அழகர் கிள்ளைவிடு தூதில் தூது பொருள் மேலாண்மை
சு.முரளீதரன்
முன்னுரை
தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்திற்குப் பிறகு தோன்றியவை சிற்றிலக்கியங்கள் ஆகும். இவை சங்க காலத்திலேயே முளைவிட்டு, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் மெல்ல மெல்லத் தழைத்து வளர்ச்சியுற்றன.
“குழுவி மருங்கினும் கிழவது தாகும்” (தொல் - பொருள் - புறத் - 1030)
“ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப” (தொல் - பொருள் - புறத் - 1032)
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” (தொல் - பொருள் - புறத் - 1043)
என்பது தொல்காப்பியர் கூற்றாகும். பேரிலக்கிய மரபு, காலப்போக்கில் மாற்றம் பெற்றுத் தனித்தனிச் சிற்றிலக்கியங்களாக, முறையே பிள்ளை தமிழ், உலா, ஆற்றுப்படை, தூது என இன்னும் பிற சிற்றிலக்கியமாக உருப்பெற்றன.
“விருந்தே தானும்
புகுவது கிளந்த யாப்பின் மேற்றே” (தொல் - பொருள் - செய்யுள் - 1495)
என்ற சூத்திரத்தில் வனப்பு எட்டனுள் ஒன்றான விருந்து என்பது காலத்துக்கேற்றவாறு பிறக்கவிருக்கும் புதுவகை இலக்கியங்களுள் அடங்கும். ‘விருந்து’ என்பது புலவர்கள் தாம்தாம் வேண்டியவாறு தனித்தும்,தொடர்ந்தும் வரப் புதிதாகப் பாடப்படுவதை குறிக்கும்.
தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று தூது ஆகும். சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணங்கள் கூறும் பன்னிருப்பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப்பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் நூல்கள் தொண்ணூற்றாறு என வரையறை கூறவில்லை. தொண்ணூற்றாறு என்னும் வரையறைக்குட்பட்ட சிற்றிலக்கியங்களுக்கே, சில பாட்டியல் நூல்களில் இலக்கணம் கூறப்படவில்லை. வரையறைக்குட்படாத பிற சிற்றிலக்கியங்களில் சிலவற்றிற்குச் சில பாட்டியல் நூல்களில் இலக்கணம் கூறப்பட்டிருக்கின்றது.
தூது
ஒருவர் தம் கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்க இடையே பிறிதொருவரை அனுப்புவதே தூதாகும். தூதினைப் புறத்தூது, அகத்தூது என இரண்டாக பகுக்கலாம்.
அகத்தூது
தலைவன் தலைவியிடத்தே தூது அனுப்புதலும், தலைவி தலைவனிடத்தே தூது அனுப்புதலும் அகத்தூது எனலாம்.
புறத்தூது
அரசர்கள், பகைவரிடத்துத் தூது அனுப்புதலும், புலவர்கள் புரவலர்களிடத்துத் தூது அனுப்புவதும் உண்டு. அதனைப் புறத்தூது எனலாம்.
தொல்காப்பியத்தில் தூது
பிரிவு
தொல்காப்பியர் அகத்திணை இயலில், பாலை திணையில் பிரிவு பற்றி
“ஓதல் பகையே, தூது இவை பிரிவே” (தொல் - அகத் 25)
என்கிறார்.
“அவற்றுள்
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (தொல் - அகத் 26)
ஓதல், பகை, தூது என பிரிவு பற்றிக் கூறிவிட்டு, அவை அந்தணர்க்கும் அரசருக்கும் உரியதாகும் என கூறுகின்றார்.
செய்தி அறிவிப்பவன் ஆணாக இருப்பின் தூதன், பெண்ணாக இருப்பின் தூதாள் என்று அழைப்பர்.
ஆய்வு மூலம்
திருமாலிருஞ்சோலைமலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிக்கும் ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாளைக் காமுற்ற தலைவி ஒருத்தி அவர் பால் ஒரு கிளியைத் தூது விடுவதாகப் பலப்பட்டடைச் சொக்கநாத பிள்ளை என்னும் புலவர் இயற்றியது. இது காப்பு வெண்பா ஒன்றையும், கலி வெண்பாவில் 239 கண்ணிகளைக் கொண்டு, கி.பி 18-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டுள்ளது.
நூல் பகுப்பு
அழகர் கிள்ளை விடு தூது நூல் நான்கு பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது.
முதலாவதாகத் தூது விடுக்கும் கிள்ளையைப் பற்றிய செய்கிகள் விரித்துரைக்கப்படுகின்றது. கிளிக்கு ஏற்றங்கொடுப்பதற்காகப் பிற பொருள்களின் சிறப்பின்மையை ஆசிரியர் நயம்பட விளக்கியுள்ளார்.
இரண்டாவது பகுதியில், பாட்டுடைத் தலைவனாகிய அழகரின் பெருமைகளைக் கூறுகிறார். பத்து அவதாங்களில் அவர் செய்த அருட்செயல்கள் கூறப்படுகின்றன. தசாங்கங்கள் சிறப்பிக்கப்படுகின்றன.
மூன்றாவதாக இறைவன் கோடைத் திருவிழாக் கொண்ட செய்தியும், தலைவி அவனிடத்துக் காதல் கொண்ட செய்தியும் அமைகின்றன.
நிறைவாக, தூதுரைக்கப் பிறபொருள் சிறவாவென்றலும், கிளியின் தகுதியுரைத்தலும், தூதுரைக்கும் முறையைக் கூறுவதும் ஆகிய செய்திகள் அமைகின்றன.
“அருமாலை நீக்கும் அழகன் புயத்து
மருமாலை நீவாங்கி வா”
என்பதுடன் நூல் நிறைவடைகின்றது.
தூது பொருள் மேலாண்மை
தூது நூல்களில் தூது செல்ல தேர்ந்து எடுக்க இருக்கும் பொருளை வேண்டுதல் அதன் அருமைகள், பெருமைகள், சிறப்புகள், தகுதிகள், பிற பொருள்கள் தூது சொல்ல ஏன் தகுதி அற்றவை என்றும் புலவர் தான் தேர்ந்தெடுத்த பொருளை எந்த, எந்த ஊர் வழியாகச் செல்ல வேண்டும், தலைவனை எங்கு, எப்பொழுது காணவேண்டும், எப்படித் தூதுச் செய்தியை கூற வேண்டும் என்பதை உள்ளடக்கியதே தூது பொருள் மோலாண்மை ஆகும்.
கிளியின் பெருமைகள்
கிளியின் பொருமைகளாக திருமாலின் திருநாமமாகிய அரியென்னும் பெயரையும், அவர் திருக்கண்வளரும் பாயலாகிய ஆலிலையின் நிறத்தையும் கொண்டு மன்மதனுக்கு வாகனமாக விளங்கும் கிளியரசே! நான் சொல்வதைக் கேட்பாயாக, உன்னுடைய பெருமை பலபடியாகப் பரந்தது, மன்மதனுடைய ஆட்சியிலே உன் சொல்லைக் கேளாதவர் யார், மன்மதனது ஒற்றைச் சக்கரங்கூட இல்லாமற் செலுத்துகிள்ற காற்றாகிய தேரைப் பலங்கொண்டு இழுத்துத் திரிகின்ற குதிரையே,உன் உருவம் கொண்ட சுகமுனிவர் எல்லாம் தாமாகவே இருந்தார். எத்தகைய நிறத்தையுடைய பறவையானாலும் உன்னுடைய பஞ்சவர்ணங்களுக்குள் ஒன்றில் அடங்கமன்றோ, உன் மேனி முழுவதும் பச்சை நிறமாயிருத்தலின் உன்னைக் கண்டோர் பார்வதிதேவி யாரென்று எண்ணி விடுவார்களென்று கருதியோ, நீ மூக்கு மாத்திரம் சிவந்திருக்கின்றாய், கூடுவிட்டுக் கூடுபாயும் யோகி உனக்கு ஒப்பாவானோ,பாலின் பெயராகிய கீரம் என்பது உனக்கும் பெயர்.
“வையம் படைக்கும் மதனையுமேற் கொண்டின்பம்
செய்யுங் கிளியரசே செப்பக்கேள் - வையமெலாம்
வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்த்தை
கேளா தவரார்காண் கிள்ளையே - நாளும்
மலைத்திடு மாரனொற்றை வண்டிலுமில் லாமற்
செலுத்தியகாற் றேரைமுழுத் தேராய்ப் - பெலத்திழுத்துக்
கொண்டுதிரி பச்சைக் குதிரா யுனக்கெதிரோ
பண்டுதிரி வெய்யோன் பரியேழும் - கண்ட
செகமுழுது நீஞான தீபமுநீ யென்று
சுகமுனியே சொல்லாரோ சொல்லாய் - வகைவகையாய்
எவ்வண்ண மாய்ப்பறக்கு மெப்பறவை யாயினுமுன்
ஐவண்ணத் துள்ளே யடங்குமே - மெய்வண்ணம்”
(கண்ணி 02-07)
என்று கிளியின் வேறுபெயர்களான அரி, பசுங்கிளி, தத்தை, பைங்கிளி, பஞ்சவர்ணக்கிளி என்றும் ஆசிரியர் புகழ்கின்றார்.
கிளியின் பச்சை நிறத்திற்கும், மூக்கிற்கும் கற்பிக்கும் காரணங்கள் சுவையானவை.
“மால்பிடித்தோர்
கைச்சிலைவே ளால்வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ
பச்சிலை ரூபம் படைத்திருந்தாய்”
(கண்ணி- 58)
“நெடியமால்
விண்டுதறித் தூது வேணுகா னத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தாய் மொழிந்திடாய்”
(கண்ணி - 25)
கிளியின் பசுமை மூலிகை நிறம் போலும், பசுந்தழை போலும் இருக்கிறதாம் என வியக்கின்றார்.
ஏழு முதல் இரண்டு வரையில் உள்ள சில தொகைப் பொருட்கள் ஒவ்வொன்றிக்கும் கிளியின் பெயரை அமைத்துள்ளதை.
“முத்திநக ரேழிலொன்றே முத்தமிழ்வல் லாறிலொன்றாய்
ஓத்ததனித் தவ்வரிப்பே ருற்றதொன்றே - சுத்தமுறும்
ஐந்துபூ தத்திலொன்றே யானபடை நான்கிலொன்றே
முந்துமுத லானபொருள் மூன்றிலொன்றே - வந்த
இருபயனி லொன்றே!”
(கண்ணி 63 - 65)
1. முத்தி தரும் நகரங்கள் ஏழுள் ஒன்று - அவந்தி (மற்றவை அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, துவாரகை என்பன)
2. முத்தமிழிலுள்ள வல்லெழுத்துக்கள் ஆறில் ஒன்றாகிப் பொருந்திய தகர வரியில் அமைந்த பெயர் - தந்தை
3. ஐம்பூதங்களில் ஒன்றின் பெயர் - வன்னி (தீ)
4. அரசர்க்குரிய நால்வகைப் படைகளில் ஒன்று - கிள்ளை (குதிரை)
5. முதற்பொருளாகிய மூவருள் ஒருவர் - திருமால்
6. மக்கள் அடையும் சுகம், துக்கம் ஆகிய இருபயன்களில் ஒன்று - சுகம்
என கிளியைப் புகழ்ந்து பேசும் பகுதிகள் பல குறிப்பிடத்தக்கன.
கிளியின் தகுதி
கோடைத் திருவிழாவில் ஆதிசேசன் வாகனத்தின் மீது அழகர் பவனி வரக்கண்ட தலைவி அழகர் மீது மையல் கொண்டு, அழகரிடம் யாருமறியாமல் தூது சென்றுவரத் தத்தையே தகுதியானது என்பதை.
“அடியார்கள்
அங்கிருந்தாற் கீர்த்தனஞ்செய் வாயடுத்த நாச்சியார்
பாங்கிருந்தாற் கையிற் பறந்திருப்பாய் - எங்கிருந்து
வந்தாயென் றால்மா லிருஞ்சோ லையிலிருந்து
எந்தா யுனைத்தொழவந் தேனென்பாய் - அந்தச்
சவுந்தர வல்லியெனுந் தற்சொரூ பிக்கும்
உவந்தலர்சூ டிக்கொடுத்தா ளுக்கும் - சிவந்த
கடுகிலே சங்கோபங் காணாம லென்மால்
வடுகிலே சொல்வாய் வகையாய்” (கண்ணி 205-208)
என அழகரிடம் தூது செல்ல கிளியே தகுதியானது என்று தலைவி முடிவு செய்கின்றாள்.
கிளியை வேண்டுதல்
கிளியரசே, என்னுடைய உடம்பும் உன் கூடும் பலவகையில் ஒப்புமையுடையன. உன்னுடைய விருப்பத்தையறிந்து யான் உண்பிப்பேன், நலங்குக் குளிப்பாட்டுவேன், பட்டாடையால் துடைப்பேன், கூட்டில் இருத்தி ஆரத்தி எடுப்பேன், வாசனைத்தூபம் காட்டுவேன், இளவெயிலிலே குளிர்காயச் செய்து எடுத்து முத்தமிட்டு என் கைமேல் வைத்துப் பொருமாள் திருநாமமெல்லாம் உனக்குப் பழக்கி வைப்பேன் என்பதை.
“பாங்கிற்
குழையுமான முண்டு குழம்பிய பாலுண்
டுழையே தெளிபாலு முண்டு- விழைவறிந்
தூட்டுவே னுன்னை யுருப்பசியா யென்னநலம்
காட்டுவேன் பட்டாடை யாற்றுடைப்பேன் - கூட்டில்
அரசா யிருத்தியா லத்தி யெடுத்துப்
புரைதீர் நறையும் புகைப்பேன் - அருகே
இளவெயிலிற் காய்வித் தெடுத்தொருகான் முத்தி
வளைபயில் கையில்மேல் வைத்துத் - துளபமணி
ஈசன் றிருநாம மெல்லாமென் போலுனக்குப்
பாசந் தொலையப் பயிற்றுவேன்” (கண்ணி 193-198)
என கிளியை தலைவி தலைவனிடம் தூது போகச் சொல்லி வேண்டுகின்றாள்.
தூதுரைக்கும் முறை
எம்பெருமான் திருக்கோலக்கத்தில் எழுந்தருளியிருக்கும் போது நீ தூதுரைக்கத் தொடங்கினால் உன் வார்த்தை அவன் திருச்செவியில் ஏறாது. ஆதலின், அவன் பள்ளியறைக்கு எழுந்தருளும் வேளைபார்த்து வேறோருவர் ஒன்றை விண்ணப்பித்தற்கு முன், என்னை மன்மதன் துன்பப்படுத்துவதற்கு முன்னே, பெண்டிர் அலர் தூற்றுவதற்கு முன்னே, கடலின் ஒலியும், தாயின் உரையும் என்னைத் துன்புறுத்தாமல் அடங்கும்படியாகத் தத்தையே, நீ என் தூதுச்செய்தியை எம்பெருமானிடம் உரைப்பாயாக.
“ஆர்த்திரு வோலக்க மாயிருப்ப னப்பொழுதுன்
வார்த்தை திருச்செவியில் வாயாது - சேர்த்தியிலே
மெல்ல வெழுந்தருளும் வேளைபார்த் தவ்வேளை
சொல்ல வெழுந்தொருவர் சொல்லாமுன் - வெல்லுமதன்
அம்பலர் தூற்ற வடர்த்து வருமுன்னே
வம்பலர் தூற்ற வருமுன்னே - கும்பமுனி
வாயி னுரையடங்க வந்த கடலடங்கத்
தாயி னுரையடங்கத் தத்தையே - நீயுரையாய்” (கண்ணி 230-234)
என்று கிளியை அறிவுருத்துகின்றாள் தலைவி.
தூது வெற்றி
தூது செய்தி கூறியதற்கு அடையாளமாக
“நேசமுடன்
எம்முடைய மாலை யிருபுயத்து மாலைகேள்
உம்முடைய மாலை யுதவீரேல் - அம்மைதிருக்
கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதையார் மாலைதனைத் தம்மினென்பாய் - நீதி
அடுப்பவர் யாவர்க்கு மாடித் தியாகம்
கொடுப்பவ னில்லையென்று கூறான் - தடுக்கும்
அருமாலை நீக்கு மழகன் புயத்து
மருமாலை நீவாங்கி வா”
(கண்ணி 235 - 239)
என்று தலைவி நீ என் தூதுச் செய்தியைச் சொல்லிப் பெருமாளிடம் அவன் திருப்புயத்திலணிந்த மாலையைக் கேள். தன்னை அடைபவர் யாவருக்கும் ஆடிமாதத்தில் தியாகம் கொடுக்கும் எம்பிரான் இல்லையென்று சொல்லான். ஆதலின் அவ்வழகன் புயத்து அணிந்த மாலையை நீ வாங்கி வருவாயாக. என்று தலைவியானவள் கிளியைத் தூது விடுகின்றாள்.
திருமாலிருஞ்சோலைமலை அழகர் திருவீதிஉலா வரும்போது அவன் அழகில் மயக்கிய தலைவியானவள், அழகரிடம் தன் விருப்பத்தை கூற தூது பொருளாகக் கிளியைதேர்வுசெய்து கிளியிடம் அதன் பொருமைகள், சிறப்புகள், அதன் வேறுபெயர்கள் கூறியும். அழகரால் ஏற்பட்ட தன் நிலையைக்கூறி, கிளியை வேண்டி, தூது செல்லக் கூறி, தூதுரைக்கும் முறை, தூது அடையாளமாக அவன் அணிந்து இருக்கும் மாலையை நீ வாங்கி வருவாயாக, என்று புலவரானவர் தூது பொருளை மேலாண்மைச் செய்துள்ளதை மேல் கூறியவற்றிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் மேலாண்மைச் சிந்தனையானது சிற்றிலக்கியங்களில் ஒற்றான தூது நூல்களில் மிகுந்துள்ளதை இக்கட்டுரை மூலம் நாம் அறியமுடிகின்றது.