........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குட்டிக்கதை-112

படைப்பின் ரகசியம் என்ன?

ஆசிரமம் ஒன்று இருந்தது. ஆசிரமத்தில் குருவும், நான்கு சீடர்களும் வசித்து வந்தார்கள். பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களை நல்வழிப்படுத்தும் வேலையை அந்த குரு செய்து கொண்டிருந்தார்.

அவருடைய வழிகாட்டலால் அந்தக் கிராமத்து மக்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி அமைதியாக வாழ்ந்தனர். ஆசிரமத்திற்கு வேண்டிய பொருட்களை அவர்கள் மனம் மகிழ்ந்து, போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வந்தனர்.

குரு தேவைக்கு மட்டுமே எடுத்துக்கொள்வார். அதனால் ஆசிரமமும் எந்தவித இன்னலும் இன்றி அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது. குரு சீடர்களுக்கு வேத பாடங்கள், நல்வழிக் கதைகள், இறைவனைப் பற்றிய கதைகள் என்று தினமும் ஒரு மணி நேரம் பாடம் நடத்துவார்.

"படைப்பின் ரகசியம் என்ன?" என்று சீடர்களில் ஒருவன் கேட்டபோது,

"அதை நீயே ஒருநாள் உணர்வாய்" என்றார் குரு.

கேட்ட அந்த சீடன் ஒரு நாள், ஆசிரமத்தின் ஜன்னல் வழியே, வெளியே இருக்கும் ஆள் அரவமற்ற பாதையையும், அதற்கு அருகில் உள்ள பெரிய ஆலமரத்தையும், அதன் அருகில் இருந்த கொன்றை மரத்தையும் அவற்றில் குடியிருக்கும் பறவைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த இரண்டு மரங்களுக்கும் இடையில் இருந்த பெரிய கரையான் புற்றில், மிகவும் நீளமான நாகப்பாம்பு ஒன்று விறு விறுவென ஏறி, புற்றுக்குள் நுழைந்தது.

நுழைந்து மறைந்தும் விட்டது.

அடுத்த நிமிடம், அந்தப் புற்றுக்குள் இருந்து ஆயிரக்கணக்கான கரையான்கள் வெளியேறி வந்து, வேறு திசையில் செல்ல ஆரம்பித்தன. எல்லாம் ஒரு அவசரகதியில் புற்றைக் காலி செய்து கொண்டிருந்தன.

அதைக் கண்ட சீடன் பதறிவிட்டான். என்ன கொடுமை? இந்த சிற்றினங்கள் கட்டி வசித்து வந்த இடத்தை ஒரு பாம்பு ஒரு நொடியில் கை பற்றிக் கொண்டுவிட்டதே!

இது அக்கிரமம் இல்லையா? கேட்க ஆள் இல்லையா?

அப்போது தற்செயலாக குரு அங்கே வர, சீடன் நடந்ததைப் பதற்றத்துடன் சொன்னான்.

"குரு சீடனை சாந்தப் படுத்தியதோடு, "பொறுத்திருந்து பார்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

அன்று மதியம் கனத்த மழை பெய்தது. அப்படியொரு அசுர மழை!

அந்த மழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாலையின் எதிர்ப்புறம் இருந்த பள்ளமான பகுதிகள் தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தன.

புற்றிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து புற்றும் நிரம்பி வழிய ஆரம்பித்தது.

அப்போதுதான் அது நடந்தது.

புற்றைவிட்டுத் தப்பி வெளியே வந்த நாகப் பாம்பு, நீரைக் கடந்து சாலைக்கு வேகமாக நெளிந்து நெளிந்து வந்து சேர்ந்தது. ஈரமாக இருந்த சாலையைக் கடந்து எதிர்ப்புறம் உள்ள பகுதிக்குத் தப்பிவிட அது முனைந்தது.

அப்போது அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த கிராமத்து இளைஞன் ஒருவன், பாம்பைக் கண்டு பதறாமல், தன் கையில் இருந்த கடப்பாரையால் பாம்பின் மீது இரண்டு போடு போட பாம்பு இறந்து மூன்று துண்டுகளாகியது. நீண்ட அந்தத் துண்டுகளைத் தன் கடப்பாரையின் உதவியால் தள்ளிக்கொண்டு சென்று எதிர்ப் புறம் இருந்த பகுதியில் தள்ளி விட்டு, சாலை சுத்தமாகி விட்டதா என்று ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் அவன் செல்ல ஆரம்பித்து விட்டான்.

இவற்றை எல்லாம் ஜன்னல் வழியாக நின்று பார்த்துக்கொண்டிருந்த சீடனுக்கு ஒரு மன நிம்மதி ஏற்பட உள்ளே ஓடிச் சென்று, குருவை அழைத்து வந்து இறந்து தூண்டுகளாகிக் கிடந்த பாம்பைக் காட்டிவிட்டு நடந்ததைச் சொன்னான்

குரு ஒன்றும் சொல்லாமல், ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

"அக்கிரமங்களையும், அக்கிரமக்காரர்களையும், இறைவன் பார்த்துக் கொள்வார்" என்று குரு அடிக்கடி சொல்லும் வாக்கியத்தின் பொருள் சீடனுக்கு இப்போதுதான் புரிந்தது.

 

முந்தைய குட்டிக்கதைகள் காண

 

 

                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.