........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

குறுந்தகவல்-118

பேரவைத் தலைவர் “ஸ்பீக்கர்” ஆனது எப்படி?

பேரவைத் தலைவரை ஆங்கிலத்தில் அழைக்கும் "ஸ்பீக்கர்" என்கிற வார்த்தை எப்படி வந்தது? பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படவுடன் அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும், பேரவைத் தலைவரின் கரங்களைப் பிடித்து அழைத்துச் சென்று தலைவருக்கான இருக்கையில் அமர வைப்பது மரபாகும். இது சம்பிரதாயமாக நடைபெறுகின்ற ஒரு நடைமுறை. இந்தப் பழக்கம் எப்படி வந்தது?

நம்முடைய இந்திய ஜனநாயகம் என்பது பிரிட்டிஷ் ஜனநாயகத்தைப் பின்பற்றியே அமைக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் உள்ள நாடாளுமன்றம் எவ்வகையில் அமைக்கப்பட்டதோ அதே வகையில் அமைக்கப்பட்டது தான் இந்திய நாடாளுமன்றமும், இந்திய சட்டப் பேரவைகளும். அங்கே இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றம் வந்து விட்டது. அது மன்னராட்சி இருந்த காலம். சர்வ வல்லமை படைத்த மன்னரும் இருப்பார். நாடாளுமன்றமும் இருக்கும். இங்கே இந்தியாவில் அந்த முறையைப் பின்பற்றிய போது மன்னர் இல்லை. ஜனாதிபதி இருக்கிறார். நாடாளுமன்றம் இருக்கிறது.

அந்தக் காலத்தில் இங்கிலாந்து நாட்டில் மன்னர் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று விரும்புவார். அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மன்னருடைய விருப்பத்தை நிராகரித்து விடுவார்கள். இந்தச் செய்தியை யார் போய் மன்னரிடம் கூறுவது? அவர் தான் பேரவைத் தலைவர். அத்தகைய தலைவருக்கு நாடாளுமன்றத் தலைவர் என்று பெயரை வைக்காமல் ஸ்பீக்கர் என்று பெயர் வைத்தார்கள். நாடாளுமன்றத்தின் கருத்து என்னவோ அதைச் சென்று மன்னரிடம் எடுத்துக் கூறுபவர்தான் ஸ்பீக்கர். நாம்தான் இங்கே பேரவைத் தலைவர் என்று அழைக்கிறோமே தவிர, இன்று வரை அங்கே இங்கிலாந்தில் ஸ்பீக்கர் என்றுதான் அழைக்கிறார்கள்.

மன்னர் விரும்பிய செயலை நாடாளுமன்றம் நிராகரிக்கும் போது அந்தச் செய்தியை ஸ்பீக்கர் சென்று துணிச்சலுடன் மன்னரிடம் கூறும்போது என்ன நடக்கும்? சில காரியங்கள் செய்வதற்குத்தான் மன்னருக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர, அந்த ராஜ்யத்தில் உள்ள எந்தப் பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு. ஆகவே தான், விரும்பியது நடக்காது என்று ஸ்பீக்கர் எடுத்துரைப்பார். உடனே மன்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி உத்தரவிடுவார். தலையை வெட்டி எடுங்கள் என்று ஆணையிடுவார்.

இது பலமுறை நடந்தால் யாருமே அந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். ஆகவே, புதிதாக நாடாளுமன்றம் அமையும்போது, ஒரு ஸ்பீக்கரை தேர்ந்தெடுக்கும் போது இன்னார்தான் ஸ்பீக்கர் என்று அறிவித்தவுடன் அவர் உடனே தப்பித்தால் போதும், தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார்.அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை ஓட விடாமல் தடுத்து நிறுத்தி அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்து வந்த மரபு.

காலப்போக்கில் அதுமாறி இப்போது ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகு ஸ்பீக்கர் இப்போது ஓட்டம் பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஸ்பீக்கரின் தலையை எடுங்கள் என்று சொல்லக்கூடிய மன்னரும் இங்கே இல்லை. ஆனால், அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் பேரவைத் தலைவரின் கரங்களைப் பிடித்து ஆசனத்தில் அமர வைக்கும் மரபு மட்டும் அப்படியே இருக்கிறது.

-தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் தேர்வுக்குப்பின்பு முதல்வர் ஜெயலலிதா கூறிய வரலாற்றுத் தகவல்.

தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு