|
கவிதை: 280
தம்பி
தங்கையரே...

காலடிச் சுவடுகள்
கண்டாயா ? தம்பி
கருத்தினை நெஞ்சினில்
கொண்டாயா ?
நேற்றைய உலகினில்
தோன்றிய மனிதர்கள்
தோற்றிய சரித்திரம்
புகட்டிய பாடங்கள்
தீட்டிய செவியினில்
பாய்ச்சிய செய்திகள்
பூத்திடும் விழிகளில்
காட்டிய காட்சிகள்
நெஞ்சினில் நீயும்
கொண்டாயா ?
நாளத்தில் பாய்ந்திடும்
உதிரத்தின் வேகம்
உசுப்புகின்ற ஆசைகளை
உணருகின்ற தருணத்தில்
உதிர்ந்துவிடும் இலை போல
முதிர்ந்து விடும் மனம்
அறிந்து விடு தம்பி
புரிந்துகொள் உண்மையை
முன்னே
நடந்தோர் பாதையை நீ
தொடர்ந்திடும் போதிலும்
மனதினில் கேள்வியை
அடுக்கடுக்காய் தொடுத்திடு
கிடைத்திடும் விடைகளை
தராசிலே நிறுத்திடு
நீதியின் எடைதனை நீயும்
ஏற்றியே காத்திடு
உண்மையின் பாதையில்
உழைத்திடும் செல்வமே
உன்னிடம் உறைந்திடும்
உள்ளத்தின் சத்தியம்
இருப்பது அனைத்தையும்
இழப்பதல்ல உன் தர்மம்
கிடைப்பதில் ஒரு துளி
கிடைக்காத உயிர்களுக்கு
கொடுப்பதில் உள்ள சுகம்
கொஞ்சமல்ல அறிந்துகொள்
உலகம் என்னும் புத்தகத்தில்
உனக்கென சில பக்கங்கள்
புரட்டிப் பார்க்கையில்
புல்லரிக்கும் வகை செய்திடு
நாளைகள் உன் கையில்
நல்லவையும் கெட்டவையும்
நாளைய தலைவர்கள் ஆகிடும்
தம்பி, தங்கையர்
உங்கள் செயல்களில்
உள்ளத்தில் தெறித்த
உணமைத் துளிகளை
உங்கள் மீதும் தெளித்து
நான் வாழ்த்துகின்றேன்
-சக்தி சக்திதாசன், லண்டன்.
|