........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-2

பக்கம்- 256      விலைரூ 75.00

 

 

மனப்பதிவுகள்

-சி.கே.சந்திரமோகன்-

மதி நிலையம்,
பிருந்தாவன் அபார்ட்மெண்ட்ஸ்,
4(39), தணிகாசலம் சாலை,
தி.நகர்,
சென்னை-600 017.

பார்வை :

தன் மருத்துவப் பணிகளுக்கிடையே தோன்றும் கருத்துக்களைக் குறித்து வைத்து, நேரம் கிடைக்கும் போது அதை கவிதைகளாக்கி விடுவதாகக் குறிப்பிடுகிறார் இந்த மனப்பதிவுகள் நூலாசிரியர் சி.கே.சந்திரமோகன்


 " மனதைத் தொடும்
எல்லாமே
கவிதைதான் "


-என்று புதிய விளக்கத்துடன் பல புதுக்கவிதைகளைப் படைத்திருக்கிறார்.


 "ஆனையும்
சிங்கமும்
புலியும் கூட
மனிதனின் ஆணைக்கு
அடங்கிப் போகும்...
அடங்க மறுப்பதோ
மனக்குரங்கு
மட்டும்"


-என்று மனிதனின் மனம் ஆசை எனும் வேகத்தில் அடங்காமல் மேலும் மேலும்... தவறு என்று தெரிந்தாலும் தாவிக் கொண்டேயிருப்பதால் அடங்காத ஆசையைக் குரங்காக்கி விட்டிருக்கிறார்.


"பெண் பார்த்த கையோடு
கல்யாணம்
முதலிரவு முடிந்த
எட்டாம் நாள்
பிழைப்புக்காக
துபாய் பயணம்
கழுத்தில் தாலியையும்
நெஞ்சில் நினைவுகளையும்
சுமந்தபடி
வீட்டில் மனைவி"


-என்று வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகளுக்கு பெண் கொடுப்பதை "விதி" எனும் தலைப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது விதியல்ல பெற்றோர்களின் பேராசையால் பிள்ளைகளுக்குச் செய்த சதி.


"எல்லாமே முளைக்காது
எனத் தெரிந்தும்
நம்பிக்கையோடு
விதைக்கிறான்
விவசாயி"


-என்று ஒரு கவிதையில் விவசாயின் நம்பிக்கையைத் தெரிவிக்கிறார். எவ்வளவு முளைக்கும் என்பது அவனுக்குத் தெரியும், அந்தத் தொழிலில் அவனுக்கு நம்பிக்கை மட்டுமல்ல, அனுபவமும் இருக்கிறது.


"தினம் தினம்
கிழித்தெறிகிறோம்.
காலண்டரில்
ஒரு தாளும்
நம் ஆயுளில்
ஒரு நாளும்"


-என்று நம் வாழ்க்கையை காலண்டருடன் ஒப்பிடுகிறார். ஒவ்வொரு நாளும் காலண்டரில் கிழிக்கப்படும் போது இன்று நாம் என்ன செய்யப் போகிறோம்... என்பதை ஒவ்வொருவரும் நாளும் உணர்ந்தால் நல்லது. அவர்கள் வாழ்வில் தவறுகள் ஏதும் வராது.


"மெதுவாகத்தான் என்றாலும்
நத்தையின் பயணம்
தொடங்கி விட்டது
அதன் இலக்கு நோக்கி..."


-என்று ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு மெதுவாகப் பயணித்தாலும் அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைவது உறுதி என்று ஊக்குவிக்கிறார்.


"ஒரு விதையின்
வேண்டுகோள்:
அலுத்து விட்டது
அடங்கிக் கிடந்து
முளைக்க வேண்டும்
புதையுங்கள்
பூமிக்குள்! "


-என்று இளைஞர்கள் மனதில் முடங்கிக் கிடக்கும் சோம்பலை விடுவித்து அவர்களுக்குள் நம்பிக்கை விதையை விதைக்கிறார்.


" பக்தனின் கண்கள்
அர்ச்சனைத் தட்டில்
குருக்களின் கண்களோ
காணிக்கைத் துட்டில் "


-என்று சிலரின் எதிர்பார்ப்புகளையும் நக்கலாகத் தெரிவிக்கிறார்.

 

சின்னச் சின்ன புதுக்கவிதைகளைக் கொண்ட இந்த "மனப்பதிவுகள்" நூலுக்கு கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரை அளித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
                         

    -தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.