........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

   குறுந்தொடர் கதை

ஒரு இனிய கானம்

  மூலக்கதை: FELICIA MASON (பெலிசியா மேசன்)       தமிழாக்கம்: இஷாரா

 2.உதவாக்கரை அறிக்கை

அவன் அறைக்குள் நுழைந்த விநாடி பேச்சு சப்தம் நின்றது. விஷ்ணு முகேஷின் முதுகுக்கு பின்னால் சிலர் முணுமுணுப்பது கேட்டது. அவை என்றுமே அவனை பாதித்தது கிடையாது.

இதுவரை - அதாவது அவளும் முணுமுணுப்பதை அவன் காணும் வரை. ஒரு நிமிடம் அவளின் விசுவாசம் பற்றி சிந்தித்தான். நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்களை எல்லாம் சோதித்து விட்டான். அவளைப் பற்றி எதையும் கவனியாமல் விட்டு விட்டானோ? முக்கியமான எதையும் - அவன் முடிவு செய்துவிட்ட விஷயம் சரிதானா அறிவிக்க இது சரியான சமயமா?

திட்டங்களை வகுத்தாயிற்று என்று எண்ணியபடி பல்லைக் கடித்த பிறகு தான் இனி இப்படி பல்லைக் கடிப்பதில்லை என்று முடிவெடித்தது ஞாபகம் வந்தது.

"குட் மார்னிங்" என்ற அவனது குரல் நறுக்கென்றிருந்தது.

தலைமை நாற்காலியை நோக்கி நடந்தான், எப்போதும் அதில் அமர்வது அவனுக்கு பிடிக்காது. ஆனால் தாத்தாவின் பிடிவாதம் அறிந்த பின், வேறு வழியில்லை என்பது தெரியும். யாராவது ஒருத்தர் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்தித்தானே ஆகவேண்டும்.

"இன்றைய விஷயத்துக்கு செல்வோம்" என்று கூறி தயாரிப்பு பிரிவு அதிகாரியிடம் அறிக்கை வாசிக்க சைகை செய்தான்.

சுமார் ஒரு மணி நேரம் உற்சாகம் இல்லாமல் ஊர்ந்து சென்றது. விஷ்ணு சலிப்பில் சரிந்து விடுவோமோ என்றஞ்சி, ஜோதியை பார்வையில் நன்றாக படும் வகையில் இருக்கையில் இலேசாக சுழன்றான். அவனுடைய கவனத்தை சிதறவிடாமல் காத்து வந்த ஒரே விஷயம் அவள் தான்.

விற்பனைத் துறை உபதலைவர் சில வரைபடங்களை விளக்கும் வகையில் எழுந்த போது, ஜோதி அவனைப் பார்த்தாள். விஷ்ணு புன்னகைத்தான்.

மற்ற பெண்களைப் போல் பதிலுக்கு புன்னகைக்காமல் அவளுடைய விழிகள் விரிந்தன. குமரவேலின் பக்கம் பார்வையை திருப்பு முன் சில நொடி அவளது இமைகள் படபடத்தன.

விஷ்ணு பெருமூச்சு விட்டான்.

திரும்பவும் அறிக்கையில் கவனத்தை செலுத்தினான். கவனிக்க கவனிக்க அவனது புருவத்தின் இடையில் முடிச்சு விழுந்தது. ஜோதியின் பக்கம் பார்வையை வீசினான். அவளோ இருக்கையின் நுனியில் அமர்ந்து கீழ் உதட்டைப் பற்களால் கடித்தபடி பேனா மூடியை திருகிக் கொண்டிருந்தாள்.

இந்த மாதிரி சந்திப்புகளுக்கு பயன்படும் சுவரளவு தொங்கிய வெண்திரையை முகச்சுழிப்புடன் பார்த்தான்.

முதலாளி என்ற அதிகாரத்தைக் காட்ட அவன் விரும்பியதில்லை. ஆனாலும், யாரவது அவனை ஏய்க்க முயன்றால், அதை எப்போது எப்படி காட்ட வேண்டும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

"ஒரு கேள்வி."

அனைத்து ஜோடி கண்களும் விஷ்ணுவிடம் பாய்ந்தது. சிலரின் தூக்கத்திலிருந்து விழித்தது போன்ற தோற்றமும் அவனது கவனத்துக்கு தப்பவில்லை.

முகேஷ் பன்னாட்டு நிறுவனத்தின் வளர்ச்சி தேங்கி நிற்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. இந்த உதவாக்கரை அறிக்கைகளால் சலிப்பு தட்டியது அவனுக்கு மட்டுமில்லை அதை தயாரித்தவர்களுக்கும்தான்.

அந்த மேஜையைச் சுற்றியுள்ள, எல்லோரும் இல்லை என்றாலும், பாதிக்கும் அதிகமானோர் சம்பளமும், ஊக்கதொகையும் வெறுமனே வாங்கிச் செல்வதாக சந்தேகப்பட்டான். ஒன்று ஓய்வு காலம் வரை நேரத்தைப் போக்குவது இல்லையேல் போட்டி நிறுவனம் முன்வந்து அளிக்கும் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைக்கு தாவுவது.

இதற்கு முன் பேச்சின் நடுவே நிறுத்தப்பட்ட பழக்கம் இல்லாததால், குமரவேல் தடுமாறினார். பேச்சின் தொடர்ச்சி விட்டுப் போக, தொண்டையைக் கனைத்தவர் திருதிருவென விழித்தார். "என்ன, சார்?"

"இதைப் பற்றி மிஸ் ஜோதி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்."

ஜோதியின் விழிகள் விரிந்தன. கையில் இருந்த குறிப்பேட்டை இறுகப் பற்றியவள், பேனாவை தவறவிட்டாள். "நா...நானா."

நின்ற இடத்தில் இருந்தே குமரவேல் அவளை முறைத்தார். இந்த மாதிரி மாத சந்திப்புகளில் உதவியாளர்கள் யாவரும் பார்வைக்கு மட்டும் தான் பேசுவதற்கு அல்ல என்பது அனைவரும் அறிந்த விஷயம். அது தான் அந்த நிறுவனத்தின் வழக்கமும் கூட.

விஷ்ணு எழுந்து பேனாவை எடுத்து அவளிடம் நீட்டினான். ஒரு கணம் இருவரின் கரங்களும் உரசிக் கொண்டன. சட்டென்று மூச்சை இழுத்த ஒலி அவள் மறைக்க முயன்றும் அவன் செவிகளை எட்டியது.

"இன்று எல்லாவற்றையும் சற்று வித்தியாசமாகச் செய்யப் போகிறேன்."

"ஆனால் நான் இன்னும் முடிக்கவில்லையே." என்றார் குமரவேல்.

உட்காரவில்லை என்றால் உன் கதை முடிந்தது, என்று சொல்லாமல் சொல்லியது அவனது பார்வையில் இருந்த அதிகாரம்.

மறு பேச்சின்றி அமர்ந்தார்.

அறை முழுவதும் பரிமாறிக் கொள்ளப்பட்ட பார்வைகளில் பதற்றம் நிறைந்திருந்தது.

"உபதலைவர்கள் வெளிச்சுற்றில் அமரவும்," என்றான் விஷ்ணு. "உதவியாளர்கள் அனைவரும் முன்னிருக்கைக்கு வரவும்." தன்னுடைய இருக்கைக்கு திரும்பி சொன்னதை உறுதிபடுத்தும் விதமாக அந்த சிகப்பு நிற மேஜையை லேசாக தட்டினான். "சீக்கிரம், நாம் ஏற்கனவே இங்கே அதிக நேரம் செலவழித்து விட்டோம்."

"ஆனால் விஷ்ணு, மிஸ்டர் முகேஷ்...."

விஷ்ணு கையை உயர்த்தினான். "உங்களையும் சேர்த்துதான், சந்தோஷ் சார்" என்றான் விற்பனை துறை தலைவரை நோக்கி, அவன் பிறப்பதற்கு முன்பிருந்தே அந்த நிறுவனத்தில் இருப்பவர்.

 "நேரம் பொன் போன்றது. ஆம் விரைவாக."

நிச்சயமில்லாத பார்வை பரிமாற்றலுடன், அனைத்து உதவியாளர்களும் தங்களுடைய துறைத் தலைவர்களுடன் இடம் மாறினார்கள்.

அனைவரும் அமர்ந்ததும் விஷ்ணு புன்னகைத்தான். தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி கேட்டான்.

"இப்போது கூறுங்கள் மிஸ் ஜோதி, நீங்கள் இந்த நிறுவனத்தில் சேர்ந்து இரண்டு வருடம் இருக்குமா?"

"ஆமாம், சார்." என்று தலையாட்டினாள்.

"அந்த அறிக்கையில் இருப்பவற்றை நீங்கள் அறிவீர்கள், இல்லையா? சந்தையில் நமது நிலவரம் என்ன என்பது உங்களுக்குத் தெரியும்."

"..ஆமாம்."

அவன் என்ன செய்ய முயற்சிக்கிறான் என்று ஜோதிக்கு விளங்கவில்லை என்பது புரிந்தது. அதைப் பற்றி விஷ்ணுவிற்கு அக்கறையில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் இக்கட்டான சூழலில் அவள் எப்படி செயல்படுகிறாள் என்பதே.

"சொல்லு, ஜோதி." என்றான்.

ஒருமையில் அவளுடைய புருவங்கள் உயர்ந்தன. ஆம் சந்திப்பு அறையில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் மற்றுமொரு பிரச்சனை.

"நான் என்ன சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள், சார்?"

வெண்திரையில் தெரிந்த வரைபடங்களை அவன் சுட்டிக்காட்டி, "உன் துறைத் தலைவரின் அறிக்கையில் உள்ள குற்றம் குறைகளை ஏன் நீ சுட்டிக்காட்டக் கூடாது."

( தொடரும்)

பகுதி-1                                                                                                                                                                பகுதி-3

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு