........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

மனம் திறந்து-61

நல்ல நோக்கத்திற்காக எனினும்...?

                                                                                                -சந்தியா கிரிதர்.

அமைதியான மாலுக்குள் (Mall) நுழைந்து பொருள்களைப் பார்வையிடுகிறோம். தேவையான பொருள்களை கூடையில் போட்டுக் கொள்கிறோம். கீழே விழுந்த குண்டூசியின் ஓசை அவ்வளவு பெரியதாக கேட்கிறதென்றால் அந்த மாலுக்குள் அப்படியொரு அமைதி நிலவியிருப்பதை உணரலாம். இந்த அமைதியை அனுபவித்தபடியே வைத்திருக்கும் பொருள்களை பார்வையிடுகையில் திடீரென்று ஒரு கும்பல் அந்த மாலுக்குள் நுழைந்து ஓவேன்ற இரைச்சலோடு இசைக்கருவிகளை வாசித்தும், காதைக் கிழிக்கும் குரலில் பாட்டு பாடியும், பூமி அதிரும்படி ஆட்டத்தைப் போட்டுட்டு சட்டென்று மறைந்து விடுகிறது. அதிகாலை பொழுது, நிசப்தமான சூழ்நிலை, இயற்கையினுடைய அழகை ரசித்தபடி பூங்காவில் நடந்து கொண்டிருக்கிறோம். திடீரென்று ஒரு கூட்டம் பூங்காவில் நுழைந்து கசாமுசாவென்று சத்தம் போட்டுட்டு விலகிச் செல்லுகிறது. இந்தக் கூட்டம் எங்கிருந்து கிளம்புகிறது? அமைதியான சூழ்நிலையை எதற்காக அமைதியற்றதாக மாற்றுகிறது? இந்தக் கும்பலின் நோக்கமென்ன? போன்ற கேள்விகள் நமக்குள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. இத்தகைய சம்பவங்கள், முக்கியமாக பல பொது இடங்களில் அவ்வபோது நிகழ்ந்து வருகின்றன.

இந்தக் கும்பல் எதிர்பார்க்காத ஒரு சம்பவத்தை நிகழ்த்தியதோடு நம்மையும் குழப்பத்தில் மூழ்க வைத்துவிட்டு சட்டென்று மறைந்து விடுகிறது. மின்னலைப் போல தோன்றி மறையும் இந்தக் கூட்டம் பொதுமக்கள் கூடியுள்ள இடத்தில் நிலவுகிற அமைதியை குலைத்து சின்னாபின்னமாக்கி நொடிப்பொழுதில் கண்களை விட்டு விலகிச் செல்லுகிறது. கூட்டத்திலுள்ளவர்கள் ஒருவரையொருவர் அறியாதவர்கள், ஒருவருக்கொருவரோடு நெருங்கிய பழக்கமுமில்லை, நண்பர்களுமில்லை, மொத்தத்தில் அந்நியர்கள், இத்தகைய அமைப்பைக் கொண்ட கும்பலொன்று அவ்வப்போது தோன்றி மறைகிறது. அலைபேசி, இணையதளங்கள், முகநூல், டிவிட்டர் போன்றவைகளின் வழியாக தொடர்பு கொண்டு பொதுமக்களை குழப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு கும்பலொன்று புறப்பட்டிருக்கிறது. லட்சியம் நிறைவேறிய பிறகு பிரிந்து விடுகிறது, எதிர்பார்க்காத முறைகளைக் கையாண்டு, பொதுமக்களைப் பீதியிலும் வியப்பிலும் ஆழ்த்திவிட்டு கண்களை விட்டு சட்டென்று மறைந்து விடுகிறது. இந்த விஷயம் ஒரு கணம் யோசிக்க வேண்டிய விஷயமாகும். இந்தக் கும்பல் பொதுமக்கள் குழப்பமடைவதைப் பார்த்து சந்தோஷமடைகிறதென்று யூகிக்கலாம்.

இப்படித்தான் எகிப்து நாட்டில் வீதி முழுவதும் பொதுஜனங்களின் கூட்டம் அலை மோதியது, போராட்டம் நிகழ்ந்தது. அலைபேசி, முகநூல், டிவிட்டர் ஆகியவைகளின் வழியிலாக தொடர்பு கொண்டு ஒருமித்த நோக்கத்தோடு ஜனவரி 25ஆம் தேதி பொதுமக்கள் வீதியில் கூட்டமாகக்கூடி ஒரு மாபெரும் போராட்டத்தை நிகழ்த்தி தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட பின்பு மறைந்து விட்டார்கள். அவர்களுடைய போராட்டத்துக்கு டிவிட்டர் வழியாக மற்ற நாடுகளின் ஆதரவும் கிடைத்தது.

தகவல் தொடர்புத் துறை இத்தகைய முன்னேற்றத்தை அடைந்திருப்பது பெருமையாகத்தான் இருக்கிறது. எண்களுக்குள் அடங்கியுள்ள இந்த உலகத்தைப் பார்த்து நாம் வியப்படைகிறோம். முன்னேற்றம் எகிப்தைப் போல் ஏதாவது ஒரு நல்ல நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை சேதப்படுத்துவதற்காக பிரயோகப்படுத்துவது முறையான வழியல்ல. ஒரு முன்னேற்றம் பொதுமக்களுக்கு பயத்தைக் கொடுக்ககூடாது, பலனைக் கொடுக்க வேண்டும். இதை நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் செயல்படுவோம்.  

சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு