|
கட்டுரை-12
அன்பர்கள்
தினம்!
-ஆல்பர்ட், அமெரிக்கா.

"மண் படைப்பே காதலெனில் காதலுக்கு.
மறுப்பெதற்கு? கட்டுப்பாடு எதற்கு?' - பாவேந்தர் பாரதிதாசன்:
எத்தனை எத்தனையோ யுகங்கள் பல கடந்த பின்னும் இன்று பூத்த புத்தம் புதுப் பூ போல
புதுசாகவே இருக்கிறது காதல். ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து ஆரவாரமாய்
அங்கிகிங்கெனாதபடி எங்கும் பூத்துக் குலுங்கும் சமாச்சாரம் இது!
காதல், காலம்காலமாய் காவியங்களில், இதிகாசங்களில் எங்குதான் இல்லை காதலர்கள்.
அது கம்மங்காடாய் இருந்தாலும், வானம் தொடும்
கட்டிடங்கள் கொண்ட நகரமானாலும் இந்த மூன்றெழுத்து வலம் வராத இடம் உண்டா?
நிஜ வாழ்க்கையில் பனி விழும் மலர் வனம் என்று திறந்த வெளியில் பாட்டுப்பாடி,
கட்டிப்பிடி கட்டிப்பிடி என்றோ, கல்யாணம்தான் கட்டிக்கலாமா? ஓடிப் போய்த்தான்
கட்டிக்கலாமா? கட்டாமலே புள்ள குட்டி பெத்துக்கலாமா.....என்று வண்ண வண்ண உடைகளில்
ஆடிப்பாடி காதல் செய்யவில்லையென்றாலும் தேர்தல் கால சுறுசுறுப்பில் பறக்கும்
கட்சிக் கொடி போல காதல் கொடி உலகெங்கும் பறந்து கொண்டுதானிருக்கிறது.
கடற்கரை, பேருந்து நிறுத்தங்கள், கோவில் வளாகங்கள் காதலர்கள் தங்கள் தங்கள்
ஜோடியோடு தங்களைச் சுற்றி ஓர் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வேயின்றி
மணித்துளியெல்லாம் நிமிடங்களாய் கரைந்து போகும் இவர்களுக்கு! கடல் அலை
ஓய்ந்தாலும் ஓயாத அலை காதல் அலை ஒன்றுதான்!
"உன் கொலுசை எனக்குத் தா
என் மனசை உனக்குத் தருகிறேன்"
"மரமெல்லாம் இலை
மனசெல்லாம் நீ"
"கடலில் இருக்குது தண்ணீ
என் மனசை இழுக்குது உன் தாவணி"
புதுக்கவிதைகளில் புதுசு புதுசாய் கவிதைக் காதல் மலர்கிறது!
உலகமெல்லாம் காதல் இருந்தாலும், அவரவர் கலாச்சாரத்துக்குத் ஏற்ப அதன்
வெளிப்பாடுகள் காதலில் மிகுந்திருக்கின்றன. கட்டியணைத்து முத்தம் தருவது ஒரு
கலாச்சாரம் என்றால், வெட்கப்பட்டு கால் விரல் நுனியால் கோலம் வரைவது மற்றுமொரு
கலாச்சாரம். எது உண்மையான வெளிப்பாடு?
கேள்விகள் காதல் காற்றில் கரைந்து கலக்கின்றன.
காதலை வளர்த்தெடுப்பதும் தீர்மானிப்பதும் திரைப்படங்களாகவே இருக்கும் நாடு
இந்தியா என்றால் அது மிகையில்லை. திரைப்படங்களின் ஆதிக்கம் சின்னஞ்
சிறுசுகளையும் விட்ட பாடில்லை! கிராமத்துச் சிறுசானாலும் நகரத்துச் சிறுசானாலும்
காதல் அவர்களைப் பாடாய்ப் படுத்தி விடுவதென்னவோ என்பது எவராலும் மறுக்கப்படாத
மாசற்ற உண்மை. கொஞ்ச வருஷம் முன்பு கல்லூரிக் காளைகளை மட்டுமே காட்டி வந்த
சினிமா இப்போதெல்லாம் உயர்நிலைப் பள்ளிகளையும் விட்டு வைக்காமல் காதல்
ஆட்டோகிராப் போடத் துவங்கியது மட்டுமில்லை... முதல் வகுப்பு கூட நுழைந்து
பார்க்காத சிறுசுகளைக் கூட காதல் வசனம் பேசச் சொல்லி திரைப்படங்கள் வந்த வண்ணம்
உள்ளது!
"தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் - அடீ கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ
பார்த்தவிடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
பாவை தெரியுதடீ!"
- எவ்வளவு ஏக்கம் துடிக்கும் வரிகள்! மார்பு
துடிக்கும் வரிகள். இதுதான் காதலின் சுகமான சோகம்!
முப்பாட்டனுக்கு முப்பாட்டன் கால சமாச்சாரம்....!
இப்போதோ கூடாது... கூடாது காதலர்தினம் கூடாது என்று பேரணி, ஆர்ப்பாட்டங்கள்
இந்தியாவில் ஒருபுறம் நடந்தாலும் காதல் இல்லாமல் இந்தப் புவி நகர்கிறதா?
இன்னொருபுறம் காதலர்தினம் தேவையா என்று பட்டிமன்றம் போடாத குறையாக விவாதங்கள்
சூடு பறக்கிறது! இது வெள்ளைக்காரன் வழி வந்தது; மேலைநாட்டுக்காரக் கலாச்சாரம்
என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டாலும் கொஞ்சம் நம் முன்னோடிகள் கதை என்ன என்று
பார்த்தால் மேலை நாட்டுக் கலாச்சாரத்துக்கு முந்தியது நம் தமிழ் பண்பாடு! அந்தப்
பண்பாடுகள் கிளைத்தெழுந்த விதம், கொஞ்சம் அலசித்தான் பார்ப்போமே!
கா(தல்)மன் பண்டிகை...!
தமிழர்கள் காமன் பண்டிகை என்று ஒரு விழாவை இன்றும் கிராமங்களில் எடுப்பார்கள்;
அந்தக் காமன் பண்டிகை... காமன் விழாக் கொண்டாட்டங்கள் இந்தக் காதலர் தினத்த்தின்
முன்னோடி எனலாம்! மார்ச், ஏப்ரல் மாதங்களில் எந்த ஒரு நாளிலாவது கிராமங்களில்
கொண்டாடி மகிழ்கிறார்கள்.
காதல் என்ற காமன் படலத்தில் மேலை நாட்டுக் கலாச்சாரத்துக்கு தமிழன் கொஞ்சமும்
சளைத்தவனல்ல என்றுதான் இலக்கியங்கள் இறுமாப்போடு சொல்கிறது. நம் முப்பாட்டனுக்கு
முப்பாட்டன் அவனுக்கு முப்பாட்டனுக்கு முப்பாட்டன் என்ற ரீதியில் தொல்காப்பியன்
காலத்திலேயே இந்த மூன்றெழுத்து வலம் வந்ததை உணரலாம்!
அம்பிகாபதி - அமராவதியிலிருந்து சிலம்பு சிலாகிப்பதில், பாரதி...பாரதிதாசன் என்று
இன்று வரை பட்டியல் நீளும்!
அகம்-புறம் என்கின்ற இரண்டு கூறுகளைக் கொண்ட மிகச் சிறப்பான இலக்கியத்துக்குச்
சொந்தக்காரன் தமிழன்! இத்தகைய இரு திணைகளைப் பற்றி எடுத்தியம்பும் இலக்கியம்
உலகில் தமிழ் தவிர வேறு எந்த மொழிக்கும் கிடையாது என்று லட்சம் டாலர் பந்தயம்
கட்டிச் செயிக்கலாம்!
"ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம்"
என்றுதான் நச்சினார்க்கினியனார் தொல்காப்பிய உரையை துவக்குகிறார். 2381 சங்க
இலக்கியப் பாடல்களில், 1862 பாடல்களில் அகத்தினைப் பற்றிக் கூறுகின்றன. சங்க
இலக்கியப்பாடல்களைப் பாடிய புலவர்களில் 473 பேர்களில் 378 பேர்கள் அகப்பொருளைப்
பாடியவர்கள்! இதில் ஒவ்வொரு நிலையினரிடமும் அன்பு எனும் காதல் கையாளப்பட்டுள்ளது
தமிழாய்ந்த அனைவரும் அறிவர்! தொல்காப்பியரின் புணர்தல், பிரிதல், இருத்தல்,
இரங்கல், ஊடல் என்ற வரிகளையும் காண்க. களவு என்றதனாலேயே அது மறைந்து நடப்பதுதானே.
காதல் என்பது எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் உள்ளது
குறுந்தொகையில்....!
குறுந்தொகையில் இக்காதல் தலைவன் தலைவியிடத்தும், தலைவி-தோழியிடத்தும் ஒருவர்
மற்றொருவரிடம் காட்டுகின்ற அன்பின் பிறிதொரு பரிமாணமாகப் புலர்ந்திருப்பதைக்
காணலாம். திருமணங்களே பத்து விதமான திருமணங்கள் நடைபெற்றதாக சங்ககால
இலக்கியங்கள் பறை சாற்றுகின்றது. களவு மணம், தொன்றியல் மரபின் மன்றல், பரிசில்
கொடுத்து மணத்தல், சேவை மணம், திணைக் கலப்பு மணம், ஏறுதழுவி மணம் முடித்தல், போர்
நிகழ்த்தி மணமுடித்தல், துணல் கையாடி மணத்தல், பலதார மணம் என்று பத்துத்
திருமணங்கள் பகரப்படுகிறது!
களவுக் காதலை எடுத்துக்கொண்டால், " நுகர்வதற்குரிய வாலிபப் பருவத்தையடைந்து எங்கோ
பிறந்த தலைவனும் தலைவியும் எதிர்பாராது ஓரிடத்தில் எதிர்ப்பட்டு ஒருவரிடத்தில்
ஒருவர் அன்பு கொண்டு காதல் கொள்வதனை இயற்கைப் புணர்ச்சி என்று அக இலக்கணம்
கூறுகிறது. மனம் ஒருமித்த காதலர்கள் தாங்கள் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டு
மகிழ்ந்து இன்புறும் இடத்தை இடந்தலைப்பாடு என்றும் இந்தக் களவுக் கூடல் தலைவனின்
தோழனின் உதவியோடு நடந்தால் அதை "பாங்கற் கூட்டம் என்றும், தலைவியின் தோழி வழி
நிகழுமென்றால் அதை பாங்கியற் கூட்டம் என்றும் வழங்கியதை அறிய முடிகிறது!
இது குறித்து முனைவர்.வ.சு.ப.மாணிக்கம் அவர்கள் குறிப்பிடும் போது, "சங்ககாலக்
குமுகாயம் களவுக்காதலை மதித்துப் போற்றியது. கற்பு வாழ்வுக்கு...இல்லற
வாழ்விற்கு வழி வகுத்துக் கொடுத்தது. சங்ககாலக் காதல் களவொழுக்கம் தூயது.
களவுக்காதலர் மனமாசற்றாவர், மணந்து கொள்ளும் உள்ளத்தவர்; களவுக்காதல் வெளிப்பட்ட
பின்னரும் வாழ்பவர்" என்கிறார்.
பரணர்...!
'நடு யாமத்துப் பெய்யும் மழையைப் பொருட்படுத்தவில்லை. மேலும், மறைந்து வருவதற்கு
மழை துணையாயிற்று. வரும் போது மலர் பறித்துச் சூடிக் கொள்கிறாள். சிலம்பு ஓசை
செய்யாதவாறு அதனைக் கட்டி விடுகிறாள். ஊராரும் வீட்டாரும் அயர்ந்து தூங்கும் வரை
விழித்திருக்கிறாள். அதன் பின் வந்து காதலனைக் கண்டு கூடி மகிழ்ந்து வீட்டார்
விழித்துக் கொள்ளும் முன்னாகத் திரும்பி வந்து படுத்துக் கொள்கிறாள். ஆகவே,
இந்தப் பெண் மிகப் பெரியவள் என்று, புலவர் பாராட்டி மகிழ்கிறார். இச்செயலைச்
சமுதாயம் கடிந்திருந்தால் புலவர் பாராட்டியிருக்க மாட்டார். இச்செய்தியைப் பரணர்
பின் வருமாறு பாடுகிறார்.
"அரைநாள் யாமத்து விழுமழை கரந்து
வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து
விவகுப் புற்ற நல்வாங்கு குடச்சூல்
அஞ்சிலம் பொடுங்கி அஞ்சினள் வந்து
துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்ற கற்பிற் சான்ற பெரியள்
அம்மா அரி¨வௌஓ அல்லள்" ( அகம் 198)
திருமணம்.....!
காதலால் ஒருமித்துச் சேர்ந்து வாழ்ந்தவர்களின் மத்தியில் பிரச்னைகள் ஏற்பட்டு
பிரிவு ஏற்பட்டபோது அதனைத் தடுப்பதற்காக பின்னாளில் திருமணம் என்ற சடங்கு
அறிமுகப் படுத்தப்பட்டது. அதனைத் தொல்காப்பியர்,
" பொய்யும் வழுவும் தோன்றியபின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப" என்கிறார்.
குமுகாயத்தில் பெரியோர், சான்றோர்களை அய்யன்
என்று தொல்காப்பியர் காலத்தில் அழைத்திருக்கிறார்கள். இருமணம் இணையும் சடங்கை
இங்கே கரணம் என்கிறார் தொல்காப்பியர்!
காமத்துப்பாலில்....!
அய்யன் திருவள்ளுவன் கூட தமிழன் காதலில் திளைத்த பின்னரே இல்லறத்தை நாடியதைக்
காமத்துப்பாலில் கிளுகிளுப்பாய்ச் சொல்லுகிறாரே!
"யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்"
-திருக்குறள் 1094 காதலி தன் காதலைப் படரவிடும்
அழகை எவ்வளவு நேர்த்தியாகச் சொல்லுகிறார்.
இன்னொரு குறளில்
'குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தாள் போல நகும்." - குறள் 1,095
காதலி தன் காதலை வெளிப்படுத்தும் நேர்த்தியை
இந்த இரு வரியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார் என்றால் அவர் காலத்தில்
கண்டுணர்ந்து கொண்ட காதல் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று நம்மால் கற்பனை
செய்ய முடிகிறது.
அண்ணலும் நோக்க.....!
வில்லை முறிக்க வீறுடன் வரும் இராமனை மேல் மாடத்திலிருந்து சீதை பார்க்கின்றாள்.
இராமனும் அவளை நோக்குகின்றான். இருவர் கண்களும் சந்தித்த அந்த அற்புதப் பொழுதை
கம்பன் அழகாக
அறைந்து சொல்கிறான்.
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"
அதுவும் எப்படி கண்ணொடு கண்ணினைக் கவ்வி
ஒன்றையொன்று உண்ணவும் நிலை பெறாமல் உணர்வும் ஒன்றிட இருவரும் நோக்கினர் என்று
பால காண்டத்தில் உணர்ச்சி பொங்க வடித்திருக்கிறார்! கம்பர் காலத்தில் இந்தக்
காதல் ரசம் கண்டுணர்ந்ததால் அவர் இதனை இப்படிச் சொல்லுகிறார்.
இதே இடத்தை வால்மீகி சொல்லும் கோணமே வேறு என்பதை
இங்கே ஒப்பு நோக்குக்காக முன்வைக்கிறேன்.
கலித்தொகையில்....!
கொடிய விலங்குகள் புகா வண்ணம் கடுமையான காவலுடைய ஆட்டிடையர் அத்தகைய ஆயர்
குடியிலுள்ள அழகிய நங்கையை விரும்புகிறாய்! நின் காம வேட்கை என்ன இடுமருந்தோ?
இல்லை வேட்கை தோன்றியவுடனேயே தீர்க்கப்பட வேண்டியதோ? என்னை, நீ தொட்டுப் போகட்டுமே
என எண்ணி இசைந்தால், புணர்ச்சிக்கும் எளியேன் என்றெண்ணினையோ? மோர்
விரும்புவோர்க்கு மோர் கொடுப்பதால் எளியளாக இருக்கின்றாள். அதனால், வெண்ணெய்
கேட்டால் வெண்ணெய் தருவாள் எண்ணிக் கொண்டனையோ என்று சங்கப்பெண் தன் உள்ளம்
கவர்ந்தவனை வெகு எச்சரிக்கையோடு கையாண்டிருக்கும் பக்குவம் இந்தக் காலக்
காதலர்கள் கூட ஓர்ந்து கவனிக்கத் தக்கது!
முல்லைக் கலித்தொகையில் வரும் இந்தப் பாடலைப்
பாருங்களேன்
"கடிகொள் இருங்காப்பில் புல்லினத்து ஆயர்
குடிதோறும் நல்லாரை வேண்டுதி - எல்லா
இடுதேள் மருந்தோ நின்வேட்கை? தொடுதரத்
துன்னி, தந்தாங்கே, நகைகுறித்து, எம்மைத்
திளைத்தற்கு எளிய மாக் கண்டை ; "அளைக்கு எளியாள்
வெண்ணெய்க்கும் அன்னள்" எனக் கொண்டாய் " (முல்லைக்கலி - 110)
களவு கற்பு இவ்விரண்டும் வாழ்வொழுக்கங்களாக கருதப்பட்டது. களவொழுக்கம்,
கற்பொழுக்கம் இரண்டும் இரண்டறப் பிரித்துச் சொல்லிவிட முடியாது. அதாவது காதலர்கள்
களவின் போதும் கற்புடையவர்களாகவே இருந்திருக்கின்றனர். களவும் கற்பும் உரிய
தொடர்புடையது. கற்பு நல்வாழ்வு என்றும் களவு அவ்வாழ்வை எய்துவிக்கும் ஒரு
நன்னெறி என்றும் கொள்ளலாம்.
காதலும் கற்பும்....!
இதைப் பரிபாடல் எப்படி விளக்குகிறது பார்ப்போமா?
மாமயி லன்னார் மறையிற் புணர்மைந்தர்
காமம் களவிட்டுக் கைகொள் கற்புற்றென
மல்லற் புனல்வையை மாமலை விட்டிருத்தல்
இல்லத்து நீ தனிச் சேறல் [பரிபாடல் - 11]
"மயில் போன்ற அழகு நங்கையர்கள், களவொழுக்கத்தில்
தம் காதலரைக் கூடி இன்புறுவார்கள்; பின்னர், அவரே தம் களவொழுக்கத்தைக்
கை விட்டவராகிக் கற்பு நெறியினைக் கைக்கொள்வர்...." என்ற பரிபாடல்
அந்தக் காலத்தில் காதலர் நிலையைப் பறை சாற்றுகிறது!
ஆக, காமன் பண்டிகை... காதலர்களுக்கான தினம்
என்று வலுப்பெறாமல் வாலண்டைன் டே என்ற மேற்கத்தியக் காற்று உலகெலாம் உலாப் போகும்
இந்நாளில் அன்பர்கள் அனைவருக்கும் அன்பர்கள் தின வாழ்த்தைச் சொல்லுவதில்
மகிழ்ச்சியே!
"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே'' என்ற பாடல் வரிகளுக்கு
ஏற்ப நடப்பதல்ல இன்றைய நவீனக் காதல். பல காதல் திருமணங்கள் தோல்வியடைவதற்குக்
காரணம், திருமணத்திற்குப் பிறகு ஒருவரை ஒருவர் காதலிப்பதை நிறுத்தி
விடுகிறார்கள். திருமணம் வரை இனிக்க இனிக்கக் காதலித்த ஆணும் பெண்ணும்
திருமணத்திற்குப் பிறகு வரும் சவால்களையும், சங்கடங்களையும் ஏற்று ஒருவரை ஒருவர்
அன்பு செய்வதுதான் உண்மையான காதல். அர்த்தமுள்ள காதல்.
மகாபாரதத்தில் "யட்சப் பிரட்ச்னம் என்று ஒரு
பகுதி!
ஒரு பொய்கைக்குச் சென்று குடிநீர் கொண்டு வர
பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவராக நால்வர் போய் ஒருவரும் திரும்பவில்லை. பொய்கையில்
யட்சன் என்பான் காவல் காப்போன். தண்ணீர் எடுக்க ஐந்தாவதாக வரும் தர்மரைப்
பார்த்து,
"என் கேள்விகளுக்குச் சரியாகப் பதில் சொன்னால்
உன் சகோதரர்களை உயிர்ப்பிப்பேன். இல்லாவிட்டால் அவர்களைப் போல நீயும் உயிர் விட
வேண்டியதுதான் என்கிறான்.
யட்சன் கேட்ட கேள்விகளுள் ஒன்று "உலகிலேயே மிக
அழகானவள் யார்? என்று ஒரு கேள்வி?
காதலனின் கண்களில் காதலி! என்று தர்மர்
விடையிறுப்பார்.
எத்தனை அழகிகள் உலகில் இருந்தால் என்ன? தன்
காதலியின் முன் அவர்கள் அழகற்றவர்கள் தானே?
உண்டால்தான் கள் இன்பம், நினைப்பவர்க்கும்
காதல் இன்பம்.
காதல் வடு அல்ல வாழ்வின் அறம். இன்றைக்கு முன்னரும் காதல் இல்லாமல் இருந்ததா?
இனியும்தான் காதல் இல்லாமல் போகப் போகிறதா?
இது நிரந்தரமானது அழிவதில்லை. காதலில் தோற்றாலும் இன்பம், வென்றாலும் இன்பம்.

ஆல்பர்ட்
பெர்னாண்டோ அவர்களது இதர படைப்புகள்

முந்தைய கட்டுரைகள் காண

|