கவிதை:83
இரண்டாயிரத்து எட்டே வா!

கனத்த நினைவுகள் ஒருபுறம்
கலைந்த கனவுகள் மறுபுறம்
சுவைத்த நிகழ்வுகள் ஒருபுறம்
சுரந்த உணர்வுகள் மறுபுறம்
தயங்கித் தயங்கி மறையுது
இரண்டாயிரத்தி ஏழு
உலுப்பிய நிகழ்வுகள் அனைத்தும்
உலுக்குது நெஞ்சை வாட்டியே
வருடிய நாட்களின் வாஞ்சை
வருத்துது ஆண்டின் மறைவால்
ஆண்டொன்று போனால்
அத்தோடு வயதொன்றும் போகும்
மகிழ்ந்திடும் நெஞ்சு எமை
வாட்டிய கணங்களின் மறைவால்
வாடிடும் இதயம் நெஞ்சினில்
விளைந்த இன்பம் முடிந்ததினால்
ஆண்டின் முடிவு தந்திடும் பாடம்
அவனியில் இன்பமும் துன்பமும்
அடைவது சகஜம் என்பதுவே
கண்ணீர் காயாத முகங்கள்
கண்ணீரைக் காணாத முகங்கள்
விரும்பியோ விரும்பாமலோ
விலகுது இரண்டாயிரத்து ஏழு
எத்தனை பேரின் வாழ்வில்
எத்தகைய மாற்றங்கள் கொடுத்தது
அத்தனை வலுவுள்ள காலங்கள்
அதற்கும் காண்கிறோம் முடிவுதனை
போ .. போ.. இரண்டாயிரத்து ஏழு
பொக்கிஷமாய் ஓரிடத்தில் வைப்பேன்
நீ தந்த மகிழ்வான கணங்களை
கரைந்திடும் மேகம் பொழியும்
கனத்த மழையில் கரைத்திடுவேன்
உன்னால் விழைந்த சோகமிகு
உள்ளத்து நிகழ்வுகளை
அதோ ...கதவோரத்தில் ஒரு காலை
முன்வைத்து புன்னகைக்கிறது
இரண்டாயிரத்து எட்டு என்முன்னே.....
நினைவுகளைச் சுரப்பாயோ நீ
கனவுகளைக் கலைப்பாயோ
காத்திருந்த உள்ளங்களை
கண்ணீரில் கரைப்பாயோ
எதுவந்த போதும் துணிவாக
உன் வரவை எதிர்பார்த்து
உலகமே காத்திருக்கிறது
விதையாகிப் போன உயிர்கள்
விலையாக அமைதியை கேட்கிறார்
வினையான வாழ்வுக்கு உன் வரவால்
விடிவொன்றைக் கேட்கிறார் என்
உழைப்பாளித் தோழர்கள்
காசுப்பெட்டிக்குள் தன்னுடைய
கல்யாண வாழ்வைத் தேடும் சகோதரிகள்
காத்திருக்கிறார்கள் உன் வரவால்
செழிக்கப் போகும் தம்வாழ்வையெண்ணி
இரண்டாயிரத்து எட்டே இன்னும்
இரண்டடி எடுத்து உள்ளே வா .....
தெருவோரம் நடைபாதைக் கட்டிலில்
தூங்கும் அந்தச் சிறுவனுக்காய்
பள்ளிக் கதவுகளைத் திறந்துவிடு
நாளைய உலகுக்கு பாவம் அவன் தான்
பாதை காட்டப்போகும் தலைவன்
அடுக்குமாளிகைக் கட்டிடத்தில்
வீசியெறியும் எச்சிலைக்காய்
போட்டிபோடும் உயிர்கள் வாழும்
அந்தக் குடிசை வீடுகளுக்குள்
ஒரு மண்குப்பி விளக்காவது ...
எரியட்டுமே... கொஞ்சமாய்
நம்பிக்கையை மட்டுமாவது கொண்டு
உள்ளே வந்து விடு
ஆமாம்....
இரண்டாயிரத்து எட்டே .....
உனது மூத்த சகோதரம் இரண்டாயிரத்து ஏழு
உலகில் விட்டுச் சென்ற எதிர்பார்ப்புக்களால்
ஏங்கி நிற்கும் மக்கள் கூட்டம்
உன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டே.....
நீயென்ன
கொண்டு வந்திருக்கிறாய்?
நம்பிக்கையா ? நப்பாசையா ?
நயவஞ்சகமா ?
பாவம் அவர்கள் களைத்துப் போய்
தூங்கி விட்டார்கள்...
வரும்போது
மெதுவாய் வா... ஏனெனில்...
அவர்கள் கொஞ்ச நேரம்
தூங்கட்டுமே .....
- சக்தி சக்திதாசன், லண்டன்.
|