ஏழை விவசாயி ஒருவரிடம் சிறிய நிலம் இருந்தது. அதில் அவர் கீரை பயிரிட்டிருந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, நிலத்திற்குச் சென்று கீரை வகைகளைப் பறித்துக் கட்டிக் கொண்டு, அதை சந்தையில் விற்று வருவார். அதன் சொற்ப வருமானத்தில்தான் தன் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார்.
விவசாயி நிலத்திற்குச் செல்லும் வழியில் ஒரு முனிவர் குடில் அமைத்துத் தங்கியிருந்தார்.
அந்த முனிவர், அதிகாலை நேரத்திலேயே துளசியால் பெருமாள் விக்கிரகத்திற்குப் பூஜை செய்வதை, விவசாயி தினமும் பார்த்துக் கொண்டேச் செல்வார்.
ஒரு நாள் தன்னுடைய நிலத்திற்குச் சென்ற விவசாயி, கீரைகளை பறித்துக் கொண்டிருந்த போது, அங்கே ஒரு துளசிச் செடியும் வளர்ந்திருந்தது. அதில் இருந்து துளசி இலைகளைப் பறித்த விவசாயி, நம்மால்தான் தினமும் இறைவனை வணங்க முடியவில்லை. தினமும் வழிபாடு செய்யும் முனிவரிடமாவது இந்தத் துளசி இலைகளை வழங்கலாம் என்று நினைத்து, அதைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டார். கீரைகளைக் கட்டுகளாகக் கட்டிய பிறகு, கூடையில் வைத்தவர், அதன் உள்ளேயே துளசி இலைகளையும் வைத்தார்.
ஆனால், அவர் கட்டி வைத்த கீரைகளுக்கு உள்ளே ஒரு சிறிய கருநாகம் புகுந்து அமர்ந்ததை அவர் கவனிக்கவில்லை. கீரைகள் இருந்த கூடையைத் தலையில் சுமந்தபடி, முனிவரின் குடிலுக்கு வந்தார் விவசாயி.
தன் குடிலுக்குள் நுழைந்த விவசாயியை வாஞ்சையோடு ஏறிட்டுப் பார்த்தார் முனிவர். அதே நேரம், விவசாயியின் பின்புறம் ஒரு நிழலாடுவதையும் முனிவர் கவனித்தார். அது யார் என்று அவர் பார்த்த போது, அங்கு ராகு பகவான் நின்றிருந்தார். நடப்பது என்ன என்பதை ஒருவாறாக கணித்து விட்ட முனிவர், விவசாயியிடம் "அப்பனே... நான் சொல்லும் வரையில் உன் தலையில் உள்ள கூடையைக் கீழே இறக்க வேண்டாம். நான் இப்போது வந்து விடுகிறேன்"என்று கூறியபடி எழுந்தவர், விவசாயியின் கண்களுக்குத் தென்படாத ராகுவை, தன்னுடன் வரும்படி அழைத்தார்.
பக்கத்து அறைக்குள் சென்ற முனிவரைப் பின் தொடர்ந்து ராகுவும் அந்த அறைக்குள் நுழைந்தார். அப்போது ராகுவிடம், "ராகுவே... நீ எதற்காக அந்த ஏழை விவசாயியைப் பின் தொடர்கிறாய்?அதற்கான காரணத்தை நான் அறியலாமா?"என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ராகு, "முனிவரே... இந்த விவசாயியை, நான் கருநாக வடிவெடுத்துத் தீண்ட வேண்டும் என்பது விதி. அதற்கான நாள் இன்று தான். ஆனால், என்றும் இல்லாத அதிசயமாக, அந்த விவசாயி இன்று இறைவனின் பிரியமான துளசியையும் தன்னுடைய கூடையில் வைத்து சுமந்தபடி உங்கள் இருப்பிடம் வந்து விட்டார். துளசி அவரது தலையில் இருந்த காரணத்தால் என்னால் அவரைத் தீண்ட முடியவில்லை. அதனால்தான் பின் தொடர்ந்தேன். உங்களிடம் அந்தத் துளசியை ஒப்படைக்கவே அவர் வந்துள்ளார். அதை உங்களிடம் கொடுத்ததும் என்னுடைய வேலையை முடித்துக் கொண்டு நான் திரும்பி விடுவேன்" என்றார்.
ஏழையின் மீது முனிவருக்கு இரக்கம் உண்டானது. "ராகுவே... நீ அந்த விவசாயியைத் தீண்டாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?”என்று கேட்டார்.
"நீங்கள் இதுவரை இறைவனுக்குச் செய்த பூஜையின் பலன்களை, அந்த விவசாயிக்குத் தந்தால் அவரைப் பீடித்த தோஷம் விலகி விடும். நானும் இங்கிருந்து சென்று விடுவேன்" என்று ராகு கூறினார்.
மகிழ்ந்து போன முனிவர், "நான் இதுவரை பெருமாளை பூஜித்த புண்ணியம் என்று இருந்தால், அது அனைத்தையும் அந்த ஏழை விவசாயிக்கு தாரை வார்த்துத் தருகிறேன்"என்றார்.
மறுகணமே ராகுவின் உருவம் அங்கிருந்து மறைந்தது.
இப்போது விவசாயியிடம் வந்த முனிவர், "அப்பனே... நீ கொண்டு வந்த துளசி இலையை என்னிடம் கொடு. இனி தினமும் இது போல் துளசி இலைகளைக் கொண்டு வந்து தருகிறாயா?" என்று கேட்டார்.
இறைவனைப் பூஜை செய்ய முடியாவிட்டாலும், அந்தப் பூஜைக்காகத் துளசி இலைகளையாவது தரலாம் என்பதால், அகமகிழ்ந்து ஒப்புக் கொண்டார் விவசாயி.
அன்று முதல் தன்னுடைய நிலத்தில் கீரைகளுக்கு மத்தியில் துளசியையும் பயிரிட்டு வளர்த்து, முனிவருக்குக் கொடுத்தார்.