........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-34

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

34. சாதுர்யமாகப் பேசுங்கள்.

இன்று பலரும் சாதுர்யமாகப் பேசுகிறார்கள். அவர்களின் பேச்சு அவர்களுக்கு லாபகரமானதாய் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இருக்கிறது. இன்று ஒருவரிடம் பேசும் போதே நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்கிற கண்ணோட்டத்தில்தான் பலரது பேச்சுக்கள் இருக்கின்றன. சிலர் பேச்சுக்கள் பிறரைக் கவரும் விதத்தில் இருப்பதுடன், அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வலிமையுடன் இருக்கிறது. ஆனால் இந்தப் பேச்சுக்கள் பிறரைக் கவர்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பேச்சால் பேசுபவர்கள் பயனடைகிறார்களே தவிர பிறருக்கு எந்தப் பயனும் இல்லை. இந்தப் பேச்சில் உண்மையுமிருப்பதில்லை.   இருப்பினும் சிலர் தங்கள் பேச்சு சாதுர்யத்தால் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதுடன் பிறரிடம் நல்ல பெயரையும் எடுத்து விடுகிறார்கள்.

இது போன்ற பேச்சுக்களால் பிறருக்குப் பிடிக்கும் வண்ணம் பேசி அவர்களை ஏமாற்றுவதுடன் நிற்காமல் அவர்கள் சென்ற பின்பு அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடம் குறை சொல்வதாகவும் தொடர்கிறது. தங்கள் செயலில் ஒரு குறை ஏற்பட்டால், அந்தக் குறையை மறைக்காமல், சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து அந்தத் தவறு அடுத்து நடைபெறாமல் கவனமாக இருப்பேன் என்று உறுதியளிப்பதற்காக சாதுர்யமாகப் பேசலாம். தவறில்லை.

ஜென்குரு இசக்கியா அவர்கள் சீடராக இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி.

ஒருமுறை அவர் தேநீர்க் கோப்பை ஒன்றைக் கையில் பிடித்தபடி வந்து கொண்டிருந்தார். அந்தக் கோப்பை அவர் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து பல துண்டுகளாக உடைந்து போனது.

இதை அறிந்தால் குரு கோபம் கொண்டு தன்னைத் தண்டிப்பாரே என்ன செய்வது என்று சிந்தித்தார் அவர்.

உடைந்த கோப்பைத் துண்டுகளை எடுத்து ஓரிடத்தில் வைத்தார். சிறிது நேரத்தில் அவரது குரு அங்கே வந்தார்.

குழப்பத்துடன் இருப்பது போல் அவரெதிரே போய் நின்றார்.

"உனக்கு என்ன குழப்பம்? எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேள்" என்றார் குரு.

"குருவே! மனிதர்கள் ஏன் சாகிறார்கள்? நிலையாக அவர்கள் இங்கேயே இருக்கக் கூடாதா?" என்று கேட்டார் இசக்கியா.

"இதுதானா உன் குழப்பம்? எந்தப் பொருள் தோன்றினாலும் அது அழிந்தே ஆகவேண்டும். இது இயற்கை விதி. இந்த விதியிலிருந்து யாராலும் தப்ப முடியாது." என்று விளக்கம் தந்தார் அவர்.

"குருவே! எனக்குப் புரியுமாறு விளக்கினீர்கள். நம் மடத்தில் உள்ள தேநீர்க் கோப்பைகளில் ஒன்று இறந்து விட்டது." என்ற இசக்கியா உடைந்த தேனீர்க் கோப்பைத் துண்டுகளை அவரிடம் காண்பித்தார்.

சீடரின் சாதுர்யமான பேச்சைக் கேட்டுச் சிரித்தார் குரு.

- இதுபோல் தங்கள் சாதுர்யமான பேச்சால், தங்களுடைய செயலில் ஏற்பட்ட பிழைகளை மறைக்காமல் சொல்லி விடுவது நல்லது. இனி அந்தத் தவறும், பிற தவறுகளும் வராமல் நம்மையும் நம் பெயரையும் காப்பாற்றும். அந்தத் தவறைத் தன் சாதுர்யமான பேச்சுக்களால் அடுத்தவர் மேல் போட்டுத் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது போன்ற தவறான வழியைப் பின்பற்றக் கூடாது. பின்னால் உண்மை தெரிய வரும் போது நலல பெய்ரை மட்டுமல்ல, உள்ள பெயரையும் இழந்து அவமானப்பட நேரிடும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-33                                                                                                                                    வழிமுறை-35                                                                                                    

 
                                                                                                                                                                                                                 முகப்பு