குறள் காட்டும் நட்பு
முனைவர் கோ. விசயராகவன்
இயக்குநர்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்,
எம். ஆர். சி. நகர், சென்னை - 600028.
முன்னுரை
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் நண்பர்களை இணைப்பதில் தவறு ஏதும் இல்லை. "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு" என்கிறார் வள்ளுவர். சங்ககாலம் முதல் இன்று வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள் ஆகும். நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். ஐந்து வயதில் அறிமுகம் ஆகும் சில நண்பர்கள் நம்மை ஆயுட்காலம் வரை தொடர்வார்கள். பலரின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வருவதும், ஏமாற்றங்களைத் துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள் மட்டுமே. இரண்டாயிரம் ஆணடுகளுக்கு முன்பே வள்ளுவர் சொன்ன வார்த்தைகள், எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நட்பிற்கு இலக்கணம் சொல்லும் நண்பர்கள் என்பவர்கள். ஜாதி, மத, இன, மொழி எல்லைகளைக் கடந்து நம்முடைய எண்ணங்களின் வலிமையால் நம்மோடு பயணிப்பவர்கள். உன் நண்பன் யார்? என்றுசொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பது பழமொழி. கற்பைப் போலவே நட்பும் புனிதம். வள்ளுவர் நட்பிற்கு மட்டுமே அதிக அதிகாரங்களைத் திருக்குறளில் வைத்துள்ளார். நட்பு எத்தகைய வலிமை மிக்கது என இதன் மூலம் அறிய இயலும். மழைநீர் இயற்கையிலேயேச் சுத்தமானது. நட்பு இயல்பிலேயேப் புனிதமானது. ஊருக்கு எல்லை உண்டு. நாட்டுக்கு எல்லை உண்டு. ஆனால் நட்புக்கு எல்லை கிடையாது. திருக்குறளில் பொருட்பாலில் நட்பு என்னும் பொருண்மையில் இப்பதிவு அமைகிறது.
நட்பு விளக்கம்
சங்க இலக்கியங்களில் அரசர்களுக்கும், புலவர்களுக்கும் இடையேக் காணப்பட்ட மாசற்ற, சுயநலமற்ற இழிவற்ற நட்பினை அதியன் - ஒளவையார், கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், பாரி - கபிலர் என படம் பிடித்துக் காட்டுகிறது. சங்க இலக்கியத்தை அடுத்துத் தோன்றிய கீழ்க்கணக்கு நூல்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றன. நட்பு எனும் சொல்லுக்கு கேண்மை, சிநேகிதம், உறவு போன்ற பல பொருள்களைத் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி தருகிறது. இரு உயிர்களுக்கு இடையேக் காணப்படும் ஒன்றுபட்ட எண்ணங்களால் ஏற்படும் உறவு நட்பு. மேலும், நட்பானது ஒருவரிடம் காணப்படும் செல்வத்தையோ, பதவியையோ மையமாகக் கொள்ளாது. இறுதிமூச்சு வரை அவரது இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் ஓர் உணர்வு நட்பு ஆகும்.
தெய்வப்புலவர் தனது தமிழ் மறையில் ஒருவனது குணம், குடிப்பிறப்பு, குற்றம் ஆகியவற்றை அறிந்தே நட்பு கொள்ள வேண்டும் என்கிறார்.
“குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு"
(குறள் 793)
தம்மோடு நட்பு கொண்டவர் தீமை செய்தாலும், அதனைப் பொறுத்துக் கொள்ளுதல் இருவருக்கும் இடையில் நட்பு வளரக் காரணமாக அமையும் என்ற கருத்தை,
“ஒருவர் பொறை இருவர் நட்பு”
(பழமொழி 132)
பொன்னிறமான கோங்க மலரில் அழகிய வண்டுகள் ஆரவாரிக்கும் உயர்ந்த மலைகள் உள்ள நல்ல நாட்டுக்கு அரசனே! ஒருவனுடைய பொறுமையினால் இருவருடைய நட்பு வளரும். ஆதலால் நண்பர் மிகவும் தீயனவற்றைச் செய்தாலும், அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் தகுதியான ஒரு செயல் அல்லவா? என்று நாலடியார் நட்புக்கு பொறுமை முதன்மையானது என்று விளக்குகிறது.
"இறப்பவே தீய செயினும் தம் நட்டார்
பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு
உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறை இருவர் நட்பு"
(நாலடியார் 223)
என்ற அடி வாயிலாகப் பொறுமை குணமுடையோராக நண்பர்கள் இருக்க வேண்டுமென நானூறு பாடல்களைக் கொண்டுள்ள பழமொழி மற்றும் நாலடியார் என்று இரு நூல்களும் உரைக்கின்றன.
பொறுமையில்லாது தனது நண்பரின் குற்றத்தைக் கடிந்து உரைப்பதால் இருவருக்கும் இடையேயான நட்பு கெடக் காரணமாகும் என்பதை,
“நா அன்றோ, நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை
விடும் அன்றோ, வீங்கப் பிணிப்பின்? அவாஅப்
படும் அன்றோ, பல் நூல் வலையில்? அடும் அன்றோ,
மாறு உள் நிறுக்கும் துணிபு?”
(நான்மணிக்கடிகை 78)
என்ற பாடலில் நட்பு கெடாமல் இருக்க நாவடக்கம் இன்றியமையாதது என்று கூறுகிறது.
மேலும், சுயநலமிக்கக் குணத்தையுடைய மனிதரோடு கொண்டுள்ள நட்பைக் கைவிடாதிருத்தல் துன்பத்தை உண்டாக்கும் என்று,
“ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;
காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,
யாம் என்பவரோடு நட்பு”
(இன்னா நாற்பது - 24)
என்ற பாடலின் வழி கபிலர் விளக்குகிறார்.
பிற உயிர்களுக்குக் கருணை பண்பு காட்டும் குணமில்லாதவரின் உள்ளத்தில் நட்பும் உறவும் தோன்றுவதில்லை என்பதை,
”ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று”
(முதுமொழிக்காஞ்சி - 53)
என்று கூடலூர் கிழார் முதுமொழிக் காஞ்சியில் ‘அல்ல பத்து’ எனும் தலைப்பில் கூறுகிறார்.
ஒற்றுமையாக வாழக்கூடியக் குணத்தைப் பெறாதவரின் நட்பானது, துன்பத்தை மட்டுமேத் தர வல்லது என சமண முனிவர்களின் வேளாண் வேதம் கூறுகிறது. இதனை,
“முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு”
(நாலடியார் 237)
எனும் நாலடியார் பாடல் வழியும் அறிய முடிகிறது.
நட்பின் சிறப்பு
நட்பாகிய உறவு இரு வகைகளில்அடங்கும். இயற்கையினாகிய நட்பு. செயற்கையினாயிய நட்பு. இயற்கையினாயிய நட்பு என்பது பிறப்பு முறையாலும், தேயம் வழி முறையினாலும் உண்டாகக் கூடியது. பிறப்பு முறை என்பது உறவுமுறை சுற்றம் ஆகும். தேயம் வழிமுறையினாய என்பது துணை வலி உண்டாக்கும். நட்பினைப் போலச் சிறப்பானது வேறொன்று உண்டோ. ஒவ்வொரு செயலுக்கும் பாதுகாப்பாய் விளங்குவதும் நட்பே ஆகும்.
“செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு”
(குறள் 781)
அறிவுடையாருடைய நட்பானது நாளும் வளர்ந்து முழுமை பெறும் வளர்பிறை நிலவின் தன்மையை உடையது. அறிவிலாதார் நட்பானது நாளும் குறைந்து பின் மறையும் நிலவின் தன்மையை ஒத்தது ஆகும்.
குடிப்பிறப்பை அறிந்தே நட்புகொள்ள வேண்டும் எனக் கூறிய வள்ளுவர் என் குடியில் பிறந்தோரின் நட்பைக் கொள்ள வேண்டும் என்பதையும் கூறுகிறார்.
“குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு”
(குறள் 794)
தனக்குப் பழி வந்து சேரக்கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பைப் பொருள் கொடுத்தாவது பெற்றிட வேண்டும் என்கிறார்.
“ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த லின்னா
விழுத்தகு நூலும் விழையாதார்க் கின்னா
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு”
(இன்னாநாற்பது 34)
நல்ல ஒழுக்கம் இல்லாதவரிடத்தே தமக்கு உறவு உள்ளதாகக் கூறுதல் துன்பம். சீரிய நூலினை விரும்பிக் கல்லாதார்க்குத் துன்பம். இழிவான தொழில் செய்பவனின் நட்பு துன்பம். நல்லவரால் விலக்கப்பட்ட இடத்தில் இருத்தல் துன்பம் என்று இழிந்த தொழில் செய்பவரின் நட்பால் துன்பம் வந்து சேரும் என்று விளக்குகிறார்.
இதே போன்று, பொருள் கொடுத்தாவது நற்குடிப் பிறந்தவரின் நட்பைப் பெறுதல் வேண்டும் எனக் கூறிய வள்ளுவர் குற்றமுடையவரின் நட்பையும் அவ்வாறேப் பொருள் கொடுத்தாவது கைவிட வேண்டும் என்பதை,
“மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு”
(குறள் 800)
என்ற குறளின் வழி வலியுறுத்துகிறார்.
நல்ல நூலின் நயமானது கற்குந்தோறும் மிகுந்து விளங்குதல் போல, நற்குணம் உடையவர் நட்பானது பழகுந்தோறும் மிக வளர்ந்து இனிமையைக் கொடுக்கும்.
“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”
(குறள் 783)
என்ற குறள் வழியாக நட்பின் இனிமையையும் சொல்கிறார்.
மேலும், மருத்துவ நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம்,
“பெருங்குணத்தார்ச் சேர்மின் பிறன்பொருள் வௌவன்மின்
கருங்குணத்தார் கேண்மை கழிமி-னொருங்குணர்ந்து
தீச்சொல்லே காமின் வருங்காலன் றிண்ணிதே
வாய்ச்சொல்லே யன்று வழக்கு”
(சிறுபஞ்சமூலம் 25)
என்ற பாடல் வழியாக செம்மை இல்லாத தீயகுணம் உடையவரின் நட்பினை விலக்கிவிட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
இதேக் கருத்தை நாலடியாரும்
“அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்”
(நாலடியார் 172)
என்ற பாடலில் செயலில் தீமை செய்பவர் நட்பினை வெறுத்து ஒதுக்கி நல்லோரின் நட்பைப் பெற்றிட வேண்டும் என்று தெரிவிக்கிறது.
சான்றோரின் நட்பானது சிதைவு இல்லாததாய் நிலைத்து நின்று வலிமையுடையதாகிப் பலவகை நன்மைகளை உண்டாக்கும். அதுபோல நீர் நிலைகளால் வளமாகக் காணப்படும் சோலைகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவனின் நட்பானது குறைவின்றி இன்பம் பயக்கும் என மூவாதியார் தனது,
“சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,
வலி ஆகி, பின்னும் பயக்கும்; மெலிவு இல்
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை
நயம் திகழும் என்னும், என் நெஞ்சு”
(ஐந்திணை எழுபது 5)
என்ற பாடல் வழியாக விளக்குகிறார்.
சான்றோர்களுடன் கொள்ளும் நட்பானது பிறைத் திங்களைப் போல ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே வருமெனக் குறளடியும், நாலடியும் சான்றோரின் நட்பை வளர்கின்ற பிறை நிலவுக்கு ஒப்பாகவும் கூறுகின்றன.
“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு”
(குறள் 782)
“பெரியவர் கேண்மை, பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு”
(நாலடியார் 125)
தெளிவில்லாத அறிவுடையோரின் நட்பைக் காட்டிலும் பகையே மேலானது எனக் கீழ்க்காணும் நாலடியார் பாடல் விளக்குகிறது.
“தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா
புகழ்தலின் வைதலே நன்று”
(நாலடியார் 219)
அறிவில்லாத மக்களோடு ஏற்படுகின்ற நட்பானது தீராதத் துன்பத்தை விளைவிக்க வல்லது என்பதை முன்றுரையரையனார்,
“இடையீ டுடையார் இவரவரோ டென்று
தலையாயார் ஆய்தந்தும் காணார் கடையாயார்
முன்னின்று கூறும் குறளை தெறிதலால்
பின்னின்னா பேதையார் நட்பு”
(பழமொழி 113)
என்ற பாடல் வழி விளக்குகிறார்.
கண்ணதாசன் கூற்று
அர்த்தமுள்ள இந்து மதம் என்கிற நூலில் கண்ணதாசன் இன்றைய நண்பர்கள் பற்றி, பனைமரம், தென்னைமரம், வாழைமரம் என்று மூன்று மரங்களின் வழியாக எளிமையாக விளக்கிச் சொல்லியிருக்கிறார். அதாவது;
பனைமரம் - தானாக முளைத்துத் தனக்குக் கிடைத்த நீரைக் குடித்துத் தன் உடம்பையும், ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகிற்குத் தருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்ற நண்பன்.
தென்னைமரம் - தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருவது. அது போல, நம்மிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
வாழைமரம் - தினமும் தண்ணீர் ஊற்றினால்தான் பலன் தரும். அது போல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.
இந்த மூவரில் பனைமரம் போன்றவனை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இதைத் தம் திரையிசைப் பாடல்களிலும் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்.
பாரதத்தில் நட்பு
மகாபாரதக் கதையில் தான் “செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தவன் கர்ணன்” என்பது இன்றும் நாம் மறக்க முடியாத மறுக்க முடியாத பதிவு ஆகும்.
பார்க்காமல் நட்பு
சங்க காலத்தில் கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு. நட்புக்கு இதைவிடச் சான்று ஏது.
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள் 788)
என்று நட்பிற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்.
(கோப்பெருஞ்சோழன் ஆட்சியை விட்டு வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான். அப்போது மன்னன் மந்திரியாரிடமும் மற்றையோரிடமும் பிசிராந்தையார் என்னைக் காணவருவார் என்னுடன் வடக்கிருப்பார். அவருக்கும் ஓரிடத்தைத் தயார் செய்யுங்கள் என்றார். அது போல் இடமும்அமைக்கப்பட்டது. இவ்வுலக வாழ்வைத் துறக்க நினைக்கும் மன்னன் வடக்கிருத்தல் இயல்பு. இதனைக் கேள்விப்பட்டார் பிசிராந்தையார். சோழநாட்டை நோக்கி ஓடி வந்தார். நண்பனைக் கண்டார். தனக்காகத் தயாராக இருந்த இடத்தில் வடக்கிருந்து சோழனுடன் உயிர்விட்டார். இச்செய்தியைக் கேட்ட பொத்தியார் எனும் புலவர்,
“இசை மரபாக நட்புக் கந்தாக
இணையதோர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றோ!” (புறநானூறு - 217)
என்று தம் முன் காணாமலேயே நட்பு கொண்டு ஒன்றாக உயிர் நீத்த நட்பின் சிறப்பை இவ்வுலகுக்கு எடுத்துக் காட்டுகிறார். இதனால்தான், நட்பு உயிரினும் மேலானது என்கின்றனர்.
நட்பே துணை
ஆண், பெண் நட்பு என்றால் அங்கு காதல் இல்லையேல் காமம் புகுந்து விடுகிறது என்கிறது. இன்றைய அவலமான சமூகப்பார்வை. ஆண், பெண் நட்புக்கு ஔவை - அதியன் ஒன்றே போதும்.
“துளியே கடல்
என்கிறது காமம்
கடலே துளி
என்கிறது நட்பு”
(புதுக்கவிஞர் அறிவுமதி)
அன்பு, காதல், நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது. இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இதைக் கவனமாய் கையாள்கிறவனுக்கு மட்டுமே காதலியுடனும், தோழியுடனும் நெருடல் இல்லாத நெருக்கம் ஏற்படும்.
“நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு”
(குறள் 784)
சிரித்து மகிழ நல்லன சொல்வதற்கு மட்டுமே அல்ல நட்பு சிறந்த நட்பு என்பது தவறு செய்கிற போது தடுத்து நிறுத்திக் கண்டிப்பதே ஆகும் என்கிறார் வான்புகழ் கொண்ட வள்ளுவர்.
நண்பருக்குத் துனபம் வரும் காலத்து அத்துன்பத்தைப் போக்காது விட்டு நீங்குவாரை “கல்லாமா” என்று கடிந்துரைப்பார்.
“நல்லதுசெய்தல்ஆற்றீராயினும்
அல்லதுசெய்தல்ஒம்புமின்”
(புறநானூறு - 195)
என்பது போல
“பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்”
(குறள் 816)
என்று அறிவிலார் நட்பை விட அறிவுடையார் நட்பின்மை கோடி மடங்கு சிறந்தது எனக் கூறுவர். சொல்லும் செயலும் வேறானவர்களின் நட்பு முகத்திற்கு நேர் புகழ்ந்துரைத்தும் புறத்தே இகழ்பவர் நட்பும் கொள்ளற்க என்று உரைப்பார்.
தகவிலாரின் நட்பு அடிக்கரும்பில் இருந்து நுனிக்கரும்பைத் தின்பது போன்றது. ஆரம்பத்தில் இனிமையாகவும் காலம் செல்லச் செல்ல வெறுக்கும் தன்மையுடையது என்று நாலடியார்கூறுகிறது.
பிறைமதி பின் நீரபேதையார் நட்பு என்கிறது வள்ளுவம். திருக்குறளில் நட்பின் மேன்மையைத் திருவள்ளுவரும் நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு என ஐந்து அதிகாரங்களில் அருமையாக விளக்குகிறார்.
நட்பு முகம் பார்த்து வருவதல்ல, இதயம் பார்த்து வருவது. புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால் நண்பர்கள் என்ற கடிதம் வந்து கொண்டே இருக்கும்.
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”
(குறள் 788)
இடுப்பில் கட்டியிருந்த ஆடையானது நழுவும் போது எப்படி இரண்டு கைகளும் உடனடியாக ஆடையை இறுகப் பற்றுகின்றனவோ, அது போல நண்பனுக்குத் துன்பம் வந்தால் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்காமல் உடனே உதவக்கூடியது நட்பு.
முடிவுரை
“கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாகும் நட்பாரும் இல்”
(நாலடியார் 215)
கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும்” என்று நட்பின் பெருமையை விளக்குகிறது நாலடியார்.
இந்த நட்பு, இனம், மதம், சமயம், மொழி, நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி உள்ளப்புணர்ச்சி கொண்டு பழகும் உறவாகும். வானவில்லின் வண்ணம் போல சாதி, மதத்தால் வேறுபட்டிருந்தாலும் நட்பு என்ற ஒன்றில் ஒன்றுபட்டு வாழ்பவர்கள் நண்பர்கள். உன் பொருள் என் பொருள் என்பது நட்பினில் இல்லையே, நண்பர்களில் ஆண் என, பெண் எனப் பேதமும் இல்லையே. பூ வாசமாய்ச் சேர்ந்திடும் என்ற கூற்றுப்படி நட்பு உயர்ந்து நிற்கிறது. செயற்கரிய யாவுள என்பதற்கேற்ப நட்பைக் காட்டிலும் செய்து கொள்வதற்கு அரிய செயல் எதுவும் இல்லை. அத்தகைய நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் குணம், குடி, குற்றம், இனம் ஆகியன ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும். அன்பின் வழி வந்த கேண்மையால் தன் நண்பன் தன்னைக் கேளாது தனக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்தாலும் அது அவனது அறிவின்மையால் நிகழ்கின்றது என்று நட்பாட வேண்டும்.
“பறவைக்கு கூடு
சிலந்திக்கு வலை
மாட்டுக்குத் தொழுவம்
மனிதனுக்கு நட்பு”
துணை செய்த நூல்கள்
1. திருக்குறள் - பரிமேலழகர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை (பதிப்பு 2016)
2. குறள்நெறி அறம், புலவர் கே. ஏ. இராஜீ, ஹை - டெக் ஆப்செட் (பி)லிட், கோடம்பாக்கம், சென்னை. (பதிப்பு 2012)
3. உலகப்பொதுமறை, திருக்குறள் உரை விளக்கம், திருக்குறளார் வீ. முனுசாமி, திருமகள் நிலையம், சென்னை. (பதிப்பு 1983)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.