........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-43

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

43. பலனை முன்பே எதிர்பார்க்கலாமா?

தற்போதெல்லாம் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமென்றால் அதில் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பே பலரிடமும் இருக்கிறது. எந்த ஒரு செயலிலும் எதிர்பார்ப்புகளில்லாமல் எவரும் இறங்குவதில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு நபரின் செயல்பாடுகளும் தனிப்பட்ட  நோக்கத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பொதுநலம் என்கிற எண்ணமே அற்றுப் போய்விட்டது. தனக்கும் மீறினால் தன் குடும்பத்துக்கும் என்கிற எண்ணத்திலேயே பலரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் செய்லபாட்டிற்கு முடிவில் அவர்கள் எதிர்பார்த்த நல்ல பெயர் கிடைத்ததா? என்று தேடிப் பார்த்தால் முடிவு அவர்களுக்கு முற்றிலும் மாறுதலாக எதிர்வினையாகவே அமைந்திருக்கிறது.

இன்றைய வாழ்க்கையில் பணம் ஒன்றை மட்டுமே முக்கியத் தேவையாகக் கொண்டு தேடிக் கொண்டிருந்தவர்கள் அந்தப் பணத்தாலேயே அவமானப்பட வேண்டி வந்தது. அதுவும் அவர்கள் யாருக்காக அதைத் தேடினார்களோ அவர்களாலேயே அவதிப்பட வேண்டியதாகி விட்டது.

ஒரு முறை காந்தியடிகள் ஆசிரமத்தில் இருந்த போது ஒரு தாய் மகனுடன் வந்து காந்திஜியிடம், "இவனுக்குப் பகவத்கீதையைப் பற்றிக் கூற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

காந்திஜி அந்த இளைஞனை அழைத்து குவியலாகக் கிடந்த செங்கல் கற்களை அடுக்கி வைக்கச் சொன்னார். அவ்வாறே அடுக்கினான்.

மாலை நேரம் வந்தது. இளைஞன்ம் "அய்யா, பகவத்கீதை..." என்று கேட்க, "நாளைக்கு வா சொல்கிறேன்" என்றார்.

மறுநாளும் அதே போல செங்கல் குவியலை அடுக்கினான். இரவு வந்ததும் வீடு சென்றான்.

அடுத்த நாளும் எதுவும் பேசாமல் செங்கல் குவியலை அடுக்கிவிட்டு, "அய்யா நான் கேட்ட பகவத்கீதை..." என்று கேட்க அமைதியாகச் சொன்னார் காந்திஜி. "நான் பகவத்கீதையைக் கூறி முடித்து விட்டேன்."

அதிர்ந்து போன இளைஞன் ஆச்சர்யமாகக் காந்தியைப் பார்த்தான்.

"தன் கடமையை ஒழுங்காகச் செய்வதும் எவ்வித பலனையும் எதிர்பாராமல் செய்வதும்தான் கீதையின் சாரம். இது உனக்குப் புரிந்து விட்டது நீ போகலாம்" என்றார்.

எந்த ஒரு செயலையும் எதிர்பாராமல் செய்யும் போதுதான் அந்தச் செயலில் நாம் சிறந்த பலனை அடைய முடிகிறது. எதையாவது எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களில் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் அந்தச் செயலில் நம்மை அறியாமல் பல குறைபாடுகள் உருவாகி விடுகிறது. இந்தக் குறைபாடுகள் நாம் எதிர்பார்க்காத பல குறைகளை உருவாக்கி விடுகிறது. இந்தக் குறைகள் வராமல் நாம் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றியடையவும், நல்ல பெயரைப் பெறவும் எந்தப் பலனையும் முன்பே எதிர்பார்க்காத மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-42                                                                                                                              வழிமுறை-44 

 
                                                                                                                                                                                                                 முகப்பு