|
குட்டிக்கதை-105
சாணியில் கேட்ட இறை நாமம்

ஒரு பெண் அடியாள் தனது குருவுக்குத் தொண்டு
செய்து வந்தாள். குரு எவ்வாறு சிரத்தையுடன் இறை நாமத்தை உச்சரிப்பாரோ அவ்வளவு
பக்தியுடன் இப்பெண் அடியாளும் ஜெபித்து வந்தாள். பசுவின் சாணியைப் பிடித்துக்
காய வைத்து விறகாகப் பாவிப்பதற்குத் தினமும் வேலை செய்வாள். இவ்வாறு செய்து
வெயிலில் காய்வதற்காக ஒரு நாள் வைத்தாள்.
அயலில் உள்ள வேறு ஒரு பெண் இதே வண்ணம் சாணி தட்டி, அடியவளின் சாணி
உருண்டைகளுக்கு அருகில் காய வைத்தாள். ஏதோ ஒருவிதமாக இருவரினதும் சாணி
உருண்டைகளும் கலந்து விட்டன. அயலவள் தனக்குரிய சாணி உருண்டைகளோடு அடியவளின் சாணி
உருண்டைகளில் சிலவற்றையும் சேர்த்து எடுக்க எத்தனித்தாள்.
இதனைக் கண்ணுற்ற குருவானவர், "எனது அடியாள் உருட்டிய சாணி உருண்டைகளை மிக
இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும்" என்று கூறிவிட்டு ஒவ்வொரு சாணி உருண்டைகளையும்
எடுத்துத் தனது காதருகே வைத்தார். சிலவற்றில் இறைவனது நாமம் ஒலிப்பது கேட்டது.
எதனிடம் இறை நாமம் ஒலிப்பது கேட்க முடியுமோ அவைகளைத் தனியாகப் பிரித்தார்.
இவ்விதம் இரு பெண்களுக்குமிடையில் வந்த பிணக்கை நீக்கி விட்டார்.
என்ன விந்தை; பெண் அடியாள் நின்றும், இருந்தும், கிடந்தும் எத்தொழிலைச்
செய்தாலும் இறை நாமத்தை இடைவிடாது உச்சரித்த வண்ணமாகவே இருப்பதனால் அச்சொற்களைச்
சாணியின் ஈரலிப்புத்தன்மை ஈர்த்தது. அதன் காரணமாக அச்சொற்கள் எதிரொலித்த
வண்ணமிருந்தன.
இது போலத்தான் நாம் எத்தனை தடவை இறைவனது நாமத்தை உச்சரிக்கின்றோமோ அத்தனையும்
நமக்கு நன்மையே. பின்னர் நீங்கள் உச்சரிக்காது இருக்கும் நேரத்தில் கூட மனதில்
அதன் எதிரொலியை உங்களால் உணர முடியும்.
ஆலயங்களில் அர்ச்சகர் மந்திரங்களை உச்சரித்து விக்கிரகத்திற்கு பூஜை,
புனஸ்காரங்கள் செய்வார். அவ்விக்கிரகம் அம்மந்திரத்தினை ஈர்த்து, அதற்கான
சக்தியையும் வெளிவிடும். இன்றும் சிறப்பாக, நியமத்தோடு பூஜை செய்யப்படும்
விக்கிரகங்கள் மிகுந்த சக்தியோடு விளங்குவதைக் காணலாம்.
முந்தைய குட்டிக்கதைகள் காண

|