ஒரு பெரிய மன்னர் இருந்தார். அவருக்கு ஆன்மிகத்துல ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்குப் போவார், வருவார். வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு போனார். கடவுளை வேண்டினார், அதற்கப்புறம் திரும்பி வந்தார்.
கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில ஒரு சந்நியாசி உட்கார்ந்திருந்தார்.
அவர் கண்ணை, மூடிகிட்டு தியானத்துல இருந்தார். மன்னர் அவரைக் கவனிச்சார் . அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் போல் தோன்றியது. அவரருகில் போய் நின்றார்.
அவர் மெதுவாகக் கண்ணை திறந்து பார்த்தார்.
உடனே அவரின் காலில் விழுந்தார். அவரும் ஆசிர்வாதம் செய்தார்.
அதன் பிறகு, அந்த மன்னர் தன்னிடமிருந்த விலை உயர்ந்த சால்வை ஒன்றை எடுத்தார். அந்த சன்னியாசிக்கு போர்த்தினார். பின்னர் அங்கிருந்து சென்றார்.
மறுநாள் காலையில் அந்த மன்னர் தன்னுடைய அரண்மனை மேல் மாடத்தில் நின்றிருந்தார்.
அப்போது தெருவில் சென்ற பிச்சைக்காரன் ஒருவனைப் பார்த்தார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், நேற்று அந்த சன்னியாசிக்குக் கொடுத்த விலை உயர்ந்த சால்வையை அந்தப் பிச்சைகாரன் போர்த்திக் கொண்டிருந்தான்.
மன்னர் உடனே காவலர்களை கூப்பிட்டு, அந்த பிச்சைக்காரனை அழைத்து வரச் சொன்னார்.
அவன் வந்தான்.
மனன்ர் அவனிடம், "உனக்கு எப்படி இந்த சால்வை கிடைத்தது?” என்று விசாரித்தார்.
அவன், "கோவில் வாசலிலிருக்கும் ஒரு சன்னியாசி, இதைக் கொடுத்தார்” என்று சொன்னான்.
மன்னர் உடனே, சன்னியாசியை அழைத்து வரும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அவர்களும் சன்னியாசியை அழைத்து வந்தனர்.
அவரிடம் அது குறித்து விசாரித்தார்.
சன்னியாசியும், “மன்னா! நீ இந்த சால்வையை எனக்கு போர்த்தி விட்டுச் சென்ற சிறிது நேரத்தில் இந்தப் பிச்சைக்காரன் அந்த பக்கமாக வந்தான். அவன் ஒரு கிழிஞ்ச துண்டையேக் கட்டியிருந்தான். உடம்பு குளிராலே நடுங்கிகிட்டு இருந்தது. பார்க்கப் பரிதாபமா இருந்தது. அதனால், உடனே இதை எடுத்து அவனுக்குப் போர்த்தி விட்டேன்” என்றார்.
"என்ன இருந்தாலும் இது எனக்கு செய்த அவ மரியாதை... அது மிகவும் விலை உயர்ந்த சால்வை... மன்னர்களுக்கு என்றே விசேசமாகத் தயாரிக்கப்பட்டது. அதை உங்களுக்கு நான் கொடுத்தேன், ஆனால், நீங்கள் அதை ஒரு பிச்சைகாரனுக்குக் கொடுத்திருக்கிறீர்கள்” என்றார் மன்னர்.
மன்னருக்குக் கோபம் குறையவே இல்லை. சன்னியாசி சிரித்தார்.
மன்னருக்கு கோபம் அதிகமானது. விளைவு அந்த சன்னியாசி சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்றிரவு மன்னர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார்.
அந்தக் கனவில், மன்னர் மறுபடியும் அந்தக் கோவிலுக்கு போகிறார். ஆண்டவன் சந்நிதியில் போய் நிற்கிறார். அங்கே கடவுள் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார்.
மன்னர், "கடவுளே! என்ன ஆச்சு உனக்கு?" என்று கேட்டார்.
கடவுள், " குளிர் தாங்க முடியலே" என்றார்.
உடனே மன்னர் தன்னிடமிருந்த விலையுர்ந்த சால்வையை எடுத்துக் கொண்டு கடவுளை நெருங்கினார்.
கடவுள் பயத்தில் கத்தினார்.
"என்ன அது? உன்னுடைய சால்வையா? அது வேண்டாம் எனக்கு"
மன்னர், "கடவுளே! இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்? நான் என்ன பாவம் செய்தேன்?” என்று கேட்டார்.
உடனேக் கடவுள் "நேற்று ஒரு சால்வையை எனக்கு கொடுத்தனுப்பினாய்! அதைக் கொண்டு வந்தவனுக்கு நீ ஒரு பரிசு கொடுத்திருக்கிறாய்! என்ன பரிசு தெரியுமா? சிறை தண்டனை !" என்றார்.
மன்னரை யாரோத் தலையில் தட்டுவது போல இருந்தது. திடீர் என்று விழித்துக் கொண்டார்.
அவருக்கு எல்லாம் புரிந்தது.
கனவு கலைந்து எழுத்த மன்னர், அங்கிருந்து ஓடிப் போய் சன்யாசி அடைக்கப்பட்டிருந்த சிறையின் கதவுகளை திறந்து விட்டார்.
சன்னியாசியின் கால்களில் விழுந்தார்.
"சுவாமி, நான் அறியாமல் தவறு செய்துவிட்டேன். தாங்கள் ஒரு மகான்! என்னை மன்னித்து விடுங்கள்!" என்றார்.
அந்த சன்னியாசி, "மன்னா! கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு! அதை நீ புரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கி நடந்தார்.