........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-7

            மனம் திறந்தார் பிரபஞ்சன்

                                                                                              - பாண்டித்துரை, சிங்கப்பூர்.

சிங்கப்பூர்க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தியா நாவலின் ஆசிரியர் பிரபஞ்சனுடன் 5 நாட்களுக்கான கலந்துரையாடலை சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி 07.07.2007 முதல் 09.07.2007 வரை ஜீராங் கிழக்கு நூலகப் பிரிவு அமோக்கியோ நூலகம் கவிச்சோலை மற்றும் யுனிசெம் யனிவெர்சிட்டி என்று நான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் பிரபஞ்சனின் மனம் திறந்த பேச்சுக்களை, என் நினைவின் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் இங்கு நிறைய பேச விரும்பவில்லை நான் பேச வேண்டும் என்றிருப்பின் அரசியல்வாதி ஆகியிருப்பேன். நான் எழுத்தாளன் உங்களை நிறைய பேச வைத்து நான் கேட்கவே ஆசை என்று வாசகர்களை மிகவும் நெருங்கி வந்து சந்தியா நாவல் பற்றியும், பின் எழுத்துலக ஆரம்பம் அதன் தொடர்சியான பயணம் என்று வாசகர்களின் பலதரபட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

 சந்தியா நாவல் எழுதிய தருணத்தில் அதற்காக கடுமையான வரவேற்பு, கடுமையான எதிர்ப்பு இரண்டையும் பெற்றதாகக் கூறி மேலை நாட்டு இலக்கியங்களையும் பகிர்ந்து கொண்டார். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து, பள்ளி முடிந்ததும் தினமும் கட்டாய திணிப்பாக நூலகம் செல்ல நேர்ந்து, பின் விசேச நாட்களில் தந்தையிடமிருந்து பெறும் புத்தகத்தைப் படித்து முடிந்ததுடன் அப்புத்தகம் பற்றி தந்தையிடம் பகிர்ந்து கொண்டதே பிரபஞ்சனை எழுத்துலகினுள் இழுத்து வந்த பேரலையாம்.

இவரது ஆரம்பம் கவிதை, பின் சிறுகதை என்று மாறி ஒரு கட்டத்தில் இவரது கவிதைகள் பிற கவிஞர்களின் கவிதையின் சாயலாக இருப்பதாகக் கருதி கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டு கவிஞர் மீரா அவர்கள் இவரது கவிதையைத் தொகுப்பாகக் கொண்டு வருவதையும் தடுத்து சிறுகதை உலகிற்குள் முழுவதுமாகப் பயணப்படத் தொடங்கியது. இன்று பல நாவல்கள் 300 சிறுகதைக்கும் மேல் எழுதியிருப்பினும் இதில் 10 சிறுகதைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றாலே எனக்கு போதுமான மன நிறைவு என்று வெளிப்படையாகப் பேசியது அனைவரையும் பிரபஞ்சன்பால் ஈர்க்கத் தொடங்கியிருக்கும்.

வானம்பாடி இயக்கம் ஆரம்பித்த தருணத்தில் அதில் தானும் ஒருவன் என்றும் அத்தருணத்தில் தான் மற்றும் அல்லாது உடனிருந்த எழுத்தாள நண்பர்களும் தங்களின் பெயரை மாற்றி வைத்துக் கொண்டது அப்படித்தான் பிரபஞ்சன், சிற்பி, ஞாநி தோன்றிய கதையை மீட்டெடுத்தார் . மரபை அறிந்து மரபை நாம் மீற வேண்டும் மேலும் மொழியில் மாற்றங்கள் வேண்டும் என்றார்.

2000 ம் ஆண்டு கால இலக்கிய உலகில் நன்னூலுக்குப் பின் இலக்கணம் மாற்றியமைக்கப் படவில்லை. இதுவும் தமிழ் இலக்கிய வளர்சிக்கு ஒரு தடை என்றார். மொழியை அறிஞர்கள் யாரும் தோற்றுவிக்க வில்லை சாதராணமான மக்கள் தோற்றிவித்தது. ஒரு இலக்கியத்தின் முக்கிய நோக்கம் மனிதனை மேலும் மனிதமாக மாற்றுவதாகும். இலக்கியத்தால் என்ன சாதிக்க முடியும்? என்றால் மனிதனை மேன்மைப் படுத்த முடியும் என்றார்.

 எழுத்தாளனுக்கு வாசிப்பு அவசியம் என்றும் எழுத்து என்பது ஒரு கலை அதை பழக்கப் படுத்த வேண்டும் எழுத்தாளன் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் விளையாடச் செல்வது போல் தன்னை குறிப்பிட்ட நேரத்தில் அமர்ந்து எழுதப் பழக்கிக் கொள்ள வேண்டும். மேலும் கவிஞர்கள் கவிதையோடு நின்று விடாமல் சிறுகதைகளையும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நேற்று நான் எழுதிய எனது கதைகளை நான் திரும்பவும் படிப்பதில்லை என்றார். அதற்குக் காரணம் அடுத்த புதிய கதை அவரை வந்து ஆக்கிரமிப்பது தானாம். கோணங்கி போன்றவர்களின் எழுத்துகள் புரியவில்லை என்ற போது எழுத்தாளன் என்பவன் புரியாத எதையும் எழுதுவதில்லை. வாசகரிடம் தான் புரிதல் தேவைப்படுகிறது. எழுத்தாளன் அடுத்த கட்ட நகர்வை தேடி சில மாற்றங்களை எதிர் பார்ப்பதால், வாசகன் வாசிக்க வாசிக்க புரிபடும், ஆக புரியவில்லை என்பது வாசகனின் தவறேயன்றி எழுத்தாளனின் தவறு இல்லை என்றும், மேலை நாட்டு இலக்கியம் போல் ஏன் தமிழில் தாக்கங்கள் நிறைந்த இலக்கியம் தோன்றவில்லை என்ற போது ஜரோப்பிய கண்டங்கள் சுக்கு நூறாக சிதறிய போது அங்கு ஒவ்வொரு வீடுகளிலும் துயரம் இருந்ததே காரணம் அத்தகு துயரத்தை நாம் காணாததும் நம்முடைய எழுத்துகளில் பல மேலை நாட்டு இலக்கிய சாயலை பிரதிபலிப்பதும் காரணம் என்றார்.

கவிதை பற்றிபேசும் போது எழுத்தாளர் நகுலன் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நகுலனை முதலில் படியுங்கள் என்றார். நவீனத்துவம் பின் நவீனத்துவம் பற்றி கேட்ட போது கவிதைககள் எப்படி வேண்டும் என்றாலும் இலக்கியத்தைச் சிதைத்துச் செல்லட்டும், ஆனால் அதனை இலக்கியத்திற்குள் அடக்க முடியும் என்று எழுத்தாளர்கள் ஞானக்கூத்தனையும் மனுஸ்ய புத்திரனையும் உதாரணப் படுத்தி பின் பெண்ணிய எமுத்தாளர்கள் குட்டி ரேவதி சுகிர்தாராணியின் கவிதைகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

பின் நண்பர் ஒருவர் குஸ்பு மூலமாக எழுந்த கற்பு பற்றிய கருத்தையும் சில்பா செட்டியின் முத்த விவகாரத்தை எழுத்தாளன் என்ற முறையில் ஆதரிக்கிறீர்களா என்ற போது நான் ஆதரிக்கிறேன் என்றார். அதனைத் தொடர்ந்து சிரிப்பலை எழுந்து அடங்கியது. குஸ்புவை உங்களின் சகோதரி ஸ்தானத்தில் வைத்துப் பாருங்கள். உடனே நீங்கள் நீதித் தராசைத் தூக்க வேண்டாம். குஸ்புவை சினமா நடிகையாக அங்கீகரித்தீர்கள் குஸ்பு நடித்த திரைப்படங்களை ஓடிப்போய் பார்க்கிறீர்கள் அப்படி இருக்கையில் குஸ்பு கற்பு பற்றி மட்டும் பேசக்கூடாதா? குஸ்புவுக்கு கற்பு பற்றி பேச உரிமையில்லை என்றால் அந்த உரிமை பிரபஞ்சனுக்கும் கிடையாது என்றார். குஸ்பு கற்பு பற்றி பேசியது ஒரு பத்திரிக்கை கணக்கெடுப்பின் அடிப்படையில் என்றார். தனிப்பட்ட ஒருவரை எப்படி நீங்கள் மற்றும் பத்திரிக்கைகள் தலையிடலாம் அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது .

மனுஸ்ய புத்திரன் சிங்கப்பூர் வந்த போது சுந்தர ராமசாமி, நகுலன் போன்றவரை கவிஞராக ஏற்றுக் கொள்வதாகவும் வைரமுத்துவை கவிஞராக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார். அது பற்றி உங்களின் கருத்து என்ன என்ற போது நானும் அவரை கவிஞராக ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். பிறரைப் படிப்பதால் அதன் பாதிப்பு எங்களின் எழுத்திலும் இருக்குமா என்ற போது, ஆமாம் ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும் பின் செல்ல செல்ல ஒரு கட்டத்தில் உங்களில் இருந்து உங்களின் சுயம் வெளிப்படும் என்றார். அவர் எழுதிய அகழியை நாடகத்தைப் பற்றி கூறி அந்நாடகம் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் அரங்கேற்றியதையும் அதனால் அவருக்கு கிடைத்த வரவேற்பையும் அழகியலுடன் பகிர்ந்து கொண்டார்.

பின் இனி அவரது எழுத்தில் வெளிவர இருக்கும் நாவல் பற்றியும் சிறுகதை தொகுப்பு பற்றியும் பகிர்ந்து கொண்டார். வாசகர்கள் அதிகமாக எதிர்பார்ப்பது அவரது தாத்தாவிற்கு பேரன் சொன்ன கதை எனும் சிறுகதை தொகுப்பைத்தான். டிசம்பர் மாதத்தில் வெளிவரும் வாய்ப்பு உள்ளதாக உறுதியளித்தார்.

மக்கள் தொலைக்காட்சியில் சிறந்த புத்தகங்கள் பற்றி அறிமுகப்படுத்தி வருவதாகவும் அப்படி சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் பின்சீட் சிறுகதை தொகுப்பை அறிமுகப்படுத்திய விபரத்தை தெரிவித்ததுடன் சிங்கப்பூரின் சிறுகதை பற்றியும் சிறுகதை எழுத்தாளர் பற்றியும் ஆர்வமாகக் கேட்டு அறிந்து கொண்டார். மொழியை ஒரு கருவியாக உபயோகிக்கக் கூடாதா என்ற போது மொழி உணர்வுப் பூர்வமானது என்று உணர்வுப் பூர்வமாக உணர்த்தியதோடுமில்லால் இப்படி நான் கூறுவதால் என்னை தமிழ் வெறியன் என்று அழைத்தாலும் நான் அதற்கு மகிழ்ச்சி அடைவேன் என்று புன்னகைத்தார்.

இலக்கியம் சார்ந்த உலகத் திரைப்படங்களை பகிர்ந்து கொண்டதுடன் நம்மால் பாரதியை முண்டாசு மற்றும் கோட் ஆகியவற்றை கழட்டி வைத்து உறங்காமல் திரையில் காட்ட முடியவில்லை என்று தமிழ் சினிமா போக்கு பற்றியும் பகிர்ந்து கொண்டார். எழுத்தாளன் அவனது எண்ணங்களை எங்களின் மேல் திணிப்பதாகவே உணர்கிறோம் என்ற போது எழுத்தாளன் அவன் பார்ப்பதைத்தான் உங்களுக்கு தருகிறான். உங்களைக் கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற யாரும் கட்டாயப் படுத்தவில்லை என்றார். உங்களுக்கு வேண்டியது என்னிடமிருந்நதால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் என்னைத் தூக்கி எறிந்து விடுங்கள் அதற்காக நான் வருந்துவது கிடையாது என்றார்.

பிரபஞ்சனுக்கு ஒரு வெள்ளைப் பேப்பர், ஒரு வெளிநாட்டுப் பேனா, சர்க்கரை இல்லாத காப்பி இந்த மூன்றுமிருந்தால் அவரது வாழ்க்கைக்கு போதுமானதாம். மேலும் மரணத்திற்கு பயப்படுகிறார். இனி அவர் வெல்லவேண்டியது மரணத்தைதானாம்! பிரபஞ்சனின் வருகையில் பெண்ணியம் சார்ந்த பேச்சுகள் அதிகமாக பதியபட்டதால் பல்வேறு அலைகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும். பெண்ணியம் என்று தனித்துப் பார்க்காமல் மனிதமாக பார்க்க முயற்சித்து புரிந்துணர்வு பாதையில் பயணப்பட்டால் பிரபஞ்சன் கருத்தும் நியாயமானதாய்த் தோன்றும்.

இந்நேரத்தில் சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கும் சிறப்பான முறையில் நிகழ்வுகளை நட்த்திச்சென்ற அதன் அதிகாரிகளான திரு. மணியம் திருமதி புஷ்பலதா மற்றும் சக நூலக அதிகாரிகளுக்கும் வந்திருந்து நிகழ்வை சிறப்பித்த எழுத்தாளர்கள் வாசகர்களுக்கும் எல்லாவற்றின் மேலாக எழுத்தாளர் திரு பிரபஞ்சனுக்கும் என் சார்பிலும் எனது நண்பர்கள் சார்பிலும் என் நன்றியை பதிவு செய்கிறேன
்.

___________

பாண்டித்துரை அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.