........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                         

 இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

1

அடையாளம்-1

            எம்.ஜி.ஆர். நினைவுகளைச் சேகரிக்கும் ஹோட்டல் மேலாளர்.

தேனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் கற்பகத்தில் மேலாளராக இருப்பவர் நாகராஜன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள், விதவிதமான பேனாக்கள், சாவிக் கொத்துக்கள் என்று பலவிதமான சேகரிப்புகளைச் செய்து வருகிறார்.

இவரிடம் சுதந்திரத்துக்கு முன்பு வெளியிட்ட தபால் தலைகள், அரசியல், விஞ்ஞானிகள், ஞானிகள் படமுடைய தபால்தலைகள் என்று பல்வேறு தபால்தலைகள் சேகரிப்பில் உள்ளன.

மேலும் இவரிடம் பல்வேறு காலகட்டத்தில் வெளியான இந்திய நாணயங்கள், பழைய நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் என்று இவர் சேமிப்பில் பல விதமான நாணயங்களைப் பார்க்க முடிகிறது.

இவரிடம் விதவிதமான பேனாக்கள், சாவிக் கொத்துக்கள், பேப்பர் வெயிட்டுகள் என்று ஆயிரக்கணக்கில் உள்ளன.

தீவீர எம்.ஜி.ஆர். ரசிகரான இவர் அந்தக் காலத்தில் எம்ஜி.ஆர். படங்கள் வெளியாகி விட்டால் போதும் அன்றே அந்தப் படத்தைப் பார்த்து விடுவாராம். இதே போல் எம்.ஜி.ஆர். படத்தை எங்கு பார்த்தாலும் சரி, எந்தப் பத்திரிகையில் செய்தி, படம் வெளியாகி இருந்தாலும் சரி அதை வாங்கி கட் செய்து ஆல்பத்தில் ஒட்டி வைத்து விடுவார். இவர் யாரிடம் பேசினாலும் உதாரணத்திற்கு எம்.ஜி.ஆர். படத்தில் உள்ள காட்சிகளைச் சொல்லாமல் இருப்பதில்லை, அவ்வளவு தூரத்திற்கு எம்.ஜி.ஆரைப் பற்றிய நினைவுகள் இவரிடம் நிறைய ஊறிப் போயிருக்கிறது. இவர் எம்.ஜி.ஆர். நினைவுகளைச் சேமிப்பதற்காக தனியாக எம்.ஜி.ஆர் நினைவுக் களஞ்சியம் எனும் ஒரு அமைப்பையும் நிறுவியிருக்கிறார்.

எல்லோரும் பணம் சேர்ப்பதில் அக்கறை காட்டி வரும் இந்த நாளில் இவர் வித்தியாசமாக பல்வேறு பொருள்களையும், தபால் தலைகள் , நாணயங்கள் என்று சேகரித்து வரும் இவர், தன்னுடைய சேகரிப்புகளை வைத்துப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் கண்காட்சிகளை நடத்தி அந்த சேகரிப்பின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி, அதன் மூலம் நாம் அறிய வேண்டிய செய்திகள் என்று பல்வேறு தகவல்களைச் சொல்லி வித்தியாசமான சேகரிப்புகளுக்கு வழிகாட்டுவதுடன் அதில் மாணவர்களுக்கு ஒரு ஈடுபாடு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இந்த வித்தியாசமான மனிதர் நாகராஜன்,  தனது ஓய்வு நேரத்தில் இந்த சேகரிப்புகள் தவிர பத்திரிகைகளுக்கு தேனி ராஜதாசன் எனும் பெயரில் கதை, கட்டுரை, கவிதை, துணுக்குகள் என்று ஏதாவது ஒரு படைப்பை பத்திரிகைகளுக்கு அனுப்பி, பிரசுரமான அவற்றையும் ஆல்பமாகத் தயாரித்து வைத்திருக்கிறார். மேலும் இவர் மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், கிராமியக் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் பங்கேற்று நடித்து பல அமைப்புகளின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 88 வது தினப் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற "குரல்வேந்தன்" நடிகர் ராஜீவ் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ,        திருப்பூர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோருடன் நாகராஜன் என்ற தேனி ராஜதாசன்

இவருக்கு உரத்த சிந்தனை எனும் அமைப்பு வழங்கும் சிறந்த வாசக எழுத்தாளர்களுக்கான ஜி.வி.விருது, இதயக்கனி மாத இதழின் சிறந்த சாதனையாளர் விருது, ஆதித்தனார் முத்தமிழ்ப் பேரவை வழங்கிய சிறந்த சிறுகதைகள் எழுதியதற்கான விருது, இந்தியப் பேனா நண்பர் பேரவை வழங்கிய விருது, தமிழ்நாடு கிராமியக் கலைஞர்கள் தலைமை நலச் சங்கம் வழங்கிய விருது தமிழக அரசின் மதுரை மண்டலக் கலை, பண்பாட்டு மையத்தின் விருது போன்றவை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வித்தியாச மனிதரை முத்துக்கமலம் அடையாளம் காட்டுவதில் பெருமையுறுகிறது.

                                                                                                                                                               - தாமரைச் செல்வி.

முந்தைய அடையாளம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.