கவிதை: 745
பொறுத்துப் பார்த்தேன்!

பொறுத்துப் பார்த்தேன் முடியலே –
நான்
பொறுமை இழந்தேன் முடிவிலே
கருத்துச் சொன்னாக் கசக்குதா – அத
உறத்துச் சொன்னா உறைக்குதா?
உழைக்கச் சொன்னா முனகுறான் – பிறர்
உழைப்பில் வாழ முனைகிறான்
எடுத்துச் சொன்னா எதிர்க்கிறான் – தனைக்
கெடுத்துக் கொள்ளத் துடிக்கிறான் – மதி
மெத்த உண்டு – எனப்
பித்தங் கொண்டு – மன
சுத்தமின்றி நட மாடுகிறான் – அதப்
பொறுத்துப் பார்த்தேன் முடியலே – நான்
பொறுமை இழந்தேன் முடிவிலே
கருத்துச் சொன்னாக் கசக்குதா – அத
உறத்துச் சொன்னா உறைக்குதா?
தப்புக்கு வருந்த மறுக்குறான் – அவன்
ஒப்புக்குந் திருந்தா திருக்குறான்
உப்புக்கும் பொராம தருக்குறான் – வெறும்
உடம்பை வளர்த்து முறுக்குறான் – பயம்
ஏது மின்றி – தன்
மான மின்றி – வழி
மாறிச்சென்று சுகம் காணுகிறான் – அதப்
பொறுத்துப் பார்த்தேன் முடியலே – நான்
பொறுமை இழந்தேன் முடிவிலே
கருத்துச் சொன்னாக் கசக்குதா – அத
உறத்துச் சொன்னா உறைக்குதா?
போக்குச் சரியில்ல அதச்சொன்னா – அவன்
பொங்குறான் ‘அதனால் உனக்கென்னா
ஆச்சு’ண்ணு கேட்குறான் நமக்கென்னா – என
அலட்சியம் பண்ணாத அறிஞரெல்லாம் – அற
நூல்கள் தேடி – மன
நோயைச் சாடி – அறி
வூட்டினால் அரண் டோடுகிறான் – அதப்
பொறுத்துப் பார்த்தேன் முடியலே – நான்
பொறுமை இழந்தேன் முடிவிலே
கருத்துச் சொன்னாக் கசக்குதா – அத
உறத்துச் சொன்னா உறைக்குதா?
-அகரம் அமுதா,
சிங்கப்பூர்.
|