கவிதை: 276
நதிகளை
இணைப்போம்...!

வெள்ளைப் புடவை,
திருநீர் அமர்ந்த
நடு நெற்றி,
குலுங்காத வளை,
கலையாத மெளனம்.
நீரின்றி இப்படியிருக்கும்
எந்த நிலமும்
காய்ந்த பயிறும்
ஒட்டிய வயிறுமாய்,
வரண்ட நதியும்
திரண்ட புழுதியுமாய்,
வெடித்த பாறைகளும்
தடித்த வரட்சியுமாய்...
பாரம்பரியம் பேணி
கலாசாரம் வளர்த்து
அமைத்தோம் நம்மைச்சுற்றி
ஓர் அரண்...
இடைவெளியின்றி நடப்பட்ட
மரக்கன்றுகள் வளர்ச்சி போல்,
வரட்சியின் மறுபக்கம்
வெள்ளமாய் ஏனிந்த முரண்...
பூமித்தாயின் குருதி
ஓடும் நாளங்கள்
அல்லவோ நதிகள்...
இயற்கை அன்னையின்
உயிர் சுமக்கும்
நரம்புகளல்லவோ நீர்நிலைகள்...
அவள் பசி தீர்க்கும் ஆகாரம்
இந்த நீர் ஆதாரம்...
ஐந்தறிவு காக்கைகள் கூட
இருக்கும் உணவை
பகிர்ந்துண்ணும் போது
இயற்கை அன்னை
மடிசுரக்கும் அமிர்தநீரை
அவள் பிள்ளைகள் நாமே
பகிர்ந்து கொள்ள
மறுப்பது சிறுபிள்ளைத்தனம்...
கட்டுக்குள் அடங்காத
நீரை எல்லைகளிட்டு
அடக்க முயல்வது
அறிவீனம்...
எவ்வித நிறமுமில்லாத
நீருக்கு அரசியல்
சாயம் பூசுவது ஈனம்...
நாட்டிற்கு பொதுவான
நீரை பகிர மறுப்பதும்
ஒரு வகையில் ஊனம்...
ஊர் கூடுவோம்
ஒன்றுபடுவோம்
பெருநிதி திரட்டுவோம்
நதிகளை இணைப்போம்
நாடெங்கிலும்
ஏர் பூட்டுவோம்
உழுது உரமிடுவோம்
பயிர் வளர்ப்போம்...
உண்டது போக எஞ்சியதை
ஏற்றுமதி செய்வோம்..!
வளர்ந்த நாடுகளின்
பட்டியலில் நாமும்
முதலிடம் பிடிப்போம்...!!
-ராம்ப்ரசாத்.
|
|