கவிதை: 679
மரபுக் கவிதை!

மறவாது எழுதுங்கள் மரபில் கவிதை - அது
மனமென்னும் நிலத்திலே போட்ட விதை
இறவாது எண்ணத்தில் கலந்தே விடும் - சொல்ல
எண்ணினால வந்துடன் கண்ணில் படும்
புறமாக அகமாக சங்கம் தொட்டே - புலவர்
புனைந்தது பத்தோடு தொகையும் எட்டே
அறமாக வந்தப்பின் நூல்கள் கூட - மரபு
வழியொற்றி வந்ததாம் பலரும் பாட
ஒருமுறை உள்ளத்தில் தோன்றி விட்டால் - நம்
உயிருள்ள வரையிலே நினவைத் தொட்டால்
வருமுறை மரபுக்கே உண்டு யொன்றே - கவிதை
வடிக்கின்ற அனைவரும் அறிந்த ஒன்றே
இருமுறை சொன்னாலே எதுகை மோனை - நெஞ்சில்
எடுத்ததை தந்திடும் கவிதைத் தேனை
திருமுறை எந்நாளும் மரபே ஆகும - இன்றேல்
தீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும்
இலக்கியம் கண்டேபின் இலக்கணம கண்டார் - பின்
எதற்காக அன்னவர் மரபினை விண்டார்
கலக்கமே மொழிதன்னில் வருதலும் வேண்டாம் - என
கருதியே மரபென வகுத்தனர் ஈண்டாம்
விளக்கமாய் அவரதை செல்லியும் உள்ளார் - அதன்
வீணென்று எண்ணிட எவருமே சொல்லார்
அளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே - அதை
அழியாமல் காப்பதும் நமக்குள்ள பொறுப்பே
மழைநாளில் தோன்றிடும் காளானைப் போல - உடன்
மறைவதா எண்ணுவீர் கவிதையும் சால
விழைவீரா அருள்கூர்ந்து கவிஞரும் நீரே - இதென்
வேண்டுகோள் மட்டுமே மாசில்லை வேறே
பிழையாக யாரையும் நானசொல்ல மாட்டேன் - வீண்
பிடிவாதம் பிடித்திங்கே கவிதீட்ட மாட்டேன்
அழையாத விருந்தாக ஏதோநா னில்லை - நெஞ்சின்
ஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை
-புலவர் சா. இராமாநுசம். சென்னை-24.
|