும்பெயர்த் தலைத்தாள்…
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாயன் முறுவற் கவருள்ளகம் வருந்த”
(சிலம்பு., கொலைக்களக்காதை, அடிகள் : 74-80)
என்று மிக்க அன்புடன் கண்ணகியின் பொறுமையைப் பாராட்டினர் எனக் குறிப்பிடுகிறது. கண்ணகி இதயத்தில் மறைத்து வைத்திருந்த மெய் வருத்தமும், மனக் கவலையும் வெளிப்பட்டு வாய் திறந்து சொல்வது போல இருந்ததென்று கண்ணகியின் பொய் முறுவல் கண்டு பெற்றோர் வருந்தினர் என்பதால் கூட்டுக்குடும்பத்தின் அன்பும், பண்பும் புலப்படுகிறது.
கூட்டுக்குடும்பத்தில் பல வகைப்பட்ட உறவுகள் இடம் பெறுகின்றனர். மைத்துனன் (மனைவியுடன் பிறந்தவன்), நாத்தூணங்கை (கணவனுடன் பிறந்தவள்), மாமன் (தாயுடன் பிறந்தவன்), அம்மாமி (அத்தை என்பதற்குப் பார்ப்பனரிடையே வழங்கப் பெறும் சொல்). மாமி, அவ்வை, நற்றாய், மாற்றாள் முதலிய உறவுமுறைப் பெயர்களைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவதால் அக்காலத்தில் கூட்டக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற பிரிவு இருந்ததை உணரமுடிகிறது. குறிப்பாகப் பெண்கள் திருமணத்திற்கு முன் தன் வீட்டில் கூட்டுக்குடும்பமாகவும், மணமாகிச் சென்றவுடன் இருவீட்டாரின் ஒப்புதலோடு தனிக்குடும்பமாகவும் வாழும் வாழ்க்கை முறையினைக் காணமுடிகின்றது. தனிக்குடும்பமாக அமர்த்தப்படும் முறை பெரும்பாலும் மேல்தட்டு மக்களிடமே காணப்படுகிறது.
குடும்பத்தில் பெண்
இரட்டைக்காப்பிய காலத்தில் வாழ்ந்த பெண்களின் நிலையை அவர்கள் வாழும் சூழ்நிலையினைக் கொண்டு அறியமுடிகின்றது. குடும்பத்தில் பெண், மனைவி, தாய் என்ற சிறந்த இடத்தைப் பெறுகின்றாள். குடும்பத்தில் இல்லாளுக்கு இருக்கும் சிறப்பை,
“மக்களின் ஓம்பு மனைக்கிழத்தி” (சிலம்பு., அடைக்கலக்காதை, அடி : 173)
“பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி” (சிலம்பு., அழற்படுகாதை, அடி : 133)
என்று இளங்கோவடிகள் பாராட்டுகின்றார்.
அக்காலத்தில் மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்து வந்தனர் என்ற கருத்தை, கண்ணகியின் திருமண வயது கொண்டு உணர முடிகின்றது. திருமணம் ஆகும் போது கண்ணகிக்குப் பன்னிரு வயது என்பதை ஈராறு ஆண்டு அகவையாள் என்று குறிப்பிடுவதால் பெண்ணின் திருமணத்தைப் பெற்றோரே முடிவு செய்யும் நிலையும், பெண்களுக்குச் சிறுவயதில் திருமண செய்யும் முறையும் மேல்தட்டு மக்களிடம் காணப்பட்டதை உணரமுடிகிறது.
கற்பு
பெண்களுக்கு இன்றியமையாத பண்பு கற்பு. இது தொல்காப்பியர் காலம் முதல் சொல்லப்பட்டு வருகின்றது. “கற்பு” என்ற சொல்லின் பொருள் காலம் தோறும் மாறுபட்டு வந்துள்ளது. தொல்காப்பியர் திருமணச் சடங்கைக் கற்பு எனக் குறிப்பிடுகின்றார். அச்சம், நாணம், மடம் ஆகிய பண்புகளுடன் இல்லறக் கடமைகளில் சிறந்து விளங்குவதே கற்புடைமை என்ற கருத்துத் தொல்காப்பியர் காலத்திற்குப்பின் ஏற்பட்டது. கணவனைத் தவிர பிற ஆடவனை மனத்தாலும் எண்ணாத தன்மை கற்பு எனப்பட்டது. இரட்டைக்காப்பிய காலத்திலும் கற்பு இக்கருத்துடன்தான் ஆளப்படுகின்றது. மனத்திண்மை, ஒழுக்கத் திண்மை என்ற பொருளுடன் சிலப்பதிகாரத்தில் கற்பு என்ற சொல் ஆளப்பட்டுள்ளது.
“மங்கை மாதர் பெருங்கற்பு”
(சிலம்பு., கானல்வரி, அடி : 2)
“மன்னு மாதர் பெருங்கற்பு”
(சிலம்பு., கானல்வரி, அடி : 3)
“புரைதீர் கற்பின் தேவி”
(சிலம்பு., அழற்படுகாதை, அடி : 6)
“மாசில் கற்பின் மனைவி”
(சிலம்பு., புறஞ்சேரியிறுத்தகாதை, அடி : 102)
“கற்புக்கடம் பூண்டு காதலன் பின்போந்த”
(சிலம்பு., வாழ்த்துக்காதை, அடி : 4)
என்று இளங்கோவடிகள் கற்பின் தன்மையைச் சுட்டுகின்றார். வள்ளுவர்,
“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மை யுண்டாகப் பெறின்”
(குறள்., 54)
என்று குறிப்பிடுவர். பெண்கள் கற்புடன் வாழ்வது சிறப்பு என்று அறிவுறுத்தப்பட்டனர். கற்புடைய மகளிர் வாழும் நாட்டில் வானம் தவறாமல் மழை பொழியும், விளைச்சலும் குறையாது. நாட்டு மன்னனுக்கு வெற்றியும் தவறாது என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவியதை,
“வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது”
(சிலம்பு., அடைக்கலக்காதை, அடிகள் : 145-146)
என இளங்கோவடிகள் கூறுவதன் மூலம் இக்கருத்தினை அறியலாம்.
பெண்களின் கடமைகள்
மாலை நேரங்களில் பெண்கள் முல்லை மலரை நெல்லுடன் தூவி இறைவனை வழிபட்ட முறையை,
“அகனகர் எல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்” (சிலம்பு., கனாத்திறம் உரைத்தகாதை, அடிகள் : 1-3)
என்ற அடிகளின் வாயிலாக அறிய முடிகின்றது. திருமால், முருகன் முதலிய தெயவங்களைப் பெண்கள் வணங்கியதாகவும் தெரிகின்றது. சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பும் பண்பு மனையறமாகக் கருதப்பட்டதை,
“விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலம்பு., கொலைக்களக்காதை, அடி : 73)
என்ற அடி உணர்த்துகின்றது. கொலைக்களக் காதையில், கோவலனிடம் தங்களைப் பிரிந்து வாழ்ந்த போது தன்னால் இல்லறக் கடமைகளைச் சரிவரச் செய்ய முடியாமல் போய்விட்டது என்று கண்ணகி கூறுகின்றாள்.
கவுந்தியடிகளால் அடைக்கலமாகக் கொடுக்கப்பட்ட கோவலன், கண்ணகி இருவரையும் மாதரி தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று போற்றிய தன்மை விருந்து புறந்தரும் சிறப்பை வெளிப்படுத்துகிறது. கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் வாழ்ந்த காலத்தில் கண்ணகி தன்னை ஒப்பனை செய்து கொள்ளவில்லை என்பதனை,
“அம்செஞ் சீறடி அணிசிலம் பொழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்க…
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்” (சிலம்பு., அந்திமாலைச் சிறப்புச்செய்காதை, அடிகள் : 47-58)
என்ற அடிகள் உணர்த்துவதால் கணவனைப் பிரிந்தப் பெண்களுக்கிருந்த சமுதாயக் கட்டுப்பாடுகள் புலப்படுகிறது.
பிற மகளிர்
அக்காலத்தில் பெண்கள் கணவனை இழந்த பிறகு உயிர்வாழ விரும்பவில்லை. பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்நீத்த அக்கணமே பாண்டியமாதேவியும் இறப்பதை,
“கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று” (சிலம்பு., வழக்குரைக்காதை, அடி : 80)
என்ற அடியின் மூலம் அறியமுடிகின்றது.
கண்ணகி, தன் கணவன் இறந்ததும் தானும் இறக்கவில்லை. கோவலன் கள்ளமற்றவன் என்பதை உலகுக்கு உணர்த்தவே அவள் சில காலம் உயிர் வாழ்ந்து பின்னர் வானுலகை அடைந்தாள்.
கோவலன் இறந்த பின், மணிமேகலையை வளர்க்கும் பொறுப்பு மாதவிக்கு இருந்ததால் உயிர் துறக்காமல் துறவை மேற்கொண்டாள். கணவனுக்குப் பின் உயிர் வாழ விரும்பாத பெண், கணவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைக்காகச் சிறிது காலம் வாழ்ந்த பெண், தன் குழந்தைக்காகத் துறவை மேற்கொண்டு வாழ்ந்த பெண் என்ற மூவகையினரைச் சிலப்பதிகாரச் சமுதாயம் காட்டுகின்றது.
“கைம்மைகூர் துறைமூழ்கும் கவலையை மகளிரைப்போல்” (சிலம்பு., துன்பமாலை, அடி : 43)
தான் வாழ விரும்பவில்லை என்பதைக் கண்ணகி கூறுவதால் கைம்மை நோன்பு இயற்றி வாழ்ந்த மகளிரும் அக்காலத்தில் இருந்தனர் என்பது தெரிகின்றது.
முடிவுரை
குடும்ப வாழ்வியலின் நலனைப் பொறுத்துதான் சமுதாய நலனை நம்மால் கணிக்க முடிகிறது. கோவலன் இறந்த பின், மணிமேகலையை வளர்க்கும் பொறுப்பு மாதவிக்கு இருந்ததால் உயிர் துறக்காமல் துறவை மேற்கொண்டாள். கணவனுக்குப் பின் உயிர் வாழ விரும்பாத பெண், கணவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைக்காகச் சிறிது காலம் வாழ்ந்த பெண், தன் குழந்தைக்காகத் துறவை மேற்கொண்டு வாழ்ந்த பெண் என்ற மூவகையினரைச் சிலப்பதிகாரச் சமுதாயம் காட்டுகின்றது. கவுந்தியடிகளால் அடைக்கலமாகக் கொடுக்கப்பட்ட கோவலன், கண்ணகி இருவரையும் மாதரி தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று போற்றிய தன்மை விருந்து புறந்தரும் சிறப்பை வெளிப்படுத்துகிறது. கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் வாழ்ந்த காலத்தில் கண்ணகி தன்னை ஒப்பனை செய்து கொள்ளவில்லை.
பெண்கள் கற்புடன் வாழ்வது சிறப்பு என்று அறிவுறுத்தப்பட்டனர். கற்புடைய மகளிர் வாழும் நாட்டில் வானம் தவறாமல் மழை பொழியும், விளைச்சலும் குறையாது. பெண்களுக்கு இன்றியமையாத பண்பு கற்பு. இது தொல்காப்பியர் காலம் முதல் சொல்லப்பட்டு வருகின்றது. “கற்பு” என்ற சொல்லின் பொருள் காலம் தோறும் மாறுபட்டு வந்துள்ளது. தொல்காப்பியர் திருமணச் சடங்கைக் கற்பு எனக் குறிப்பிடுகின்றார். ஒரு குடும்பம் திருமணத்தின் அடிப்படையில் அமைந்து தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம் என்று வகைப்படுத்தப்படுகின்றது. கோவலன், கண்ணகி திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்த அவர்களின் பெற்றோர்கள் சில நாட்கள் கழித்து அவர்களைத் தனி மனைக்கண் இருத்தியதை இளங்கோவடிகள் சுட்டுகின்றார். இரட்டைக்காப்பிய காலத்தில் வாழ்ந்த பெண்களின் நிலையை அவர்கள் வாழும் சூழ்நிலையினைக் கொண்டு அறியமுடிகின்றது. குடும்பத்தில் பெண், மனைவி, தாய் என்ற சிறந்த இடத்தைப் பெறுகின்றாள் என்பதையெல்லாம் இக்கட்டுரையின் வாயிலாக அறிய இயலுகிறது.
துணைநூற்பட்டியல்
1. தா. இராபர்ட் சத்திய சோசப்., (தொ.ஆ) சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல் விளக்க அகராதி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். (முதற்பதிப்பு, மார்ச்சு 2002)
2. சு. உஷா., அற இலக்கியச் சமுதாயம்: நான்மணிக்கடிகை, இரத்தின வெங்கடேசன், வேலகம் வெளியீடு, புதுச்சேரி. (2008)
3. ந. மு. வேங்கடசாமி நாட்டார், மணிமேகலை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை. (2009)
4. புலியூர் கேசிகன், சிலப்பதிகாரம் தெளிவுரை, கொற்றவை பதிப்பகம், சென்னை. (2014)
5. பரிமேலழகர் (உரை), திருக்குறள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. (2017)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.