கவிதை: 236
தாராயோ...தாராயோ...!

பூவின் மீது வந்தமர்ந்து
தேனருந்தும் வண்டினமே !
தேனருந்தும் வேளையிலே
நீயுணரும் உணர்வுகளை
கவிதையாக்கித் தாராயோ !
வசந்தகாலச் சோலயிலே
இளங்காலை வேளையிலே
ஆலமரத்துக் கிளைகளிலே
அமர்ந்து பாடும் குயிலினமே
கூவும் அந்த ஓசைகளை
செந்தமிழின் வரிகளாலே
கவிதையாக்கித் தாராயோ !
மாலைவேளைப் பொழுதினிலே
மலரீந்த செடிகளை
மிருதுவாக வருடிச் செல்லும்
மெல்லினிய தென்றல் காற்றே
பச்சிலையின் பசுமை தன்னைப்
பைந்தமிழின் வரிகளாலே
கவிதையாக்கித் தாராயோ !
உழைத்துக் களைத்த அந்தப்
பகலென்னும் இனிய மங்கை
உடல்மூடிக் கண்ணுறங்க
இருளாடை போர்த்துகின்ற
இரவு என்னும் இனிய கருமையே
இனிக்குமெந்தன் தமிழ் வரிகளால்
உனக்குள் உணர்ந்த உணர்வுளை
கவிதையாக்கித் தாராயோ !
கொதிக்கும் தரையைக் கண்டு
உருகும் மேகம் பொழியும்
கண்ணீராம் மழைத்துளியே
உந்தன் அணைப்பில் குளிர்மை கண்டு
உனக்குள் தன்னைப் புதைக்கும்
மண்துகளின் ஆனந்தம் தனை
முதுபெரும் தமிழ்மொழியின் வரிகளினால்
கவிதையாக்கித் தாராயோ !
வானுக்கும் மேகத்திற்குமிடையே
ஒளித்து விளையாடும்
பால்சுரக்கும் முழுநிலவே
வனத்தின் மடியிலும், மேகத்தின்
அணைப்பிலும் அடங்கி நீ காணும்
மகிழ்ச்சிதனை என் உயிரினு மேலான
தாய்மொழி தமிழின் வரிகளில்
கவிதையாக்கித் தாராயோ !
எந்தன் ஒழிச் சிறப்புத்தனை
ஏழுலகும் நன்குணரும்
தமிழன்னை எழில்கண்டு
நானிலமும் காதல் கொள்ளும்
இத்தமிழ்த் தாயின் மகனாய்
எத்தனை முறை பிறந்தாலும்
எத்தகைய இடர்களையும் தாங்க என் மனம்
சித்தமானேன் அறிவீரோ ?
-சக்தி சக்திதாசன், லண்டன்.
|