........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-25

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

25. பிறருக்குப் பயனில்லாத செயல்பாடு!

 "யாரும் செய்யாத ஒன்றை நாம் செய்து அதன் மூலம் தான் மட்டும் சாதித்து விட்டதாக பெருமை கொள்ள வேண்டும்" என்கிற எண்ணத்தில்தான் பலரும் தங்கள் வாழ்க்கையில்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த சாதனை பிறருக்குப் பயனளிக்கும்படியாக இருந்தால் நாமும் அதைப் பாராட்டலாம். ஆனால் எவருக்கும் உபயோகமற்ற செயலைச் செய்துவிட்டு அதன் மூலம் பெருமைப்பட்டுக் கொள்வதில்தான் பலரும் தங்கள் வாழ்க்கையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். உபயோகமில்லாத ஒன்றிற்காக உழைப்பை வீணடித்துக் கொண்டிருக்கும் பலருக்கு இந்த உண்மை தெரிவதில்லை.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது. இந்த ஆர்வம் பிறருக்குப் பயனளிப்பதை விட தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் பயனளித்தால் போதும் என்கிற குறுகிய நோக்கத்தில்தான் செயல்படுகிறது. இந்த செயல்பாடுகள் பெரும்பான்மையாக தேவையற்றதாகவே இருக்கின்றன. இதற்காக வாழ்க்கையில் பல காலங்கள் வீணடிக்கப்படுகின்றன. பணம். பொருள் என்று மட்டுமில்லாமல் தேவையற்றவைகளைத் தேடிப் பலரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு சாதகர் வந்தார். அவர் பல சித்திகள் கைவரப் பெற்றவர்.

ராமகிருஷ்ணர் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அந்த சாதகர் சொன்னார்.

"பத்தாண்டுகளாக நான் யோகப் பயிற்சி செய்து நீரின் மேல் நடக்கிற சாதனை கைவரப் பெற்றேன். இப்போது கூட நீரின் மேல் நடந்துதான் யமுனை ஆற்றைக் கடந்து வந்தேன்" என்று சொன்னார்.

"ராமகிருஷ்ணர் தன் திறனைக் கண்டு வியந்து பாராட்டுவார்" என்று அவர் எதிர்பார்த்தார்.

ஆனால் ராம்கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

"இதற்காகப் பத்து வருடங்களை ஏன் வீணாக்கினீர்கள்? பத்து காசு கொடுத்தாலே உங்களை ஓடக்காரர் யமுனை ஆற்றைத் தாண்டிக் கொண்டு வந்து விட்டிருப்பாரே?"

சாதகர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

வாழ்க்கை என்பது குறுகிய காலம். அந்தக் குறுகிய காலத்தில் பிறருக்குப் பயன்படும் வழியில் செல்ல வேண்டுமே தவிர பிறர் பாராட்ட வேண்டும் என்கிற பாதையில் செல்லக் கூடாது. பிறரின் பாராட்டிற்காக பயனுடைய நம் வாழ்க்கையை இழந்து தவிக்கக் கூடாது.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-24                                                                                                                              வழிமுறை-26        

                                                                                                  

 
                                                                                                                                                                                                                 முகப்பு