|
கவிதை:
395
பட்டாம்
பூச்சி

ஆகாயத்தை
அண்ணார்ந்து பார்த்தேன்
வானம் தெரிந்தது
பஞ்சுப் பொதியாய் மேகங்கள்
பரவிக் கிடந்தன
மேற்காய் சூரியன்
சிவந்து போயிருந்தான்...
தரை பார்க்க
தலை கவிழ்ந்தேன்
தூரத்தில் மலை தெரிந்தது
காடும் தெரிந்தது
காட்டுக் குள்ளிருந்து
நாணிக் கோணி நளினமாய்
நதி வந்தாள்
நீல வண்ண மேனியில்
நீந்திக் களித்தன மீன்கள்
பாய் விரித்தன படகுகள்
கரையோரம்
கால் அளவு தண்ணீர்-அதில்
கடுந் தவம் புரிந்தன
ஒரு காலில் கொக்குகள்
பள்ளம் பார்த்ததும்
பாய்ந்து குதித்தாள் நதி
பால் அருவி-
பெயர் மாறினாள்...
இதையெல்லாம்
இரசித்தது என் மனம்
‘கவிதை’ எழுதப் பேனாவை
கையில் எடுத்தேன்..
சல சலத்தது மனது
சடுதியில் திரும்பி
பின்னால் பார்த்தேன்
‘கவிதையா?’ ‘தேவையா?’
“என்னைப் பார்த்த பிறகுமா?”
இப்படிக்
கூறாமல் கூறி
குறும்பாய் புன்னகைத்தாள்..
பேனாவை மூடிவிட்டு
வைத்தகண் வாங்காமல்
வந்து அமர்ந்த அவளை
வாய் பிளந்து பார்த்தேன்...
இயற்கையின் அத்தனை அழகும்
இவளிடமா?
‘யார் இவள்?’.. கேட்டது மனம்..
இவள் தான்
இயற்கை தீட்டிய எழில் ஓவியம்
நீ தேடிய கவிதை...
கிடைத்தது பதில்...
கவிதையைத் தொட்டுப் பார்க்க
கை நீட்டீனேன்
‘பட’ ‘பட’ என்று
பறந்து போனாள்
பட்டாம் பூச்சி..!
-பாளை.சுசி.
|