தொடர் கட்டுரை-1.
பகுதி-14

நல்ல பெயர்
வாங்கலாம்.
-தேனி.எம்.சுப்பிரமணி.
14.
பொறுமையாக இருக்கப் பாருங்கள்.

இப்போதெல்லாம் சிறிய விஷயத்திற்குக் கூட பொறுமையில்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது. இந்தப் பகைமை நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது. நாம் பொறுமை இழப்பதால் நம்மையே இழந்து போகிறோம் என்பதை யாரும் உணர்வதில்லை.
எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் அதைப் பெரியதாக நினைத்துக் கொள்வதால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்குப் போய் விடுகிறோம். எந்த விசயத்தையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலும் போய் விடுகிறோம்.
பொறுமை நமக்கு பல உண்மைகளைக் கற்றுத் தருகிறது. எதையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையை நாம் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். பொறுமையாயிருப்பது நமக்கு கஷ்டமாகத் தோன்றினாலும் அது நமக்கு பலமான மன வலிமையையும் அதன் மூலம் பல நன்மைகளையும் தருகிறது.
பொறுமையாயிருப்பதற்கு இந்த பூமியை உதாரணமாகச் சொல்வார்கள். இந்தப் பூமியில் எத்தனையோ நல்லது கெட்டது நடந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கும் பூமியை ஒரு தாயாக இந்து மத புராணங்கள் பெருமைப் படுத்துகிறது.
ஒரு மண் ஜாடியின் கதையைக் கேளுங்கள்.
ஒரு கலைப்பொருள் கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது ஒரு மண் ஜாடி. அதில் அவ்வளவு கலை நுணுக்கம். அதிலிருந்த மலர் ஓவியங்கள் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தது.
இந்த ஜாடியின் அழகைக் கண்டு வியந்த சிறுவன் ஒருவன் அந்த மண்ஜாடியிடம் "எப்படி இந்த அழகிய வடிவத்தைப் பெற்றாய்?" என்று கேட்டான்.
"சிறுவனே நான் உடனே இந்த அழகிய உருவத்தைப் பெறவில்லை. நான் இந்தப் பூமியில் மண்ணாக, மனிதர்களின் நடைபாதையாக, விலங்குகளின் மேய்ச்சல் தரையாகக் கேட்பாரற்றுக் கிடந்தேன்.
ஒரு நாள் கலைஞன் ஒருவன் என்னை மண்வெட்டி கொண்டு வெட்டினான். ஆ! அப்போது நான் அடைந்த வேதனை... சகிக்க முடியாத ஒன்று. "பொறு...பொறு..." என்று ஆணையிட்டது இறைவனின் குரல். பொறுத்திருந்தேன். பின்னர் என்னைத் துவைத்துப் பிசைந்து, தண்ணீர் ஊற்றி, மிதித்து...அப்பப்பா... அப்போது நான் பட்ட இம்சை... கதறினேன்.
பொறு மண்ணே! மீண்டும் ஆணை ஆண்டவனிடமிருந்து.
பிசைந்த என்னைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றினான் அவன். எனக்குத் தலை சுற்றி, மயக்கம் வந்தது. சுற்றிச் சுற்றி இறுதியில் ஜாடியாக வடிவெடுத்தேன். ஆனாலும் நான் அனுபவித்த வேதனை... அதிகம்.
"பொறுத்திரு" இறைவனின் குரல்.
"பொறுத்திருந்தேன். பிறகு என்னைத் தீயிலிட்டுப் பொசுக்கினான். அப்போது வெந்து உறுதிப்பட்டேன். தாங்க முடியாத எரிச்சல். பொறுத்திருந்தே. அதன் பிறகு ஏதேதோ வண்ண ரசாயணங்கள் என் மேனியில் பூசப்பட்டது தகிப்பு... தாங்க முடியாத வேதனை...
"இன்னும் சற்று பொறுத்திரு..." கடவுளின் குரல்.
"தகதகப்பு. வண்ணப்பூச்சு. ஈர்க்க வைக்கும் கோலப்புதுமை. ஆஹா... இப்போது நான் அழகின் அற்புதம். காண்போரை லயிக்க வைக்கும் எழில் ஜாடியாக ஒப்பற்ற கலைப்பொருளாகக் காட்சியளிக்கிறேன்" என்று அதன் அழகின் ரகசியத்தையும் அதற்காக அது அடைந்த அவதிகளையும் அது காட்டிய பொறுமைகளையும் சொல்லி முடித்தது.
எந்தவொரு விசயத்திலும் பொறுமை தேவையாயிருக்கிறது. பொறுமையாயிருப்பவர்கள் பல இடங்களில் நல்ல பெயரைப் பெற்றிருக்கிறார்கள். பல தொழில்களில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். நீங்களும் நல்ல பெயரையும் முன்னேற்றத்தையும் பெற பொறுமையை இன்றிலிருந்தே கடைப்பிடிக்கத் துவங்குங்கள்.
(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-13
வழிமுறை-15
|