........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
|
a |
பொன்மொழிகள் பொதுவாழ்வில் ஒழுக்கக் கேடானவர்களை...?
எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது, நம்
நாட்டில் பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவது போன்று அவ்வளவு கடினமான கரியமாய்
இருக்கிறது. கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து
கிடக்கும் மக்களை உயர்த்தும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும்
மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி
எடுத்துக் கொள்ள வேண்டும். படிப்பு எதற்கு? அறிவுக்கு, அறிவு எதற்கு? மனிதன்
மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் -
நாணயமாய் வாழ்வதற்கு. முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க
வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல் தான் பாடம்.
ஒரு சமூகமென்றிருந்தால் அச்சமூகத்தில்
ஏழைகளில்லாமலும், மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வதுதான்
சரியான சமூகச் சீர்திருத்த வேலையாகும்.
எந்தக் காரியம் எப்படி இருந்தாலும்
அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால
தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில்
உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
நாடு, மொழி, கடவுள், மதம், சாதி என்று
எந்தப் பற்றுமின்றி, மானுடப் பற்றுடன் அறிவைக் கொண்டு தங்குதடையின்றி சிந்தித்துச்
செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.
மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித
சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது,
பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே
ஆகும்.
பணம் உள்ளவனும் பணம் இல்லாதவனும் உலகத்தில்
இருக்கும்வரை லஞ்சம், பிச்சை முதலானவைகள் ஒழியவே ஒழியாது.
மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும்
அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த
கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும்,
தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்.
கூட்டுறவு வாழ்க்கை பிறருக்கு நாம் எவ்வாறு
சகாயம் செய்வது, எவ்வாறு உதவி செய்வது என்பதை இலட்சியமாகக் கொண்டதே
ஆகும்.
கடவுளுக்கு நன்றி செலுத்தும் முறையிலும்
இன்னும் மேன்மேலும் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக விண்ணப்பம் போட்டு,
லஞ்சம் செலுத்தும் முறையிலும் செல்வத்தைப் பாழாக்குகிறார்கள். இதன் பயனாகவே,
இந்த நாட்டில் ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் பாழாவதைப்
பார்க்கலாம்.
மணமக்கள், உயிர் நண்பர்கள் ஒருவருக்கொருவர்
பழகும் முறையைப் போல் நடந்துகொள்ள வேண்டும். எதிலும்
தான் கணவன் என்ற ஆணவத்தை மணமகன் கொள்ளக் கூடாது.
மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள் - அடுப்பூதுவதற்கு என்றே வந்தவள் என்ற
எண்ணமில்லாது பழக வேண்டும்.
நல்ல குடும்பம் எனப்படுவது வரவுக்கு மிஞ்சிச்
செவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கைக்குச் செலவை வரவுக்கு உள்பட்டே
அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பந்தான் கண்ணியமான குடும்பம்.
மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல்
பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை
வந்தது.
இலக்கியம் என்பது நாகரீகத்தை புகுத்த
வேண்டும். மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும்.
பொதுவாழ்வின் பெயரால் ஒழுக்கக் கோடாக,
லஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒருநாளும் விட்டு
வைக்கக் கூடாது.
மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக்
கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கும் அருகதையுள்ள ஓர் உயிர் என்று
மதிப்பதில்லை.
-ஈ.வே.ராமசாமிப் பெரியார். |
முகப்பு |