|
இந்து மதம்
வழிபாட்டுத்
தலங்கள்-10.
பழனி தண்டாயுதபாணி சுவாமி
கோயில்
-நெல்லை விவேகநந்தா

பழனி தண்டாயுதபாணி
முருகப்பெருமானின் அறுபடை
வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான்
ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும்
அழைக்கிறார்கள்.
பெயர்க் காரணம்

பழனி தண்டாயுதபாணி கோயில்
பழனி என்பது இங்குள்ள மலையின் பெயராகும். இந்தப்
பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய
நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு
காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை "ஞானப் பழம் நீ" என
அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.
இதே போன்று, இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஞானப்பழத்துக்காக
பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்த முருகப் பெருமான் பழனி மலையில்தான்
தங்கினார். அங்கு, எந்த பற்றும் அற்ற ஆண்டிக் கோலத்தில் காணப்பட்டார்.
மகன் கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் வருந்திய சிவனும், பார்வதியும் இந்தப்
பழனி மலைக்கு வந்தனர். முருகப் பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு "பழம்
நீ" என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று
இக்கோவில் தல புராணம் கூறுகிறது.
மலை உருவான கதை

பழனி மலையின் தோற்றம்
பொதிகை மலையில் வந்து தங்கிய அகத்திய முனிவர்,
தனது சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று, அங்கு முருகப் பெருமானுக்குரிய கந்த
மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு
சிகரங்களை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.
சிறந்த பக்திமானான இடும்பாசுரன், அகத்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய
இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலைக்
குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடி போன்று
கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.
அப்போது முருகப் பெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். மலைகளை சுமந்து
வந்த இடும்பாசுரன் ஓரிடத்தில் களைப்பு ஏற்பட்டதால் மலைகளை இறக்கி வைத்துவிட்டு
ஓய்வெடுத்தான். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் மலைகளை தூக்க முயன்றான். ஆனால்,
முடியவில்லை.
இடும்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. சிறிது யோசித்தவன், யதார்த்தமாக மேலே பார்த்தான்.
மலைக்குன்றின் உச்சியில் ஓரிடத்தில் கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிறுவன் நின்று
கொண்டிருந்தான். அந்த சிறுவன் இருப்பதால்தான் மலையை தூக்க முடியவில்லையோ என்று
யோசித்தவன், அந்த சிறுவனைக் கீழே இறங்குமாறு கூறினான்.
ஆனால் அந்தச் சிறுவனோ, இடும்பாசுரன் தூக்கி வரும் மலைக்குன்று தனக்கே உரியது
என்று உரிமை கொண்டாட... கோபம் கொண்டான் இடும்பன். சிறுவனைத் தாக்க முயன்று,
பிறகு முடியாமல் வீழ்ந்தான்.
பின்னர், இடும்பன் மனைவியான இடும்பியும், அகத்திய முனிவரும் அங்கு விரைந்து
வந்து வேண்டிக் கொள்ள, அவர்களுக்காக சிறுவனாக வந்த முருகப் பெருமான் மனமிறங்கி
வீழ்ந்த இடும்பனை உயிர்ப்பித்தார்.
இடும்பனது குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு,
தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம்,
பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களை எல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு
வருவோருக்கு அருள் பாலிப்பதாக அப்போது அருளினார்.
அன்றுமுதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது.
இடும்பாசுரன் கொண்டு வந்த மலை அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டது. அந்த மலைதான்
இன்றைய பழனி மலை என்கிறார்கள். இதனால்தான், பழனி மலைமீது முருகனை வழிபடச்
செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச்
செல்கிறார்கள்.
திருவாவினன்குடி சிறப்பு
திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில்
அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை
காணப்படுகிறது. பழனி முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இந்தப் பொய்கையில்
நீராடிச் செல்கிறார்கள்.
திருவாவினன்குடி கோவிலில் முருகப் பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை
வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார். இங்குள்ள முருகப் பெருமானை தரிசிக்க
மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் போன்றோர் வந்ததாக கூறுகிறார் நக்கீரர்.
குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்ட பின்னர்தான் மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள
பழனியாண்டவரைத் தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த திருவாவினன்குடி
திருத்தலம் அமைந்துள்ள பகுதி முன்பு நெல்லி வனக் காடாக இருந்துள்ளது. இதற்கு
ஆதாரம் இந்தக் கோவிலின் தலவிருட்சம்தான். ஆம்... இங்குள்ள தலமரம் நெல்லி மரமே.
ஆண்டிக்கோலம் உணர்த்தும் தத்துவம்

ஆண்டிக் கோலத்தில் முருகன்
இங்கு முருகப் பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின்
மூலமும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலம் ஒரு உண்மையைப்
போதிக்கிறார். "ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை
(ஆசையை) ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை
இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்" என்பதுதான் அந்த தத்துவம்.
நலம் தரும் கிரிவலம்

பழனி மலையின் இரவுத் தோற்றம்
பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று
அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3
கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த
பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளைக் கொண்ட மண்டபங்களும்
காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக
கருதப்படுகிறது.
மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு
எதிரில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில்
மண்டபத்தில் இருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச்
செல்கின்றன.
விழாக்கள்
-
திருவிழாக்களைப் பொறுத்தவரையில் பழனியில்
தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக பங்குனி
உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகிய விழாக்களும், மற்றும் முருகனுக்கு
உரிய அனைத்து விசேஷ நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
-
தைப்பூசம் திருவிழாவின்போது பக்தர்கள் பால்
காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் தீர்த்தக் காவடிகள் எடுத்து வந்து
நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும். இதற்காக பாத யாத்திரையாக
100க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவை கடந்து வரும் பக்தர்களும்
இருக்கிறார்கள்.
சிறப்புக்கள்
-
முருகப் பெருமானின் இந்தபடை வீட்டில் அவர்
அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல்
அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை
முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம்,
திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அபிஷேகம்
செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை
என்று கருதப்படுகின்றன.
-
பழனி என்று சொன்னதும், அந்த பழனியாண்டவருக்கு
அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பிரசாதமான பஞ்சாமிர்தமாகும்.
பழனிக்கு வருபவர்கள் அதை தவறாமல் வாங்கிச் செல்கிறார்கள்.
-
மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி,
அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லா நோய்களையும்
குணப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.
-
ஆதியில் போகர் சித்தராலும், அவரது சீடராகிய
புலிப்பாணி முனிவராலும் வழிபடப்பட்டு வந்த இந்த கோவிலில், சேர மன்னர்கள் முதன்
முதலில் திருப்பணிகள் செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.
-
சபரிமலை அய்யப்பனை தரிசித்து விட்டு
வருபவர்களும், குருவாயூர் குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும்,
பழனிக்குச் சென்று பழனி ஆண்டவரையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப்
பூரணமாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தண்டாயுதபாணி சுவாமியை மொட்டை ஆண்டிக்
கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும், இவர் சடாமுடியுடன் விளங்குகிறார்
என்பதை அபிஷேகக் காலத்தில் நன்கு அறியலாம்.
சர்ச்சைக்குரிய விவாதம்
பழனி மலை உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி
கோவிலையே நாம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது வீடாக கருதுகிறோம்.
ஆனால், பழனி மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி
கோவிலே முருகனின் மூன்றாவது படை வீடு என்று கூறுவோரும் உண்டு.
பயண வசதி
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து
பேருந்து மற்றும் இரயில் பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை, கோயம்புத்தூர்,
திண்டுக்கல் ஆகிய நகரங்களிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மலையில் வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே
பல ஆலயங்களும் இருக்கின்றன. தற்போது பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் வசதியும்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லை
விவேகநந்தா அவர்களின் பிற படைப்புகள்

முந்தைய ஆன்மீகக் கருத்துக்கள் காண

|