........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-2 முதியவர்களின் முணுமுணுப்பு
-எட்டயபுரம் சீதாலட்சுமி, ஆஸ்திரேலியா.
உலகமெங்கிலும் ஒத்த குரல். மனத்தைத் தொடும் பிரச்சனையை, முதியவர்களின் முதுமைக் காலப் பிரச்சனையை, முத்துக்கமலம் மின் இதழ் மூலம் மனம் திறந்து பகுதியில் திரு. சக்திதாசன் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.
மரணம் மனிதனுக்கு நிச்சயம். அவர்கள் வாழ்ந்தே ஆக வேண்டும். வயதாகி விட்டதே என்று அவர்களைக் குழியில் தள்ள முடியாது. சமீபத்தில் நடந்த ஆய்வின் படி மரண காலம் தள்ளிப் போக ஆரம்பித்து விட்டது. எனவே முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. எல்லோருக்கும் அக்குடில் வாழ்க்கை உண்டு இழந்த இளமையும் சக்தியும் மீண்டும் திரும்பாது. துன்பத்தை குறைக்க வழி காண சிந்தனையைச் செலுத்தியாக வேண்டும்.
இந்தியாவில் வசதியுள்ள, வசதியற்ற முதியோர்களுக்கென்று இல்லங்கள் இயங்கி வருகின்றன... அங்கு நடப்பதென்ன? ஒன்று பிள்ளைகளைக் குறை கூறுவது அல்லது பிள்ளைகளின் பெருமைகளைப் பறை சாற்றுவது போன்ற அரட்டை அரங்கமாக நடந்து கொண்டிருக்கும். வெளிப்புறத்தில் அரட்டை என்றாலும் உள்ளங்களில் ஆதங்கம் புகைந்து கொண்டிருக்கும். பிள்ளைகளுக்காக உழைத்துத் தேய்ந்து, தன் பொருளையும் இழந்து தற்போது தனிமைப் பட்டுள்ளது சரியாகுமா? எல்லோருடைய வருங்காலமும் இதுதான்.
காலச் சுழற்சியில் கூட்டுக் குடும்பம் கலைந்து விட்டது. ஆங்காங்கே சிலர் வயதானவர்களை வைத்துக் கொண்டிருக்கின்றனர், எப்படி,,,? அடுப்பங்கரைக்கு, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளப் பெண்களும், வெளி வேலைகளுக்கு ஆண்களும் பயன்படுத்தப் படுகின்றனர். ஏற்கனவே செய்த வேலைகளாயினும் மதிப்புடன் நிகழ்ந்தவைகள். இப்பொழுது வேலைக்கரர்கள் கிடைக்கவில்லை என்றோ அல்லது நம்பிக்கைக்குரியவர்களிடம் வேலை வாங்க வேண்டுமென்றோ பயன்படுத்தப் படும் பொழுது முதியவர்களுக்கு மன வலி ஏற்படுகின்றது. இந்நிலை மாற என்னென்ன வழிகள் செய்யலாம் எனத் திட்டமிடுதல் புத்திசாலித்தனமானது.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்குச் சென்றிருக்கின்றேன். பல முதியோர் இல்லங்களைப் பார்த்திருக்கின்றேன். மேலை நாடுகளுக்குச் சென்ற பொழுது தனித்து வாழும் முதியோர்களைச் சந்தித்திருக்கின்றேன். தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கின்றேன். இங்கும் என் பார்வை முதியோர்களிடம் படர்ந்தது. இங்குள்ள தொண்டு நிறுவனங்கள் வயதானவர்களுக்காகச் செய்யும் பணிகள் பாராட்டும் வண்ணம் அமைந்திருக்கின்றன. இது தொடக்கம்தான். நோக்கமும் செயலாற்றும் தன்மையும் சிறப்பாக இருக்கின்றன.
அவர்கள் கூறுவது “வயதானவர்களிடம் நிறைந்த அனுபவ அறிவு இருக்கின்றது. இதனை ஆக்கப் பூர்வமான காரியங்களில் பயன் படுத்த வேண்டும்”. முதலில் வயது இடைவெளி மாற ஆங்காங்கே நடக்கும் பயிற்சி முகாம்களில் இவர்களைப் பேசச் சொல்லுகின்றனர். புதுமையும் பழமையும் கலந்து பேச வாய்ப்பு ஏற்படுத்துகின்றனர். மாறிவரும் உலக நடப்புகள் அவர்களுக்கும் தெரிய வேண்டுமென்று அவர்களுக்கேற்றார் போல கம்ப்யூட்டர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். முக்கிய தினங்களில் அவர்களுக்கேற்றார் போல விளையாட்டுப் போட்டிகள் வைக்கின்றனர். தங்களை உபயோகமற்ற சருகுகள் என்று மற்றவர்கள் நினைக்கவில்லை என்ற உணர்வை ஏற்படுத்துகின்றனர்.
இன்று சில இடங்களில் நடக்கும் இந்த சேவை நாளடைவில் உலகம் முழுவதும் விரிவடையும். விரிவடைய வேண்டும். இந்த முதியோர்கள் முணுமுணுப்புகள் மாற வேண்டும்.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.