>கங்கையில் நீராடுவது, கங்கைக் கரையில் வசிப்பது, 'கங்கா' என்று உச்சரிப்பது, கங்கையின் நீரைப் பருகுவது, கங்கையை நினைப்பது என்று அனைத்தும் பாவம் போக்கும் செயல்களாகும்.
இமயமலையில், ‘ஸ்ரீகோமுக்' பனிச்சிகரத்தில் உற்பத்தியாகி, மேற்கு வங்காளத்தில் உள்ள கங்கா சாகரில் (வங்கக் கடலில்) சங்கமிக்கும் கங்கை, தான் பாய்ந்து வரும் வழிநெடுகிலும் உள்ள பல்வேறு தலங்களில், பல்வேறு சிறப்புகளுடன் திகழ்கிறது. இப்பெருநதியைத் தவிர, மேலும் சில நதிகள் கங்கை எனும் பெயரைப் பெற்றிருக்கின்றன. பொதுவாக, இந்து சமயத்தில் தண்ணீர் என்றாலே கங்கை என்றே சொல்லும் வழக்கம் இருக்கிறது. இங்கு சில கங்கை குறித்தத் தகவல்கள்;
அமர் கங்கா
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளது அமர்நாத் குகை. இதன் அருகே ஓடும் 'அமர் கங்கா' நதி நீர் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.
நீல கங்கா
ஒரு முறை, பார்வதிதேவியுடன் விளையாடிய போது, அவளின் கண் மை, சிவனாரின் முகத்தில் ஒட்டிக் கொண்டது. பரமனார் கங்கையில் முகம் கழுவ, நதி நீரின் நிறம் மாறியது. இதனால், 'நீல கங்கா'எனப் பெயர் பெற்றது.
காளி கங்கா
அமைதியின்றி ஆர்ப்பரித்து ஓடும் இந்த நதியின் சீற்றம், காண்போரைப் பயம் கொள்ள வைக்கும்.
ராம் கங்கா
இது, உத்தரப் பிரதேசத்தில் காசிப்பூர் என்ற இடம் தாண்டிப் பாய்கிறது.
ஜட கங்கா
உத்தரப்பிரதேசம், குமாயூன் மண்டலின் பித்தோ ராகர் என்ற மாவட்டத்தில் பாய்கிறது.
கோரி கங்கா
வெண்மையான நீர் கொண்டு வருவ தால் கோரி (வெள்ளை) கங்கா என்று பெயர். உத்தரப்பிரதேசத்தின் தார்சூலா முன்ஸியாரி கிராமத்தையடுத்து பாய்கிறது.
கருட கங்கா
உத்தரப் பிரதேசம், அல்மோரா பைஜ்நாத் சோத்திரம் அருகே பாயும் கங்கைக்கு, 'கருட கங்கா' என்று பெயர்.
பாண கங்கா
'ஜம்மு'வைத் தாண்டி, ஸ்ரீவைஷ்ணவி கோயில் அருகே பாய்கிறது பாண கங்கா.
பால கங்கா
இந்த நதி நீரில், ஸ்ரீவைஷ்ணவிதேவி தன் கூந்தலை அலசியதால், 'பால கங்கா' என்றுபெயர்.
ஆகாச கங்கா
கயிலாய மலையை பரிக்ரமா (கிரிவலம்) செய்யும் போது, அங்கு காணப்படும் நதியே ஆகாச கங்கை.
பாதாள கங்கா
ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீசைலம் என்ற சிவ சோத்திரத்தின் அருகே பாய்கிறது.
தேவ கங்கா
இது, மைசூர் - சாமுண்டி மலைக்குக் கிழக்கேப் பாய்கிறது.
துக்த கங்கா
வடமொழியில் 'துக்தம்' என்றால், பால் என்று பொருள். கேதார்நாத் என்ற ஜோதிர்லிங்க சோத்திரத்தின் அருகே பாய்கிறது.
வாமன் கங்கா
வாமன் என்றால், 'குள்ளம்' என்று பொருள். மத்தியப்பிரதேசம் ஜபல்பூரில், 'பேடாகாட்' என்ற சலவைக்கல் பாறைகள் உள்ள இடத்தில் பாய்கிறது.
கபில் கங்கா
நர்மதை பரிக்ரமா (வலம் வரும்) செய்யும் வழியில் வருவது, 'தம் கட்' என்ற ஊர். இங்கிருந்து சுமார் மூன்று மைல் தூரத்தில் ஓடுகிறது கபில் கங்கை.
கரா கங்கா
சோணபத்திரை நதியின் உற்பத்தி ஸ்தானத்துக்குத் தெற்கில் அமைந்துள்ள இடம் பிருகு கமண்டலம். இங்கு பாய்வது கரா கங்கா
மோட்ச கங்கா
நர்மதை நதியை வலம் வரும்போது சூலபாணேஸ்வரர் எனும் சேத்திரம் வரும். இங்கிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது 'மோக்கடி' என்ற கிராமம். இதையட்டி, 'மோட்ச கங்கா' ஓடுகிறது.