........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-18. மனிதன் விழித்துக் கொள்வானா?
-சந்தியா
கிரிதர், புது தில்லி.
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இந்தியக் கலாசாரம் இன்று
காற்றோடு பறந்து விட்டது. இன்றைய மனிதன் கலாசாரம் என்ற வார்த்தையில்லாத வாழ்க்கை
அகராதியை புரட்டிக் கொண்டிருக்கிறான். முன் காலத்தில் இருந்து வந்த கூட்டுக்
குடும்பம் காலப்போக்கில் குட்டிக் குடும்பமாக மாறி இன்று குடும்பம் என்ற
சொல்லிற்கு இருப்பிடம் உள்ளதா என்ற சந்தேகத்தோடு வாழ்க்கை ஓடுகிறது.
அந்நியர்களைக் கவர்ந்த இந்தியக் கலாசாரம் இன்று சிதைந்து காணப்படுகிறது.
முன்பு
குழந்தைகளுடைய பெயரோடு குடும்பத்தின் பெயரும் இணைத்துச் சொல்லப்பட்டு வந்தன.
அன்றைய கூட்டுக் குடும்பத்தில் பெரியோர்களின் ஆசியையும், உறவினர்களின் அன்பையும்
பெற்றுக் கொண்டு குழந்தைகள் வளர்ந்தார்கள். முன்பு குழந்தைகள் குடும்ப
கௌரவத்திற்கும், பெரியோர்களின் பெயருக்கும் பங்கம் வராமல் காப்பாற்றுவதில்
அதிகமாக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். அவர்களுடைய ஒழுக்கம் தவறாத நடத்தையும்,
விவேகமாகச் செயல்படும் திறனும் குடும்ப கௌரவத்தை உயர்த்தியது.
கூட்டுக்
குடும்பத்தில் பெரியோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் கழித்தார்கள்.
குடும்பத்தின் தூண்களாயிருந்த பெரியோர்கள் குழந்தைகளுக்கு நல்ல நீதிக் கதைகளைச்
சொல்லி வளர்த்தார்கள். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்தார்கள். இதனால்
அந்தக் குழந்தைகள் நல்ல குணங்களோடு வளர்ந்தன. அந்தக் காலத்துக் குடும்பம்
குழந்தைகளின் நற்குணங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்து வரும் சந்ததிகளை
அக்கறையுடன் வளர்த்தன. பெரியோர்களின் ஒவ்வொரு வாழ்க்கை அனுபவமும் கூட்டுக்
குடும்பத்திற்கு பாடப் புத்தகமாக அமைந்தது. அந்தக் காலத்துக் கிராமத்துக் குழந்தைகள் பட்டணத்திற்குப் படிக்கச் சென்றாலும் கிராமத்துப் பெயரை பழுதடையாமல்
காப்பாற்றுவதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டார்கள். தங்கள் சுயமரியாதைக்குக்
கெடுதல் வராமல் நடந்து கொண்டார்கள். பெரியவர்களின் வார்த்தையை மதித்து மரியாதை
கொடுத்து அந்தக் காலத்துக் குழந்தைகள் வாழ்க்கையை மனநிறைவோடு வாழ்ந்தார்கள்.
இம்மாதிரி பண்பாட்டை இன்றைய குடும்பத்தில் பார்க்க முடியுமா? நாகரீகம் என்ற
பெயரில் குடும்ப கௌரவமும், குடும்பத்தினரின் தன்மானமும் நசிந்து விட்டன. இன்றைய
குடும்பம் பணத்தின் மீது கொண்ட மோகத்தால் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அடியோடு
தொலைத்து விட்டது. போலியான வாழ்க்கையையும், வரட்டு கௌரவத்தையும் விரும்பும்
இன்றைய குடும்பம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தைச் சொல்லித் தரத் தவறி விட்டது.
இதனால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமிடையே நிலவி வரும் இடைவெளி விரிந்து
காணப்படுகிறது. பகட்டான வாழ்க்கைக்கு முதன்மை கொடுக்கும் பெற்றோர்கள்
குழந்தைகளின் வாழ்க்கையைச் சின்னா பின்னமாக்கி
வருகிறார்கள்.
பணமிதப்பிலே வளர்ந்து
உருவாகும் குழந்தைகள் தீய குணங்களுக்கு அடிமையாகிறார்கள். உறவுகளின் அருமையைப்
பற்றி தெரியாமல் வளரும் குழந்தைகளின் பிரச்சனை நடுக்கடலில் கப்பல் திசை
தெரியாமல் சிக்கித் தவிப்பது போலத் தோன்றுகிறது. பெரியவர்களைச் சுமையாக எண்ணும்
இன்றைய குடும்பச் சூழ்நிலை திக்குத் தெரியாத காட்டில் வழி தவறி நடப்பது போல காட்சி
கொடுக்கிறது. இதனைச் சற்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்றைய
சூழ்நிலையில் குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கையின் பரிமாணத்தை புரிய வைப்பது
மிகவும் அவசியமானது என்ற நிர்பந்தம் உருவாகியுள்ளது. இந்த தருணத்தைத் தட்டிக்
கழிக்காமல் உடனடியாக செயல்படுவதற்கு முயற்சி செய்வோம்.
இந்த நம்பிக்கையில்தான்
உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. காலத்தோடு நம்மை மாற்றிக் கொள்வது தேவையானது.
ஆனால் அந்த மாற்றத்தோடு அடிப்படையான கலாசாரத்தைத் தொலைத்து விட்டு வாழ்வது உகந்த
வழியில்லை என்று சொல்லலாம். இன்றைய
மனிதர்கள் பார்வை இருந்தும் கண்களை மூடிக்
கொண்டு வாழ்க்கையை வாழ்கிறார்கள். மனிதனின் அப்படிப்பட்ட வாழ்க்கை பெரிய
கேள்விக்குறியாகத் தோன்றுகிறது. சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது. விழித்துக்
கொண்டு தூங்கும் மனித
நேசத்தைத் தட்டி எழுப்பும் நேரமிது. இந்தத் தருணத்தை நழுவ விட்டால்
வருங்காலத்தில் எண்ண முடியாத விளைவுகளைச்
சந்திக்க நேரிடலாம்.
மனிதன் விழித்துக் கொள்வானா?
____________ |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.