........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-12 உண்மையான வாழ்க்கையை நேசியுங்கள்...
-சந்தியா கிரிதர், புது தில்லி.
இருட்டிற்கு அப்பால் வெளிச்சம் என்று பொதுவாக சொல்லிக் கேட்டிருக்கிறோம். இருள்
நம்மை சூழ்ந்து கொள்ளும் போது பயம், பதட்டம், ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும்
என்ற தவிப்பு, உதடுகள் கடவுளின் நாமங்களை சொல்லி அசைவது போன்ற நிலையும்
உருவாகிறது.
சுகத்தையும் பணத்தையும் நாடும் இன்றைய மனிதன் இவைகளை அடைவதற்கு பல போராட்டங்களை
சந்திக்கிறான். இந்தப் போராட்டங்களுக்கு அப்பால் கிடைக்கும் சந்தோஷம் தேவைதானா?
என்ற கேள்வியும் கூடவே பிறக்கிறது. தினமும் போராட்டத்தையும், பதட்டத்தையும்
வாழ்க்கையின் அங்கமாக கொண்டு இந்த மாயமான உலகின் சுகபோகங்களை அனுபவிக்க மனிதன்
பெரிதும் கஷ்டப்படுகிறான். இத்தனைக் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு அன்றாட
வாழ்க்கையை வாழ்வதே சிரமமாகி விடுகிறது. இதனால் மனிதன் வாழ்க்கையில்
சலிப்படைகிறான். பிடிமானமில்லாத வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான்.
காலம் காலமாக மனிதன் உலகின் பரம்பொருளான பணத்தால் கிடைக்கும் சுகத்தையும்,
தற்காலிகமான சந்தோஷத்தையும் பெறுவதற்கு வாழ்க்கையின் அமைதியையும், நிம்மதியையும்
தொலைத்து விட்டு பதட்டமான தவிப்பான வாழ்க்கை வாழ்கிறான். வாழ்க்கையின் உண்மைத்
தத்துவத்தை புரிந்து கொள்ளாமலே நிலையில்லாத சுகத்தை நாடுகிறான். எப்போது உண்மைத்
தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சி எடுத்துக் கொள்கிறானோ அப்போதே அவன் மாயாஜால
உலகின் சுகத்தையும், சந்தோஷத்தையும் இழக்கிறான்.
உண்மையான பாதையை நாடும் போது நமக்குள்ளே பல கேள்விகள் பிறக்கிறது. "நாம் யார்?
நாம் எதற்காக இந்த மனிதப் பிறவி எடுத்துள்ளோம்?"என்ற கேள்விகள் நமது
விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்புகிறது. இந்த விழிப்புணர்ச்சியே நமக்குள்ளே
பிறந்த பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறது. உண்மையான பாதை நம்மை தெளிவாக
சிந்திக்க வைக்கிறது. அப்போது தான் நாம் கடவுளை நினைக்கிறோம். அன்றாட வாழ்க்கை
வாழ்வதற்கு காரணமான பணத்தின் மீதிருந்த மோகத்தைக் குறைத்து, அமைதியான
பதட்டமில்லாத வாழ்க்கையை வாழத் தொடங்குகிறோம். முன்பு வாழ்ந்த பகட்டான
வாழ்க்கையின் மூலம் நிலையில்லாத சந்தோஷம், எப்போதும் எதையாவது இழந்து விடுவோம்
என்ற பயம், தவறான நம்பிக்கை, பிடிமானமில்லாத வாழ்க்கை அனைத்தையும் இழந்து
உண்மையான பாதையை நாடிக் செல்லும் போது நமக்கு மனநிம்மதியும், தன்னம்பிக்கையும்
பிறக்கிறது.
உண்மையான வாழ்க்கை தெம்பான சூழ்நிலையையும், தெளிவான எண்ணங்களையும், பிரச்சனையைக்
கண்டு ஒளிந்து கொள்ளாமல் எதையும் சமாளிக்கும் தன்மையைக் கொடுக்கிறது. உண்மையான
பயணம் என்றும் எப்போதும் நிலையான அளவில்லாத சந்தோஷத்தையும் அமைதியையும்
கொடுக்கிறது. ஒவ்வொரு இரவுக்கு பின்னால் எப்படி உதயம் உதிக்கிறதோ அது போல
ஒவ்வொரு போராட்டத்திற்குப் பின்னால் அமைதி நிலவுகிறது. இருண்ட பாதையில் சிக்கித்
தவிக்கும் போது கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அந்த
பாதையின் முடிவில் பிரகாசமான பாதை ஒன்று ஆரம்பமாகும். இதுதான் உண்மை, இது தான்
வாழ்க்கை. _____________ |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.