கவிதை:
580
கவிதை தேடி...?

இரவின் சுவர்களில்
வண்ணமின்றி -
எழுதப் படுகின்றன நம் கனவுகள்..
எவனோ ஒருவன்
வெறும் -
இருட்டென்று சொல்லிவிட்டுப் போகிறானதை..
-----------
ஆம்; நிறையப் பேர்
அப்படித் தான் இருக்கிறார்கள்,
நாம் எப்படி வேண்டாமென்று நினைக்கிறோமோ
அப்படி;
காரணம் நாமும் – அப்படியென்பதால்!!
-----------
நட்பினால் -
பெரிய தேச மாற்றம் எல்லாம் வேண்டாம்;
நம் அருகாமை நண்பனை
முதலில் காப்போம்;
அவனிலிருந்து துவங்கும் – நம்
தேசமாற்றம்!!
-----------
விடியலின் அலாதியில்
ஈரம் சேர்த்த கொடூரங்களால்
சமூகத்தை குற்றவாலியெனக் கூறி
தேடி அலைகிறது மனசு..
கள்ளச் சமூகம்;
மனசிடம் பிடிபடுவதே இல்லை!!
-----------
காலையில்
ஒரு பூ பூத்த மலர்ச்சியில்
கண்விழித்தாலும் -
கண்ணீராய் சொட்டுகிறது
வாழ்வின் அலங்கோலங்கள்..
-----------
நட்பினால் ஒரு
ஒற்றுமை சமுதாயத்தை பிறப்பிப்போம்.
ஒற்றுமை நமக்கு
விடுதலையின் தடத்தை
நிதர்சனமித்துக் காண்பிக்கும்..
-----------
மனிதரில்
நூறு வகை இருக்கட்டும்;
தமிழரில் -
ஒருவகை போதும்;
ஒற்றுமை சுவற்றின்
மேலே நிற்கும் ஒற்றை தமிழன்
அந்த -
நூறு வகை மனிதர்களுக்குச் சமம்!!
-----------
என்னதான் அவசரமென்று ஓடினாலும்
மனசு மட்டும் -
தனக்கான பல இதயங்களை
தூக்கிக் கொண்டு தான் ஓடுகிறது..
-----------
எதையோ -
எடுத்து வைத்துக் கொண்டு
ஏதோ ஒன்றினை தருவதில்;
பெறுவதில்;
எப்படியோ - நிறைந்தே விடுகிறோம்..
-----------
நம் வீட்டைச் சுற்றித் தான்
கிடக்கின்றன; கவிதைகள்;
எழுதுகோல்தான் பாவம்
எங்கெங்கோ அலைகிறது மனசுபோல
கவிதை தேடி!!
-வித்யாசாகர்
|
|