........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-32

இட்லி தோசையா வேண்டாம்.

இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்குச் செல்லும் உள்ளூர்காரர்கள் பலரும் அங்கு சென்று நம்மூர் உணவு வகைகளைத் தொடுவதே இல்லையாம். பிட்சா, பர்கர், ஹாட் டாக் என்கிற வெளிநாட்டு உணவு வகைகளைத்தான் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகிறார்களாம். அதே நேரத்தில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், பிட்சா போன்ற வெளிநாட்டு உணவு வகைகளைச் சாப்பிடும் இந்தியர்களை விநோதமாகப் பார்க்கின்றனர். மேலும் அவர்கள் ஆர்டர் செய்யும் உணவு வகைகளைக் கேட்டால் ஆச்சர்யம் ஏற்படுகிறது.

இது குறித்து இந்திய ஓட்டல்கள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் ராஜேஷ் மிஸ்ரா கூறுகையில், "இந்தியா வரும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டு உணவு வகைகள் நட்சத்திர ஓட்டல்களில் கிடைத்தாலும் அதைக் கேட்பதே இல்லை. இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற தென்னிந்திய உணவு வகைகளைச் சாப்பிடாத சுற்றுலா பயணிகளே கிடையாது. அதே போல் வட இந்திய உணவு வகைகளையும் அவர்கள் விரும்பிச் சாப்பிடுகின்றனர்." என்கிறார்.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்களில் சமையல் கலைஞராக வேலை பார்த்தவர் இர்ஷாத் அகமது. தற்போது டெல்லியில் உள்ள இண்டர் காண்டினன்டல் ஓட்டலின் தலமைச் சமையல்காரராகப் பணியாற்றுகிறார். அவர் கூறுகையில்,"வெளிநாடுகளில் உணவைப் பரிமாறுவதற்கு முன்பு அதைத் தட்டில் அல்லது கிண்ணத்தில் வைத்து அலங்கரிப்பதில் சமையல்காரர்கள் அதிகக் கவனம் செலுத்துவார்கள். உணவின் நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் உணவை அலங்கரிப்பதை விட அதன் நிறம் என்ன என்பதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. உணவின் நிறம் தங்களுக்குப் பிடித்ததாக இருந்தால் அது ருசியாக இருக்கும் என்று இந்தியர்கள் நம்புகிறார்கள்." என்கிறார்.

அதே நேரத்தில் தாஜ் ஓட்டலில் பணியாற்றும் ராஜேஷ் வாத்வா, "உணவு ருசியாக இருக்க வேண்டும் என்பதுடன் ஓட்டல் அழகாக இருக்க வேண்டும் என்றும் பலரும் விரும்புகிறார்கள். அதே சமயத்தில் சமையலுக்கு என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தி உள்ளனர் என்று இப்போது பலரும் கேட்கத் துவங்கியுள்ளனர்." என்கிறார்.

டெல்லியில் இத்தாலி உணவகம் நடத்தி வரும் ரிது டால்மியா, "தன் ஓட்டலுக்கு வருபவர்கள் ருசிக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். உணவின் நிறத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது" என்கிறார்.

எப்படியோ சாப்பாட்டு விஷயத்தில் மட்டுமில்லை எல்லா விஷயத்திலும் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்.

நன்றி: தினகரன் நாளிதழ்.

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.