கவிதை:
590
கூடி மகிழ்வோம் வாரீர்!
காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி
ஏறிநடந்த தூர அளவிற்கு
வந்து விழுந்த சில்லறையில்-
ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும்-
சீனி கிடைக்குமா?
கலைக் குடும்பம், பாரம்பரியம்,
பரம்பரை தொழில்
என்றெல்லாம் சொல்லி -
நாயனம் ஊதியவருக்கும்,
தபேலா அடித்தவருக்கும்
பொங்கலைத் தொலைக்காட்சியில் பார்க்கலாம்
வீட்டில் கொண்டாட இயலுமா?
பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து,
துணி அலசிப் போட்டு
குழந்தைகள் குளிப்பாட்டி,
கூரை முடிந்து, வேலி கட்டி
வந்த பணத்தில் - பழைய துணிகளை
தைத்துப் போட முடியும்
புதிய துணி வாங்க முடியுமா?
பேருக்கு இலவசம் கொடுத்து
ஊருக்கு வெளியே
எங்களை நிறுத்திய தேசத்தில்
பொங்கல் வரும் போகும் -
போகும் போகும் போகும் அவ்வளவே!!!
என்றாலும் -
முறுக்கேறிய உடம்பின்
திமிரில் கடிக்க அல்ல
மண்மிதித்து நெல் குவித்த என் ஏழைக்கு -
கடிக்கச் செங்கரும்பும்
கஞ்சிக் கூழ் குடித்து நெஞ்சி நிமிர நடந்த
என் தமிழர் ஜாதி பரம்பரைக்கு -
அஞ்சி வாழா
மனித ஆணிவேருக்கு சீனிப் பொங்கலும்...
உழைத்தவருக்காய் படைத்திட்ட
இம்மூன்று பொங்கலின் திருநாளும்
மனம் இனிக்க இனிக்கக் கவிதை
எழுதிக் கொண்டாடிக்
கூடி மகிழ்வோம் வாரீரே...!
-வித்யாசாகர்.
|
|