கவிதை: 724
விவேகானந்தருக்கு வணக்கம்!

தார்மீக சக்தியைக் கொண்டு
தரணியில் ஒரு புதுயுகம்
தந்துவிட ஜயா நீயும்
தந்து விட்டாய் உன் வாழ்வை
பாரெங்கும் பறந்து சென்று
பாரதத்தின் பெருமைகளை
பறைசாற்றி வந்தவன் நீ
பாதம் பணிந்தேன் நான்
விழித்துவிடு இளம் சமுதாயமே
வீணான பொழுதுகளை தவிர்த்து
வினையாற்ற வந்துவிடு தம்பி
வழியுண்டு பாரினில் என்றாயே
தாய்மையின் மகத்துவத்தை
தாய்நாடு உணர்ந்தவகை
தப்பாமல் எடுத்துரைத்து
தத்துவங்கள் நீ சொன்னாய்
எம்மை நாமாக உருவாக்கும் சக்தி
எமக்குள்ளே உறங்கிக் கிடக்கிறது
என்பதை உணர்ந்து நீங்கள்
எழுச்சி கொண்டு கடமை செய்க
நாமிருக்கும் நிலை இன்று
நாம் புரிந்த செயல்கள் தானே
நாளை உன் வாழ்வு சிறக்க
நல்லவைகளை இன்று செய்க
நயமிக்க உண்மைகளை
நமக்குரைத்த அருமை மனிதன்
மானிடத்தின் உச்சியிலே ஓர்
மகுடத்தை எந்தி வாழ்ந்தவன்
அன்பு கருணை பாசம் கொண்டு
அறவழியில் துணிந்து நின்று
கடமை செய்தால் காலம் உனக்கு
கனிந்து வரும் என்று சொன்னான்
நரேந்திரனாய் உலகில் அவதரித்து
ராமகிருஷ்ணர் சீடனாகி நம்மிடையே
விவேகமிக்க மனிதனாக விளங்கிய
விவேகனந்தரே உமைப் பணிந்தேன்
நேற்றைய சரித்திரத்தில் உறைந்து
இன்றைய மனிதருள் மலர்ந்து
நாளைய இளையோரிடம் புகுந்து
நானிலம் செழிக்கட்டும் உன் நினைவுகளால்
உன் பாதம் பணிந்தேன் விவேகானந்தா
உன் போல உறுதி கொண்டு வாழ
உள்ளத்தில் உரம் கொடுத்து
உணர்வுகளை வாழ வைப்பாய்!
-சக்தி சக்திதாசன், லண்டன்.
|