........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 665

வேங்கடவன் துதி!

சூழும் இடர்தன்னை சுடர்கண்ட பனியாக்கும்
ஏழுமலை யானே எனையாளும் பெருமாளே
வாழும் நாளெல்லாம் உனைவணங்கி நான்வாழ
பாழும் மனந்தன்னை பதப்படுத்த வேண்டுகிறேன்

அன்னை அலர்மேலு அகிலாண்ட நாயகியே
பொன்னை வேண்டியல்ல பொருளை வேண்டியல்ல
உன்னை வணங்குதற்கே உயிர்வாழ விரும்புகின்றேன்
என்னை ஆட்கொள்வாய் எனையாளும் தாயேநீ

பஞ்சுப் பொதிபோல பரவி வருகின்ற
மஞ்சு தவழ்ஏழு மலையானே கோவிந்தா
தஞ்சம் நீயென்றே தலைவணங்கும் என்போன்றார்
நெஞ்சில் நீங்காது நிலைத்திருக்க வேண்டுகிறேன்

வாழிவாழி யென வானோர்கள் கூத்தாட
ஆழிகடைந் தமுது அளித்தவனே மங்கையர்கள்
தாழிகடைந் தெடுத்த தயிர்வெண்ணை திருடியவர்
தோழி பலர்துரத்த தொடர்ந்தோடி ஒளிந்தவனே

தத்தம் குறையெல்லாம் தடையின்றி நீங்குமென
நித்தம் உனைநாடி நீள்வரிசை தனில்நின்று
சித்தம் மகிழ்வுடனே செப்புகின்ற கோவிந்தா
சத்தம் உன்செவியில் சங்கொலியாய் கேட்கிறதா

வெண்ணை உண்டவாய் விரிய வியனுலகு
தன்னைக் கண்டதாய் தடுமாறி மகிழ்ந்தாட
மண்ணை அளந்தவனே மாபலியின் தலையோடு
விண்ணை அளந்தவனே விமலனே வணங்குகிறேன்

மலையில் வாழ்பவனே மலையை நீதூக்கி
தலையின் மேல்வைத்தே ஆவினத்தை காத்தவனே
அலையில் கடல்மீது ஆனந்தப் பள்ளியென
இலையில் துயின்றவனே இறைவாநான் தொழுகின்றேன்

ஆதிமூல மென்ற அபயக்குரல் வந்துன்
காதில் விழச்சென்று காத்தவனே கோவிந்தா
வீதிதனில் வருவாய் வீழ்ந்து வணங்கிடுவார்
தீதுதனை முற்றும் தீர்த்திடுவாய் கோவிந்தா

எங்கும் உன்நாமம் எதிலும் உன் நாமம்
பொங்கும் உணர்வெல்லாம் போற்றும் திருநாமம்
தங்கும் மனதினிலே தடையின்றி உன்நாமம்
பங்கம் அடையாமல் பாஞ்சாலி காத்ததன்றோ

அம்மை அலர்மேலு அப்பன் திருமலையான்
தம்மை நாள்தோறும் தவறாமல் வணங்கிவரின்
இம்மை மறுமையென எழுபிறவி எடுத்தாலும்
உம்மை மறந்தென்றும் உயிர்வாழ இயலாதே

பாடி முடித்திவிட பரந்தாமா உன்அருளை
நாடி வருகின்றேன் நாயகனே வேங்கடவ
தேடி வருவார்கு திருமலையில் உனைக்காண
கோடிக் கண்வேண்டும் கொடுப்பாயா பரந்தாமா

முற்றும் உன்புகழை முறையாக நான்பாட
கற்றும் பல்லாண்டு காணாது தவிக்கின்றேன்
பற்றும் அற்றவரும் படைக்கின்ற பிரம்மாவும்
சற்றும் அறியாருன் திருவடியும் திருமுடியும்

வேதத்தின் வித்தேயுன் விளையாட்டை யாரறிவார்
நாதத்தின் சத்தேயுன் நாடகத்தை யாரறிவார்
பேதத்தை கொண்டவுள்ளம் பெருமாளே என்போன்றார்
சோகத்தை நீக்குமென சொல்லியிதை முடிக்கின்றேன்

தாங்கும் நிலையில்லா தடைபலவே வந்தாலும்
நீங்கும் படிசெய்யும் நிமலனே நாள்தோறும்
தூங்கும் முன்வணங்கி தூங்கி எழவணங்கும்
வேங்கி தாசன்நான் விடுக்கின்ற விண்ணப்பம்

செல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென
அல்லும் பகலுமென் அலைகின்ற உள்ளத்தை
கொல்லும் அரவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா
ஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய் 

-புலவர் சா. இராமாநும்.

 

 

 

 

 

 

 

m

 

புலவர் சா. இராமாநுசம் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு