........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 350

தாயின் மரணம்!

 

உள்ளமே...!
உன் மனமே
என் சொல் கேளாய்...!

உன் தாய்தான்
உந்தன் உயிர்தான்
அமுதூட்டினாள்
அழுகை தேற்றினாள்
அறங்கூறினாள்
அந்தோ... அவள்
இன்றில்லை
உன்னிடத்து.

ஏற்றுக் கொள்வாய்
உனை நீ
தேற்றிக் கொள்வாய்
கண்களே கலங்காய்

நிலா முற்றத்தில்
நிலவைக் காட்டி
நிலாச் சோறு
நித்தம் தந்தாள் - அன்று
நிலா உண்டு
நிறைபானை
சோறும் உண்டு
பசியாற்றிட
அன்னை இல்லை - இன்று

முகம் காண வேண்டும் என
மூன்று நாட்கள் முன்பாக
தொலைபேசியில் மொழிந்திட்டதாய்
தனையனை காணாமலேயே
கண்மூடி விட்டாள்
காலமாகி விட்டாள்.

பணம் சேர்ப்பதற்காய்
கடல் தாண்டிய உன்மகன்
பிணம் காண்பதற்காய்
பதைபதைக்கிறான் இன்று
அரபியிடம் அழுது மன்றாடி
இருபது நாட்கள்
நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை
விமானம் புறப்பட இன்னும்
நான்கு மணி நேரம் உள்ளது

அது புறப்பட்டு நாடு சேர
இன்னும் நான்கு மணி நேரம்
இவை எட்டு மணி நேரங்கள் அல்ல
எட்டு யுகங்கள் இவனுக்கு
என் தாயே என் தாயே
எதை நினைப்பேன்?
எதனை மறப்பேன்?

வாழவிருக்கும் மகனே
வாழும் பாதை
வழுக்குப் பாறையடா
நல்லவன் என்று
நானிலம் உனைக் கூறிட
நாட்கள் பல வேண்டுமடா

நீ வஞ்சமகன் என்றே
நாமம் சூட்டிட
ஓர் நாழி போதுமடா
நல்லவனாய் நீ வாழ்வதிலே
நான் பிறவிப்பலனை
அடைந்திடுவேனடா

அமுதமும்
அமுத மொழியும்
அன்றாடம் எனக்களித்த
அன்னையே, ஆருயிரே
நீ எங்கே...?

என் இரு கைகளை பற்றி
எனை நடைபழக்கி
நான் நானாக நடக்கையில்
நிலைதடுமாறி விடுவேனோ வென்று
பதைபதைத்த என் தாயே
உந்தன் உயிர் மூச்சை
எங்கே என தேடுவேன்
என் தாயே! என் தாயே!

இன்று சொந்தக்காலில்
நிற்பதாக எண்ணி
சொந்த நாட்டினைத்
துறந்துவிட்ட
உன் மகனை
உயிர்து றந்து
தண்டித்தாயோ...!
என் துன்பமே...
என் சோகமே...!

வாய்விட்டு அழுதிடவும்
எனக்கே நாதியில்லையே
நான் அழவேண்டும்
ஆனால் அழமுடியாது
ஏனென்றால் நானிருப்பது
ஆகாய விமானத்திலே
பெற்றவளோ மண்ணிலே
பிறந்தவனோ விண்ணிலே
புறப்பட்டு விட்டது விமானம்..

ஆகாய விமானம்
அழகிய பணிப்பெண்கள்
ஆங்கில மொழியின்
அடைக்கோழிகள்
அலங்கரிக்கப்பட்ட
அலங்காரிகள்
என்னிடம் கேட்கிறார்கள்

எனை மன்னிக்கவும்
என்ன உதவி-வேண்டும்
என்ன வேண்டும் உங்களுக்கு
ஏராளமான கேள்விகள்?
என்னைத்தான் கேட்கிறார்கள்
எனக்கென்ன வேண்டும்?
என் அன்னைதான் வேண்டும்.

என்மனது என்னிலும்
விசுவாசம் மிகுந்தது
எனக்கே முன்பாகவே
எனது அன்னையிடம் போய்
அடைக்கலம் கொண்டு விட்டது
எஞ்சியிருக்கும் என்னுடலுக்கு
என்ன தேவை
இருந்து விடப்போகிறது!

பாஸ்போர்ட் இல்லை
விசா, இமிகிரேசன்
எதுவுமில்லை
எந்தன் ஆழ்மனம்
ஆழ்கடல்களைத் தாண்டி
அம்மாவின் நினைவுகளில்
ஆழமாய் புதையுண்டுவிட்டது

நடைபழகித் தந்த தாயே...!
நீ தள்ளாடி நடக்கையில்
நானல்லவா உனைத்
தாங்கிப் பிடித்திருக்க வேண்டும்
காட்சிகளுக்கெல்லாம்
கதைகதையாய் நீ
காரணம் கூறாமல் விட்டிருந்தால்
காட்சிகளாகவே போயிருக்கும்
நான் கண்களால்
கண்டவை எல்லாம்

என் அருமைத்தாயே
இறுதிவரை நானுனக்குத்
தொல்லையல்லவா
தந்துவிட்டேன்

ஆடிமாதக் குளிரையே
அம்மா நீ தாங்கமாட்டாய்...!
இதோ என் வரவுக்காக
ஐஸ்பெட்டியில் அல்லவா
எனக்காக காத்திருக்கிறாய்...!

ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
அம்மா உந்தன் இடத்தை
என் மனதின் வெற்றிடத்தை
எங்ஙனம் நான் நிறைவு செய்வேன்
இப்படி ஒரு நாள் எந்தன்
வாழ்விலே வராமலே
இருந்திருக்கலாகாதா...?

வருமானங்களைத் தேடினேன்
வாழ்க்கை வசதிகளை
சேமித்து வைத்தேன்
என் அன்னையே
மொத்தமாக அல்லவா
இழந்து விட்டேன் இன்று...!
நான் நானாவதற்கு
நாணுகிறேன் இன்று...!

பிறக்கும் வரை வயிற்றிலும்
பிறந்த பின்னால் நெஞ்சத்திலும்
என இறக்கும் வரை
எனைச் சுமந்த என்தாயே
இதோ எந்தன் பாரம் தாங்காமல்
என்னை இறக்கி வைத்துவிட்டு
ஒரேயடியாக ஓய்வு கொண்டாயோ...?

முதன்முறையாக நானின்று
தனிமையை உணர்கிறேன்.
ஏதொரு பொருளின் அருமையும்
அது அருகில் இருக்கும் வரையில்
புரியாதடா என்று கூறுவாய்
அருமை அறிந்த பொக்கிஷத்தை
இழந்துவிட்டேன் இன்று...!

உனது விழியாலும்
உனது மொழியாலும்
உலகை எனக்கு
எடுத்துக்காட்டிய
என் தாயே...!
நீ விழி மூடுகையில்
நான் உந்தன்
அருகில் இல்லையே...?
நானமர்ந்த விமானம்
கடல்களை கடந்து விட்டது
காற்றின் மேல் மிதந்து
கரை சேர்ந்து விட்டது
நானோ நடுக்கடலில்
நீந்தித் தத்தளிக்கின்றேன்
நான் என்று கரைசேர...?

விமானம் தரையிறங்கி
வீடு சேர்ந்தாகிவிட்டது
வீட்டின் வாசல்
ஆட்களால் நிறைந்திருக்கும்
அன்னையமரும் திண்ணை
ஒருபோதும் நிறையாது இனி...!

வா மகனே எப்படி இருக்கிறாய்
ஏன் இப்படி இழைத்து
துரும்பாகி விட்டாய்...?
பயணத்தின் நடுவில்
உணவருந்தவில்லையா
ஏன் இப்படி முகம் வாடியிருக்கிறாய்...?
நேரத்திற்கு உறங்கினாயா
ஏன் உந்தன் கண்கள்
சிவந்து கிடக்கிறது...?

யார் கேட்பார் என்னை இனி
தாயின் பார்வையின் அர்த்தங்கள்
அவள் தன் பிள்ளையை
ஊடுருவி அறியும் ஆற்றல்
ஆயிரம் எந்திரங்களாலும்
இயலாதது...!

உயிரை உருக்கும்
குளிர் சாதனப் பெட்டி
நான் முகம் காண்பதற்காக
மணிக்கணக்கிலே...!

காத்திருந்த என் தாயுடல்
மூடிய கண்கள்
ஒட்டிய தேகம்
அடங்கி விட்டது...!

எனக்காகத் துடித்திருந்த
என் தாயின்
என் இதயம்...!

எனைக் காணாமலேயே
இயக்கத்தை
நிறுத்திக் கொண்டு விட்டது!

எனக்காக வாழ்ந்த
என்தாய் எந்தன் தாய்
எனைவிடுத்து
இறைவனிடம்
சேர்ந்துவிட்டாள்
இறுதிக் கடமைக்காக
இன்னும் சில நாழிகைதான்

நான் அழமாட்டேன்!
நா...ன் அழ.... மாட்டேன்!
நானழுவதை
என் தாயார்
தாங்க மாட்டார்!
எனவே நான்
அழ.... மாட்டேன்....!

நான் வாழப்போகிறேன்
என் தாயின் வழியேற்று
நான் வாழப் போகிறேன்...!

எதை நான் செய்தால்
என் தாயின் சிந்தை
மகிழ்ச்சியுறும்
என்பது எனக்குத் தெரியும்
எதை நான் சொன்னால்
என் தாய் அகமகிழும்
அதையே நான்
சொல்வேன்! செய்வேன்!!

அமைதியை தேடும்
என் தோழர்களே!
அடியேன் சொல்
செவி சாயுங்கள்
நிம்மதி என்பது
அன்னையின்
மடியிலே
நிறைவாய் உள்ளது!

உங்கள் அன்னையர்
அருகிலிருந்தால்
அன்பாகத் தலைசாய்த்துப்
பாருங்கள்...!

தாயின் அருமை பெருமையை
தாயில்லாதவனிடம்
கேட்டுப்பாருங்கள்...!!
தாய்மடி தேடுங்கள்...!!!

-முதுவை சல்மான், ரியாத்.
 

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.