கவிதை:
311
தமிழனின்
தலைவிதி

ஈழமொன்றை ஈன்றெடுக்க
சாதி சமயம் விட்டு
குலம் கோத்திரம் தவறி
பிராமணர்கள் கூட
மச்சம் சமைக்க முயன்றார்கள்
தம்பியருடன்.
நல்லது தான் என
நால்வரும் கூறினர்
பின் கூடினர்-ஆனாலும்
காணவில்லையே உப்பை.
தேடினார்கள்
மக்களின் மனதிற்குள்
தமிழரின் கண்களுக்குள்
கன்னமோ கண்ணீரில் காய்ந்து
உப்பளமாகிக் கிடந்தது.
உப்புச்சப்பு இல்லாமல்.
காலப்போக்கில்
கண்களின் உப்புக்கள்.
நந்திக்கடலிலும் கொட்டிக்கிடந்தது.
பொங்குதமிழாகப்
பொங்கிப் போட்டார்கள்
மடைவைத்துக் கிடந்தன
தமிழ்பிணங்கள் தாராளமாக
சாப்பிடத்தான் சனமில்லை.
தின்பதற்கு சிங்கத்தைத்தவிர
அங்கு விலங்குகளே இல்லை.
தெருத்தெருவாய்
தொழுது பார்த்தோம்
அகிலமெங்கும் அழுதுபார்த்தோம்.
உலகம் உருள்வதாய் தெரியவில்லை
தொட்டைக்குள் தொலைந்து
தொங்கி கிடந்தது உலகம்.
உண்ணவும் முடியவில்லை
உமிழவும் முடியவில்லை
இனி சிங்கத்தை சிதறடிக்க
எங்கெங்கு எத்தனை
மிருகங்கள் உருவாகப்போகிறதோ?
புத்தி ஜீவிகளின்
புத்திகள் சீவப்பட்டதால்
புத்துள் ஜீவிகளாய்
புத்திரர் மாறினரே- இனி
புத்திஜீவிகள் எப்போ
சீவிய புத்தியுடன்
சிங்கத்தின் முன்னால் சீறுவர்?
சிங்கம் காட்டு இராசாதான்
நாட்டு இராசா ஆகுமா?
நாடு கட்டும் இராசா ஆகுமா?
பொறுத்திருந்துதான் பார்ப்போமே
வன்னி அகதிகள் சிறைக்குள்
செத்து மடியும் வரையா?
தமிழன் எனும் சுவடு
தொலையும் வரையா?
சிந்தித்துக் கொண்டே இருப்போம்
புத்தி சீவி முடியும் வரை
பின் எழுதுவதற்கு
பென்ல் இருக்காது.
தென்னிந்தியப் படங்கள் பார்த்து
படநடிகருடன் கூடி
படம்காட்டிக் காட்டியே
பட்டுப்போனது பாழ்பட்ட சமூகம்.
நம்பி நம்பியே
நடுக்கடலில் நந்தி
செத்துக் கிடந்ததோ?
நந்தி சிவனைப் பார்க்க
நகர்ந்து எப்போ வழிவிட்டது.
நாண்டு நட்டுக் கிடந்ததால்
நடுக்கடலில் நாசமானதோ?
சமைக்கவும் முடியவில்லை
சமைத்ததைத்
சாப்பிடவும் முடியவில்லை.
இப்படிச் சமைந்தது
தமிழனின் தலைவிதி
ஒரினத்தை
ஒரு தனிமனிதனாக்கியதன்
விளைவு இதுதான்
தொலைவுதான் அது.
நாம் சமைத்தோமா?
சமைந்தோமா?
-நோர்வே நக்கீரா.
|