கவிதை: 747
இந்தியன் என்று சொல்லடா...!

பழம்பெரும் பாரதத்தின் பண்டைய
பெருமையையும் நிகழும்
சிறுமையையும் சிந்தித்திருந்தேன்
மூவண்ணச் சேலையுடுத்தி முத்துப்போல்
முகத்தில் புன்னகையேந்தி பாரத்தாய்
என்முன் வந்து நின்றாள்!
தாயே வணக்கம்
அருளாசி தாருங்கள்
தங்களைத்தான் மனதில் தியானித்தேன்
செந்தமிழால் அன்னையை பூசித்தேன் என்றேன்!
கருணைவடிவினாள் கனிவான மொழியில்
கவிஞரே! முகத்தில் என்னவாட்டம் என்றாள்
பாரதம் ஏழையாய் அவதியுறுகிறதே- இதன்
துயர் துடைக்க வழியில்லையோ என்றேன்
தனியுடைமை கொண்டாடுவதால்
தண்ணீருக்கும் பஞ்சம் இங்கு
பொதுவுடைமை ஆகிவிட்டால்
தழைத்திடும் தர்மம் நன்கு என்றாள்!
சாதி, மத சண்டைகள் களைவதெப்படி என்றேன்
மன்னனே ஜலம், பானி, தூத்தம்
ஓர்பொருள் தாகம் தீர்ப்பது
ஈசன், அல்லா, இயேசு ஓர்பொருள்
ஜீவன்முக்தி கொடுப்பது
மசூதியில் ராமரை பிரதிஷ்டிப்போம்
சர்வேசன் கோயிலில் இயேசுவை அர்ச்சிப்போம்
மனம் ஒன்றுபட்டால் மதம் ஏது
சிந்தனை ஒன்றானால் சாதியேது என்றாள்!
தாயே மற்றுமோர் கேள்வி என்றேன்
பாகுமொழியாள் பகர்வாய் மகனே என்றாள்
எல்லைப்போரில் எண்ணற்ற சகோதரரின்
மரணம் கண்டு மனம்வெடிக்குது தாயே என்றேன்
தாய் மானம்காக்க பகைவர் கையிலிருந்து
என்னை மீட்க உயிர் துறந்தார்
தேசபக்தர், கடமை மறவர்
கடலளவு புகழ்படைத்தார் - உலகில்
நீடுவாழ்வார் என தொடந்தாள்
புலிகள் தமக்குள் சண்டையிட்டாலும்
பகைவர் தாக்க வந்தால் ஒன்றுபட்டு
எதிர்ப்பதுபோல்-நம்மக்களிடையே
ஆயிரம் பூசல்களிருந்தாலும்
நாட்டுக்கு ஆபத்தென்றால் ஒன்றுகூடி மீட்டிடுவார்
காஷ்மீரில் கையளவு நிலம்கூட
அயலவன் அடையமுடியாது கவலைவிடு என்றாள்!
நல்லாசி கூறி விடைபெற்றாள்!
மனம் புது உற்சாகத்தில் பொங்கியது
கையில் எழுதுகோல் எடுத்தேன்
இனிய இந்தியாவை நினைத்தேன்
பாரதபூமி பசுமையான பூமி - இங்கு
நிலையாக தங்கியுள்ளது சாமி
இதன் உயர்வை தினம்பாடு - ஒவ்வொரு
மாநிலமும் இந்தியாவின் புகழேடு
இதன் சிறுமைக்கு வாடு
பெருமைக்கு போராடு - நாம்
பாரத தாயின் வீரத்திருமகன்கள்
இந்தியாவின் இணையற்ற குடிமகன்கள்
வந்தேமாதரம்! வந்தே மாதரம்!
-விஷ்ணுதாசன்.
|
|