........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

விவாதக்களம்-15

இளமைப் பருவத்தை சிறப்பாக்குவது நட்பே!  காதலே!

(தலைப்பு தந்த வாசகர்: கணோஜன், பாரீஸ், பிரான்சு)

as

நட்பே!

நட்பைச் சொல்ல வார்த்தைகளில்லை..!

இந்த உலகத்தில் உயிராக பிறந்து விட்டால் காதலை சந்திக்கிறார்களோ இல்லையோ நிச்சயம், இளமைக் (பள்ளிக்) காலத்தில் நட்பைச் சந்தித்தே ஆகவேண்டும். நட்புக்கு ஆண், பெண் பால் ஏதுமில்லை.

நட்புக்கு பின் தான் காதல்!!!
நட்பு என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது!
காதல் என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது!!
நட்பு என்பது பிறரை நம் வசம் இழுப்பது!
காதல் என்பது நம்மை பிறர் வசம் இழப்பது!!
சிறகுகள் கிடைத்தவுடன் பறப்பதல்ல நட்பு...
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதே நட்பு...
இரகசியங்கள் இல்லா ஓர் நட்பு...
இல்லா ஓர் தோழமை, காதலாகுமா?
நட்பு புனிதமானது!
ஆண் பெண் பேதம் பாராதது!!
கவலைகள் தீர்க்க வல்லது!
ஜாதி, மதம், இனம் அறியாதது!!
எல்லைகள் கடந்து சுவாசிப்பது!
நட்பின் ஆழத்தைச் சொல்வதற்கு
எனக்கு வேறு வார்த்தைகள் அகப்படவில்லை... 

-கணோஜன், பாரீஸ், பிரான்சு.

நட்பை விட்டுக் கொடுக்கக் கூடாது.

மாணவ பருவத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும். எனவே இந்த பருவத்தை மகிழ்ச்சியாகவும், ஜாலியாகவும் அனுபவியுங்கள். வாழ்வில் பல தோல்விகளையும், அவமானங்களையும் கடந்துதான் சாதிக்க வேண்டி உள்ளது. நிறைய தோல்விகளை தாண்டித்தான் உயர்ந்த நிலைக்கு வரமுடிகிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெறலாம். இந்த வெற்றியின் மூலம் கிடைக்கும் புகழ், பெருமைக்கு அடிமையாகி விடக்கூடாது. புகழும் பெருமையும் நமக்குத்தான் அடிமையாக இருக்க வேண்டும். நாம் பெறும் வெற்றிக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருப்பவர்கள் நண்பர்கள்தான். எனவே நண்பர்களை எந்த நிலையிலும் மறக்கக்கூடாது. நட்பை எதற்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது. காதலை விட நட்புதான் சிறந்தது. நட்பு மட்டுமே சாகும்வரை நம்முடன் இருக்கும். காதல் பாதியில் வருவதுதான். எனவே நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

-சு.பசுபதி, பிரான்சு.

 

காதலே!

காதலை விட்டு விடாதீர்கள்.

இளமைப் பருவத்தைச் சிறப்பாக்குவது நட்பா காதலா என்பதில் காதல் என்று ஓங்கிச் சொல்லிவிடலாம். நட்பு என்பது இளமைப் பருவத்தில் வருவதல்ல. சிறு வயதிலேயே நட்புப் பயணம் துவங்கி விடுகிறது. இது இளமைப் பருவம் கடந்து முதுமைப் பருவம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் காதல் அப்படியல்ல. இளமைப் பருவத்தில் மட்டுமே அரும்புகிறது. இந்தக் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் இளம் உள்ளங்கள் எத்தனையோ இருக்கின்றன. நட்பை எளிதில் சொல்லிவிடலாம். ஆனால் காதலை எளிதில் சொல்லிவிட முடியாது. இரு பாலினங்களுக்கிடையே ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ள காதல் ஒன்றே உதவுகிறது. காதல் என்பது கடலைப் போன்றது. இதில் உல்லாசமாய் நீந்துபவர்களும் உண்டு. இதில் ஆழம் தெரியாமல் மூழ்கிப் போனவர்களும் உண்டு. காதல் ஒரு போராட்டம் என்று கூட சொல்லலாம். இந்தப் போராட்டத்தில் திருமணத்தைக் கண்டவர்களும் உண்டு. மரணத்தைத் தேடியவர்களும் உண்டு. இரண்டுமில்லாமல் மனத்தைத் தொலைத்து பைத்தியமாகிப் போனவர்களும் உண்டு. காதல் என்பது இளமைப் பருவத்திற்கே உரிமையானது. இரு பாலினங்களிக்கிடையிலான இந்தக் காதலை இளமைப் பருவத்தில் மட்டுமே அடைய முடியும். இளம் உள்ளங்களே காதலை விட்டு விடாதீர்கள். காலம் கடந்து விட்டால் காதலைத் தொலைத்து விடுவோம். 

-காரைக்குடி எம்.ரமேஷ், சென்னை-17.

 

 

இது முடிவல்ல...  ...  ...  மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ...

msmuthukamalam@yahoo.co.in

- ஆசிரியர் குழுவினர்.

முந்தைய விவாதக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு