........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-12

பக்கம்- 200     விலை-ரூ 80.00

 

 அம்மா அப்பா ஆகணுமா? 

-டாக்டர் டி.காமராஜ்-

- டாக்டர் கே.எஸ்.ஜெயராணி-

எழுத்து வடிவம்: ஆர்.ப்ரியா

 கிழக்கு பதிப்பகம்
- நலம் வெளியீடு -
(Nalam , An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601, 42009603, 42009604
தொலைநகல் : 044-43009701.

பார்வை :

திருமணமான தம்பதிகளுக்கு வரும் முதல் ஆசை தங்களுக்கென்று குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், தாங்களும் அம்மா -அப்பா ஆகணும் என்பதாகத்தானிருக்கும். அந்தக் காலத்தில் அதிகக் குழந்தை பெற்றவர்கள் சிறந்த தம்பதியர்களாகத் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டார்கள். "தாய்க்குத் தலைமகன், தந்தைக்கு இளைய மகன்" என்று வழக்கு மொழி ஒன்று சொல்லப்படுவது உண்டு. இதற்கு மறைந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் ஒரு அருமையான விளக்கம் கூடச் சொல்லியிருக்கிறார்.

அதாவது, ஒரு தாய்க்கு முதல் குழந்தை பிறந்தவுடன் அந்தத் தாய் மகிழ்ந்து போகிறாள். ஏனென்றால் அந்த முதல் குழந்தை பிறந்ததால்தான் அவளுக்கு "மலடி" என்கிற அவப்பெயர் வராமல் போனது. எனவே அந்தத் தாய்க்கு அதன் பின்பு எத்தனை குழந்தை பிறந்தாலும் மற்ற குழந்தைகளை விட முதல் குழந்தை மீது அதிக அன்பு இருக்கும். தந்தைக்கு கடைசிக் குழந்தை மீதுதான் அதிக அன்பு ஏற்படுகிறது. ஏனெனில் வயதாகிக் கொண்டேயிருந்தாலும் தன் ஆண்மையைக் கடைசிவரை தொடர்ந்து நிரூபித்துப் பிறந்தது அந்தக் குழந்தைதான்.

 

இப்படி குழந்தைகள் பெறுவது தாய் தந்தைக்கு மகிழ்ச்சிக்குரியதாகவும், அவர்களை ஆண்-பெண் என்று உறுதிப்படுத்தி விட்டதாகவும், அவர்களுடைய சந்ததித் தொடர் நிகழ்ந்து விட்டதாகவும் நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு குழந்தைப் பேறு தொடர்கதையாக இருந்த காலம் இப்போது காணாமல் போய் விட்டது. இப்போதெல்லாம் "ஆண் ஒன்று, பெண் ஒன்று" என இரண்டாக இருந்தது கூட மாறி விட்டது. "ஆணோ, பெண்ணோ குழந்தை ஒன்றே போதும்" என்று ஒன்றோடு நிறுத்திக் கொள்ளும் வழக்கம் வந்து விட்டது.

இந்த ஒரு குழந்தை கூட இல்லாமல் ஒரு சில தம்பதியர்கள் "தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்காதா?" என்கிற மன வேதனையுடன், "தங்களுக்கு ஏதாவது குறை இருந்து விடுமோ, நம்முடைய இந்த வாழ்க்கை இத்துடன் கலைந்து போய் விடுமோ...!" என்கிற அச்சத்தில் ஒருவருக்கொருவர் அறிவியல் அடிப்படையிலான மருத்துவ முறைகளை நாடாமல், மூட நம்பிக்கையிலான மற்ற முறைகளில் பணத்தையும், காலத்தையும் வீணாக்கி விட்டு கடைசியில், "நாம் ஒருவருக்கொருவர் குழந்தை" என்கிற நிலையில் முடங்கிப் போய் விடுகிறார்கள்.

இந்த முடக்கம் தேவையற்றது. அம்மா- அப்பா ஆகணும் என்கிற ஆசை முடக்கப்படக் கூடாது. "அம்மா- அப்பா ஆகணுமா?" என்று டாக்டர் டி.காமராஜ் மற்றும் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி இருவரும் சேர்ந்து ஆர்.ப்ரியாவின் எழுத்து மூலம் குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.

ஆண்-பெண் இருவருக்கும் இனப்பெருக்க உறுப்புகள் எப்படி செயல்படுகின்றன. இருவரும் உடலால் இணைவதால் அப்போதைய இன்பம் மட்டுமில்லை, வாழ்க்கை முழுவதும் இன்பமடையச் செய்யும் அவர்களது குழந்தை உருவாவதற்கான வாய்ப்புகள், குழந்தை பிறப்பு போன்ற அறிவியல் உண்மைகள் விளக்கப்படுகின்றன. குழந்தை பிறக்காமல் இருப்பதற்கான குறைபாடுகள் எவை? அந்தக் குறைபாடுகளில்  ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னென்ன குறைபாடுகள் இருக்கக் கூடும்?. இந்தக் குறைபாடுகளைப் போக்க தற்போது மருத்துவத்தில் எவ்வளவு வசதிகள் உள்ளது என்றும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

மருத்துவர்களுக்கு மட்டுமே தெரிந்த மகப்பேறு குறித்த மகத்தான விஷயங்கள் சாதாரணமாக படிக்கத் தெரிந்த அனைவருமே புரிந்து கொள்ளும் வகையில் நூலாக்கப் பட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகத்தின் நலம் வெளியிட்டுள்ள இந்த "அம்மா-அப்பா ஆகணுமா?" நூலை புதிதாகத் திருமணம் செய்து கொள்ளும் இளம் உள்ளங்களுக்கு திருமணப்பரிசாக அளிக்கலாம். இது அவர்களுக்கிடையே ஒரு குழந்தை குறித்த அறிவியல் பூர்வமான புரிதலை துவக்கத்திலேயே ஏற்படுத்தும்.

 

-தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.