........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

உதவிக்களம்-3

சந்தேகங்களும்-பதில்களும்

பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்பவருக்கு அரசு உதவி ஏதும் வழங்கப்படுகிறதா?   ( எம்.மாலதி, மதுரை-5)

பார்வையற்றோரை திருமணம் செய்து கொள்ளும் பார்வையுடையவருக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. பார்வையற்றோரைத் திருமணம் செய்து கொள்ளும் பார்வையுடையவருக்கு அவருடைய ஆண்டு வருமானம் ரூ 24,000/-க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் ரூ7,000/-க்கான தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் ரூ3,000/- ரொக்கமாகவும் சேர்த்து மொத்தம் ரூ10,000/- உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

இதேபோல் ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தவரைத் திருமணம் செய்து கொள்பவருக்கு அவருடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ24,000/-க்கு குறைவாக இருப்பவர்களுக்கு தேசிய சேமிப்பு பத்திரமாக ரூ3,000/- மற்றும் வங்கிக் காசோலையாக ரூ2,000/- என்று மொத்தம் ரூ5,000/- நிதியுதவியாக அளிக்கப்படுகிறது.

100% பேசும் திறனற்று காது கேளாதோரை திருமணம் செய்து கொள்பவருக்கு தேசிய சேமிப்பு பத்திரமாக ரூ3,000/- மற்றும் வங்கிக் காசோலையாக ரூ2,000/- என்று மொத்தம் ரூ5,000/- நிதியுதவியாக அளிக்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு இல்லை என்கிற போதிலும் திருமணம் செய்து கொள்பவருக்கு வயது 35 வயதிற்கு மேற்படாதிருக்க வேண்டும்.

மேற்காணும் உதவித் தொகைகளைப் பெற்றிட அதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதற்குத் தேவையான சான்றிதழ்களை இணைத்து மாவட்ட மறுவாழ்வு அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையவர்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்கும்.

பதில் அளித்து உதவியவர்:

எஸ்.சுப்பிரமணியன்,
தூத்துக்குடி-2

தொழிலாளர் வைப்புநிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தேவையான தகுதிகள் எவை?  ( பி.முத்துக்குமார், முக்கூடல்.)

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் கீழான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இக்கழகத்தின் வாயிலாக இரு வகையான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

1. குடும்ப ஓய்வூதியத் திட்டம்-1971( EPS-71)

  • உயிருடன் உள்ள உறுப்பினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை.

  • உறுப்பினர் உயிருடன் இல்லாத போது துணைவரான கணவன் / மனைவிக்கு வழங்கப்படுகிறது

  • இந்த ஓய்வூதியத் திட்டம் புதிய திட்டம் வந்த பின்பு கைவிடப்பட்டு விட்டது

2. தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம்-1995 (EPS-95)

  • உறுப்பினர் உயிருடன் இருந்தால் உறுப்பினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

  • உறுப்பினர் உயிருடன் இல்லாத போது துணைவரான கணவன் / மனைவி மற்றும் 25 வயதுக்குக் குறைவான இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது

  • இந்த ஓய்வூதியத் திட்டம் 15-11-1995-க்குப் பின்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்ந்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

       -தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்ந்தவர்களுக்கு அவர்களது மாத ஊதியத்தில் 12 % தொகை தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுபோல் அந்தத் தொழிலாளரைப் பணியில் அமர்த்தியுள்ள நிறுவனமும் அந்தத் தொழிலாளருக்கு 12 % தொகையைச் சேர்த்து மொத்தம் 24 % அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியாகச் செலுத்தப்படுகிறது. இதில் நிறுவனம் செலுத்திய 12 % தொகையில் 8.33% தொகை தொழிலாளர் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்டு விடுகிறது. இந்தப் பணத்துடன் அரசு வழங்கும் சிறு உதவித் தொகையும் சேர்த்து தொழிலாளர் ஓய்விற்குப் பின்பு ஓய்வூதியமாக வழங்குகிறது.

ஓய்வூதியம் பெற கீழ்காணும் தகுதியை உறுப்பினர்கள் பெற்றிருக்க வேண்டும்.

  • உறுப்பினர் குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றி 58 வயதிலோ அல்லது அதற்குப் பின்போ ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படும்.

  • உறுப்பினர் ஓய்வு வயதிற்கு முன்பாக 50 வயதுக்குப் பிறகு பணியிலிருந்து தாமாகவே ஓய்வு பெற்றிருந்தாலோ அல்லது விலக்கப்பட்டிருந்தாலோ ஓய்வூதியம் வழங்கப்படும்.

  • உறுப்பினர் பணியிலிருக்கும் காலத்தில் இறந்து விட்ட நிலையில் துணைவரான கணவன் / மனைவி மற்றும் 25 வயதுக்குக் குறைவான இரண்டு குழந்தைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப் படுகிறது

  • உறுப்பினர் 100% பணியாற்றக் கூடிய வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், தகுந்த சான்றிதழ்கள் அளிக்கப்பட்டால் ஓய்வூதியம் வழங்கப்படும்.

உறுப்பினர் 50 வயதுக்கு முன்பாக 10 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணியாற்றி தாமாக பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தால் அவருக்கு ஓய்வூதியத் தொகையாக செலுத்தப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்படாமல் 50 வயதிற்குப் பின்பு ஓய்வூதியம் அளிக்கப்படும். 10 ஆண்டுகளுக்குக் குறைவாக பணியாற்றியிருந்தால் ஓய்வூதியத்திற்காகச் செலுத்திய தொகை வைப்பு நிதித் தொகையுடன் சேர்த்துத் திருப்பி அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை அணுகலாம்.

பதில் அளித்து உதவியவர்: 

எஸ்.இளங்கோவன் M.A., B.L.,
வழக்கறிஞர், மதுரை-16.

முந்தைய உதவிக்களம் காண
 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.